PUBLISHED ON : செப் 17, 2023

* கே. ராசாத்தியாளன், பெருந்துறை: பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில், 'இண்டியா' கூட்டணி முண்டியடிக்கப் போகிறது தானே!
கூட்டணியில் உள்ள, 90 சதவீதத்தினர், பிரதமர் மற்றும் துணை பிரதமர் பதவி மீது, கண் வைத்துள்ளனர். அடுத்து, டில்லியில் நடக்க உள்ள, 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில், இது, வெட்ட வெளிச்சம் ஆகும் என, எதிர்பார்க்கலாம்!
ப. ராஜன், மதுரை: ஒரே நாடு, ஒரே தேர்தல் நம் நாட்டில் சாத்தியமா?
சாத்தியம் தான்... இதனால் பயனடையப் போவது, அரசியல் கட்சிகளே. ஓட்டுக்கு இரண்டு முறை பண பட்டுவாடா செய்ய விடாமல் செய்து விடுமே!
க. லிசி, சாத்தான்குளம்: 'ஜெயிலர்' படம் பார்த்தீர்களா, மணி?
சினிமா தியேட்டர் பக்கம் போய், பல ஆண்டுகள் ஆகின்றன. 'டிவி'யிலும் சினிமா பார்ப்பதில்லை. கடைசியாக ஒரு படம், பெயர் நினைவில் இல்லை; லென்ஸ் மாமாவுடன் பார்த்தேன். படத்தில் பாட்டு வரும்போது, அவர், 'ரெஸ்ட் ரூம்' சென்று விடுவார்... 'வெண்குழல் வத்தி'க்காக!
க. கதிரேசன், சென்னை: 'காங்கிரசுக்கு வாக்கு அளித்தால், ஏழைகள் பயன் பெறுவர்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகிறாரே... சாத்தியமா?
இவரது குடும்பமே பிரதமர் பதவியில் இருந்துள்ளது. அப்போது எல்லாம் ஏழைகள் பயன் பெற்று உள்ளனரா? இவர் என்ன தான், 'டுபாக்கூர்' விட்டாலும், வரும் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து, ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை!
* அ. கணேசன், சென்னை: 'நேற்று, இன்று, நாளை பார்த்து நட...' என்று, என் பாட்டி சொல்கிறாரே... இதன் அர்த்தம் என்ன?
நேற்று என்பது, உடைந்து போன மண் பானையை ஒட்ட வைக்க முடியாதது போன்றதாகும்... நாளை, மதில் மேல் பூனை போன்றது... வலமா, இடமா என்பதை நிர்ணயிக்க முடியாதது. இன்று என்பது, கையில் கிடைத்திருக்கும் வீணை போன்றது... மீட்டுங்கள் அனுபவியுங்கள்!
ச. முசோலினி, பரம்பிக்குளம்: 'சனாதனத்தை ஒழிப்போம்...' என்று பேசிய, உதயநிதியின் மீது, வட மாநிலங்களில் பலர், வழக்கு பதிகின்றனரே...
அவர், தான் அப்படி பேசவில்லை என, பின்வாங்கி விட்டாரே. அவரது தந்தையும், 'பிரதமர் விபரம் இல்லாமல் பேசுகிறார்...' என்று, சொல்லி விட்டாரே... எல்லாவற்றையும், நீதிமன்றம் முடிவு செய்யும்!
