PUBLISHED ON : நவ 05, 2023

மல்லிகா அன்பழகன், சென்னை: ஆயுத பூஜையன்று, அலுவலக விடுமுறை என்பதால், எந்த நாளிதழும் அடுத்த நாள் வெளி வராதே... இந்த ஆண்டு, 'தினமலர்' மட்டும் வெளியானது எப்படி?
வாசகர்களின் செய்தி அறியும் ஆவலை நிறைவேற்றத் தான், 'தினமலர்' நாளிதழ், ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் வெளியானது!
* ஆர். சுப்பு, திருத்தங்கல்: 'கழிவு நீர் அகற்றும்போது, உயிரிழப்போரின் குடும்பத்திற்கு, அரசு, 30 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்...' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே...
வரவேற்கப்பட வேண்டிய உத்தரவு தான். கள்ளச் சாராயம் குடித்து உயிரிழப்போரின் குடும்பத்திற்கே, 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசு, இவர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் என்ன, அதற்கு மேலும் வழங்கலாம்!
க. பாலகிருஷ்ணன், சுரண்டை: 'மாவட்ட தலைவர்கள், தினமும், பத்திரிகைகள் படிக்க வேண்டும்...' என்ற, முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல், மிகவும் பாராட்டுக்குரியது தானே?
ஸ்டாலினின் அறிவுறுத்தல் வரவேற்கப்பட வேண்டியது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, தினமும் காலையில் எழுந்ததும், முதலில், 'தினமலர்' நாளிதழ் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதில் வெளியாகும் செய்திகளை படித்து, உடனடியாக, மக்கள் குறைகளை தீர்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதையே தான் பின்பற்ற சொல்கிறார், ஸ்டாலின்!
* பா. ஜெயக்குமார், வந்தவாசி: 'நீட்' தேர்வுக்கு எதிராக, தி.மு.க., நடத்தும், கையெழுத்து இயக்கத்தால் வெற்றி கிடைக்குமா?
ஒரு நாளும் வெற்றி கிடைக்கப் போவதில்லை என்பது, அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும், தங்கள் ஊழல் ஆட்சி பற்றி மக்கள் பேசாதிருக்க, தி.மு.க.,வினர் போடும் நாடகமிது!
லெ.நா. சிவக்குமார், சென்னை: நல்ல சிறுகதை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அது எப்படி இருக்க வேண்டும்?
படிப்பவர்களின் மனதில் ஆழ பதிவதாக, அவர்கள் மீண்டும் நினைத்து பார்க்கும் அளவுக்கு, கதையின் முடிவு அமைய வேண்டும். மேலும், ஒரு சிறுகதையில், மூன்று, நான்கு, 'கேரக்டர்'களுக்கு மேல் சேர்க்கக் கூடாது!
ஆர். குணசேகரன், சென்னை: உ.பா.,வில், 'பெரிய மடக்கு' தான், என் பழக்கம். 'சின்ன மடக்கு தான் நல்லது...' என்கிறான், என் நண்பன். எது நல்லது என்று, லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லுங்களேன். 'ப்ளீஸ்!'
'இரவில், சீக்கிரமாக வீடு சென்று, மனைவியிடம் திட்டு வாங்க நினைப்பவர்களே, 'பெரிய மடக்கு' அடிக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள், 'சின்ன மடக்கு' அடித்துக் கொள்ளலாம்...' என்கிறார், லென்ஸ் மாமா.
எஸ். ரமேஷ், மதுரை: அழகு என்று எதையெதை சொல்லலாம்?
இரண்டு அழகுகளைச் சொல்லலாம். அழகான முகம் அனைவரையும் வசீகரிக்கும்; அடுத்து, அழகான மனம். இது, அனைவரையும் வணங்க வைக்கும்!
