PUBLISHED ON : செப் 03, 2023

''இந்தாடீ பாக்கியம்... நல்ல வேலக்காரிய சேத்துவுட்ட, சரியான நிமுத்தல் பிடிச்சவளா இருப்பாளோ... மதியம் வரைக்கும் இருந்துட்டு, அரவம் தெரியாம போயிட்டாளே... நமக்கு அடக்கமா ஒருத்திய கூட்டியானா, தரமில்லாதவள நொழைக்கப் பாத்தியே... வேறவள பாரு,'' என்றாள், அந்த பெரிய வீட்டம்மாள்.
தலைச்சுமையுடன், முதல் வியாபாரமே விரலை நண்டு கடித்த, மன வலியில் இருந்த பாக்கியத்துக்கு, இந்த குத்தல் தேவையா என தோன்ற, பதில் சொல்லாமல் நடையை வேகப்படுத்தினாள்.
இத்தனை ஆண்டு அனுபவத்தில், இன்று தான் அசல் விலைக்கே எடைப் போட்டுள்ளாள், பாக்கியம்.
'கவர்மென்ட் உத்தியோகம் பாத்தவரு, சொந்த இடத்துல ஏரியா முகப்புல பங்களா கட்டிட்டாரு, ஏக வசதியுடன் தான் வாழ்க்கை. என்ன பிரயோசனம்... வயித்துப் பிழைப்புக்கு தினமும் நாயா பேயா அலைஞ்சி, மீன் விக்கிறவகிட்ட அடித்தட்டா பேரம் பேசி சாதிச்சு புட்டாளே, அவரோட பொண்டாட்டி...
'விலை கட்டாதுன்னு சொல்லியிருக்கலாம்... பொசுக்குன்னு முறச்சி, வீட்டுக்குள்ள போய் கதவ சாத்திக்கிருவா. அப்பறம், இந்த பெரிய அலுமினிய மீன் சட்டிய துாக்கிவிட ஆள் தேடுறதுலயே பாதி நேரம் கடந்திடும்; அதான் சம்மதிச்சு, நிறுத்து தந்துட்டு வந்தா...
'இந்தம்மா தன்னோட பங்குக்கு, கூப்பிட்டு வெச்சு, காதுல ஊத்துறாங்க. இந்தக் காலத்துல உதவ நெனக்கிறதே தப்பா போயிரும் போல...' என, உள்ளுக்குள் புலம்பியபடி, அடுத்த தெருவுக்குள் நுழைந்து, 'மீனு மீனு... கடல் மீனு...' என சத்தமிட்டு நடந்தாள், பாக்கியம்.
பெரிய வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்ட மல்லிகா, ஏன் வேலைக்கு சேர்ந்த நாளே கிளம்பி போனாள் என்ற நினைப்பே, அவளை சுற்றி சுற்றி வந்தது.
'மல்லிகா, பெயருக்கு ஏத்தாப்புல நல்ல மனுஷி தான். ஒரு வகையில் துாரத்து சொந்தம். ஜெயந்திபுரத்திற்கு மீன் வியாபாரத்துக்கு போகும் போதெல்லாம், வீட்டுல இருந்தாள்ன்னா, கடுங்காபி தராமல் விட மாட்டாள். இவ்வளவு பிரியமா இருக்காளேன்னு, கழிவு மீனக் கொடுத்தாலும் வாங்க மாட்டாள். மீறி மல்லுக்கட்டி தந்தால், சிரித்தபடி, பாதி பணத்தையாவது சட்டியில வைச்சுடுவாள்.
'வாரத்துல நாலு, அஞ்சி நாள் பெயின்டிங் வேலைக்குப் போற கணவன் கொண்டு வரும் சம்பளம், மூணு புள்ளைகளை வளர்க்கவே பற்றாத நிலையில் தான், 'யக்கா... உங்களுக்குத் தான் நிறைய வீடு பழக்கமாச்சே... எங்கேயாவது வேலைக்கு சேத்து விடுக்கா. குடும்ப தேவைக்கு பயன்படும்'ன்னு கேட்டாள், மல்லிகா.
'பார்க்கும் நேரமெல்லாம் அவளது இந்த நச்சரிப்பு தாங்காமலும், வாழ்க்கையில சோடை இல்லாம இருக்கணும்ன்னு யோசிக்கிற அவளோட அக்கறைக்கும் தான், உதவும் மனப்பான்மையில் அந்த பெரிய வீட்டில் சேர்த்து விட்டேன்.
'போன வாரம் முழுவதும் வில்லாபுரம், மீனாட்சிபுரம் ஏரியா போயிட்டதால, விபரம் எதுவும் தெரியாமப் போச்சு. ச்சே... இனி எதிர்ப்படும் போதெல்லாம் அந்தம்மா துளைச்சு எடுக்குமே...' என யோசித்தபடி, நடந்து கொண்டிருந்தாள், பாக்கியம்.
''ஏ பாக்கியம்... என்ன மீனு வெச்சுருக்க?'' அடுக்குமாடி, இரண்டாவது குடியிருப்பு பெண்மணி கூப்பிட்டாள்.
''நீங்க வாங்கற மீன் இருக்கு; 'லிப்டு' வேல செய்தாம்மா?'' என்ற பாக்கியத்தின் கேள்விக்கு, ''அதெல்லாம் செய்யுது, வா ஆத்தா...'' என அழைத்தான், செக்யூரிட்டி.
'அப்பாடா... காலுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு...' என எண்ணியபடி, 'லிப்டில்' ஏறிச் சென்றாள், பாக்கியம்.
மீன் ப்ரஷ்ஷாக இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரர்களும் வாங்கி விட, ஒரு கிலோவுக்கும் குறைவாகவே மிச்ச மீன் கிடந்தது. செக்யூரிட்டியிடம் நேரம் கேட்டாள், மணி, 12:30 என்றான்.
அடித்துக் கொள்ளும் மனசோடு, குழம்பிக் கிடக்கும் யோசனைகளுடன், வீட்டுக்கு திரும்பப் போக, பாக்கியத்திற்கு மனம் வரவில்லை. கூடவே மல்லிகாவின் ஞாபகம் வர, சரி அவள பாத்து, இந்த மீன கொடுத்துட்டு, விபரத்தையும் தெரிஞ்சிட்டு வரலாம் என, நினைத்துக் கொண்டிருக்கையில், அருகில், மருந்துக்கடையில் தன் பையனுடன் நின்றிருந்தாள், மல்லிகா.
''மல்லிகா...'' என்று உரக்க கூப்பிட்டாள். திரும்பிப் பார்த்த மல்லிகாவும், ''அக்கா...'' என்று வந்தாள்.
பொதுவான விசாரிப்புகளுக்குப் பின், ''என்ன மல்லிகா, அந்த பெரிய வீட்டு வேலை பிடிக்கலயா?'' என்றாள், பாக்கியம்.
''பையனுக்கு காய்ச்சல்; நாலு நாளா ஆஸ்பத்திரிக்கு அலஞ்சதால, உங்கள பாக்க வரலக்கா... இன்னிக்கு சாய்ந்திரம் உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நெனச்சிருந்தேன். இங்கேயே சந்திச்சிட்டேன்,'' என்றாள்.
''இப்ப தேவலையா? ரொம்ப சோர்ந்து போயி இருக்கானே...'' என்றவள், பையனை தன்னோடு சேர்த்து அணைத்தபடி, 'சரி சொல்லு' என்பது போல் ஏறிட்டாள், பாக்கியம்.
''நீங்க விபரம் கூறி விட்டுட்டுப் போனீங்க. அந்த பெரியம்மா சொன்ன வேலையெல்லாம் சுத்தமா செஞ்சி முடிச்சேன். 'பரவாயில்லையே நல்லாத்தான் செய்ற... சரி... அந்த, 'ஸ்டோர் ரூம்'புல உட்கார்ந்துரு. 1:00 மணிக்கு, எங்க வீட்டுக்காரர் சாப்பிட வருவார். சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு சொல்லிட்டு சேத்துக்கிறேன்'ன்னு, சொல்லிட்டு போனவங்க, ரொம்ப நேரமா வரவே இல்லை. திடீர்ன்னு கூப்பிட்டாங்க, போனேன்.
''நடு ஹால்ல அவங்க வீட்டுக்காரர் உட்கார்ந்திருந்தார். 'பேர் மல்லிகாங்க; தெளிவா வேல செய்றா... நம்பிக்கைக்கு ஏத்தவளான்னு பொருள வச்சி சோதிச்சும் பார்த்தாச்சு. தங்கமானவ, பணத்தையும், அந்த தங்க ஜிமிக்கியை பாத்தும், எதார்த்தமா திரும்பிக்கிட்டா. இவளே வேலைக்கு இருக்கட்டும்'ன்னு அந்தம்மா, தன் வீட்டுகாருட்ட பெருமையா சொன்னாங்க.
''எனக்கு ஒரு நிமிஷம் கை, கால் ஆடிப் போயிருச்சு. இப்படியும் மனுஷங்க நடந்துக்குவாங்களா? என்னோட நேர்மைய தெரிஞ்சுக்க, இவ்வளவு கீழ்தரத்துக்கு போயிட்டாங்களேன்னு நெனச்சு, ஒடஞ்சு போயிட்டேங்க்கா.
''என்னோட நேர்மைய சோதிச்சதை என்னால ஏத்துக்க முடியல. அவங்களோட சந்தேக புத்தி மாறும்ன்னு, எனக்கு தோணல. பின்னால ஒருநாள் ஏதாவது ஒரு பொருள் காணாம போனா, என்னை சந்தேகப்பட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...
''அத யோசிச்ச அடுத்த நிமிஷமே, நிக்கிற இடம் நெருப்பா சுட ஆரம்பிச்சுருச்சு. நாலு வார்த்தை நறுக்கா பேசிட்டு வரலாம்ன்னு தான் நினைச்சேன். சேத்துவிட்ட உங்களுக்கு, கெட்ட பேர் வேணாம்ன்னு தான் அமைதியா வந்துட்டேன். வேல வேணுங்கறதுக்காக நம்ம தன்மானத்த விட்டுத்தர முடியுமா?'' என்றாள், மல்லிகா.
''இம்புட்டு கத ஓடியிருக்கா... ஏதோ வந்தா, போனாங்கற மாதிரியே அந்தம்மா கடுப்புக் காட்னாங்க. இரு அடுத்தவாட்டி வச்சுக்கறேன்,'' என, கோபமாக கூறினாள், பாக்கியம்.
''அதெல்லாம் வேண்டாங்க, அவுங்க அவுங்க செயல் அவங்களையே சேந்துட்டுப் போகட்டும். வேற வீடுகள்ல விசாரிச்சி சொல்லுங்க, நம்ம பொழப்புக்கு வழிய தேடுவோம்,'' என்றாள், மல்லிகா.
இவர்கள் பேச்சை, அந்த குடியிருப்பின் மேல் தளத்தில் குடியிருக்கும் வயதான தம்பதி கேட்டுக் கொண்டிருந்தனர். மல்லிகாவின் வார்த்தைகளும், செயலும், அவர்களிடம் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்த, 'அந்த பொண்ணுக்கு ஏதாவது உதவி செய்யணுமே...' என்ற எண்ணம் எழுந்தது.
''சரிக்கா நேரமாகுது கிளம்பறேன்,'' என்ற மல்லிகாவிடம், மிஞ்சிய மீனை துணி பையில் போட்டு பாக்கியம் நீட்ட, அங்கே வந்து நின்றனர், அந்த தம்பதியர்.
''ஏழ்மையா இருந்தாலும், தன்மானத்தோட இவ இருக்கா. இந்த பொண்ணு வாழ்க்கையில் வளமாகணும்ன்னு வாழ்த்துறேம்மா,'' என்ற அந்த முதியவரின் மனப்பூர்வமான வார்த்தைகளை தொடர்ந்து, 'அய்யா நீங்க...' என்றனர், மல்லிகாவும், பாக்கியமும்.
''மேல் தளத்துல ரெண்டாவது வீடு தான் எங்களோடது. பொண்ணு ஈரோடிலேயும், பையன் கோவையிலேயும் இருக்காங்க. நாங்க இங்க தனியா இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் பேசியதை கேட்டேன்.
''உன்ன மாதிரி, நியாயஸ்த்திய வீட்ல வச்சிக்க, ஒரு கொடுப்பனை வேணும். எங்களுக்கும் உன்னை மாதிரி ஒரு துணை தேவை தான். இதோ பார் மீன்காரம்மா... முழு நேரத்துக்கு, எங்க வீட்ல வேல கிடையாது; இந்த பொண்ண வரச் சொல்லு, வேலயப் பாக்கட்டும், நியாயமான சம்பளம் தந்துடறோம்.
''இவளின் வேலையைப் பார்த்து, அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவன்னு சின்ன சின்ன வேலைக்கு கூப்பிடுவாங்க. அதுலேயும், நல்ல வருமானம் வரும். சம்மதம்ன்னா ஒன்னாந் தேதி மல்லிகாவ எங்க வீட்டுக்கு வரச் சொல்லுமா,'' என்றார், பெரியவர்.
''மல்லிகா, உனக்காக நான் என்னத்த வேல தேடுறது. உனக்கு வேல, வழியல வந்து இழுக்குதுல... சந்தோஷமா போ. அய்யா ரொம்ப நன்றி. இந்த உதவிய மறக்கவே மாட்டோம். நீங்க போங்கையா... சொன்ன தேதிக்கு, கண்டிப்பா வந்துருவா. என்ன... மல்லிகா போயிருவ இல்ல?'' என்றாள், பாக்கியம்.
முகத்தில் மகிழ்ச்சி மிளிர, ''சரிக்கா,'' என்றாள் சந்தோஷமாக, மல்லிகா!
ஆர். சம்பத்பெருமாள்
