PUBLISHED ON : நவ 12, 2023

க. லதா, கலிங்கப்பட்டி: வைகோ எப்படி இருக்கிறார்?
சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில், வைகோவைப் பார்த்த என் நண்பர் கூறுகிறார்: 'அவருக்கு, வயதாகி விட்டது. கை, கால்கள் நடுங்குகின்றன. மற்றவர் பேசுவதையும் கேட்க காதுகள் உதவுவதில்லை. மதுரை செல்ல இருந்தவர், விமான நிலைய அறிவிப்பில், கேரளா செல்ல விமானம் தயார் என்பதை கேட்டு, மதுரை செல்லும் விமான அழைப்பு என்று நினைத்து, கிளம்பினார். நான் தான், அவரிடம் விபரத்தைக் கூறி, 'வெயிட்' செய்ய வைத்தேன்...' என்றார்.
* க. சுசீலா, சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடையாத பெண்கள், தி.மு.க., ஆதரவு குறைய துவங்கி விட்டதாக கூறுகின்றனரே...
உண்மை தான்... தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகம். இவர்கள் தங்கள், தி.மு.க.,வின் எதிர்ப்பை வரும், லோக்சபா தேர்தலில் காண்பிப்பர்... பொறுத்திருந்து பார்ப்போம்!
ஆர். பாரதி, திருச்சி: நான் நன்மைகளையே செய்ய வேண்டும் என, நினைக்கிறேன்...
நல்லது தான்... நாம் நன்மை செய்தால், நமக்கு மட்டுமல்ல, நம் சந்ததிக்கே நன்மை கிடைக்கும். தீமை செய்தால், செய்கிறவனை மட்டுமல்ல, அவன் சந்ததியையே பாழாக்கி விடும்!
எஸ். குமார், மதுரை: வெற்றியுடன் வாழ, என்ன செய்ய வேண்டும்?
உங்களை நீங்களே நம்ப துவங்க வேண்டும். அப்படி செய்து விட்டால், நீங்கள், இந்த உலகில் வெற்றியுடன் வாழக் கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்று பொருள்!
டி. யாஷினி, திருப்பூர்: தமிழக அரசு, கவர்னர் மீது உச்சநீதி மன்றத்தில், வழக்கு தொடுத்துள்ளதே...
'லோக்சபா தேர்தல் முடியும் வரை, கவர்னரை மாற்ற வேண்டாம்...' என, மத்திய அரசுக்கு, முதல்வர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு, வழக்கு தொடர்ந்துள்ளது. ஒருவேளை, கவர்னரை மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், ரவியை விட, கடுமையானவரை, மத்திய அரசு நியமித்தால், இவர்களின் பாடு என்னாகுமோ என்று, யோசித்து பாருங்கள்!
மு. சிவா, சிவகாசி: என் நண்பன் ஒருவன், திடீரென்று, இப்போதெல்லாம் என்னை புகழ்ந்து பேசுகிறானே...
உங்களை இதுவரை பாராட்டாத ஒருவர், திடீரென்று புகழ்ந்து பேசினால், உங்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறார் என்றே கொள்ள வேண்டும்!
* எஸ். குமார், சென்னை: நான் என்ன செய்தால் எனக்கு நன்மை பயக்கும்?
பேசும் முன் கேளுங்கள்; எழுதும் முன் யோசியுங்கள்; செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்; முதலீடு செய்யும் முன் விசாரியுங்கள்; குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்; ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்; உயிர் உள்ளவரை தர்மம் செய்யுங்கள்... நன்மை பயக்கும்!
