தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த இதழில், மிக நீண்ட சப்ஜெக்ட்களுக்குப் பதில், சின்னச் சின்ன விஷயங்களாகப் பார்ப்போமா?

ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் கரியப்பா கூறுகிறார்:

இந்திய ராணுவத்தின் தரை படைத் தலைவனாக இருந்தபோது, ஒரு தமிழ் சோல்ஜரிடம், தமிழிலேயே பேச விரும்பினேன். அவனது தாய்மொழியிலேயே பேசினால் மகிழ்வானே என்று ஒரு ஆசை.

'உனக்கு சாப்பாடு எல்லாம் சரியாகக் கிடைக்கிறதா?' என்ற கேள்வியை, கஷ்டப்பட்டு தமிழில் கேட்டேன். முதலில் முழித்தான்; பதில் இல்லை.

இரண்டாவது தடவையும் அதே கேள்வியைக் கேட்டேன்; அப்போதும் பதில் இல்லை.

மூன்றாவது தடவையாக கோபமாக அதட்டிக் கேட்டேன்.

உடனே, அவன் மிகவும் பணிவுடன், 'எனக்கு ஆங்கிலம் தெரியாது...' என்றான்.

நான் பேசிய தமிழ், அந்த அழகில் இருந்திருக்கிறது.

மயிலின் அகவலில் ஸட்ஜமும் (ஸ)

காளையின் ஹூங்காரத்தில் ரிஷபமும் (ரி)

ஆட்டின் குரலில் காந்தாரமும் (க)

கொக்கினது சப்தத்தில் மத்தியமும் (ம)

குயிலின் குரலில் பஞ்சமமும் (ப)

குதிரையின் கனைப்பில் தைவதமும் (த)

யானையின் பிளிறளில் நிஷாதமும் (நி)

ஆகியவற்றிலிருந்து தோன்றியது தான், 'ஸரிகமபதநி!' என்றார் குப்பண்ணா. சரிதானா என, 'வெரி பை' செய்ய தோதான ஆள் கிடைக்கவில்லை.

புனே நகரில், மாநாடு ஒன்று நடந்தது; விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் கலந்து கொண்டார். அதில், மத்திய அமைச்சர் ஒருவர் பேசும்போது, 'இந்த நாட்டில் இனிமேல் எவரையும் பட்டினியாலோ, பசியாலோ இறக்கவிட மாட்டோம்...' என்று முழங்கினார்.

அவருக்கு பின் பேசிய டாக்டர் ஒருவர், 'இனி நாங்கள் நோயாலோ, நொடியாலோ எவரையும் இறக்க விட மாட்டோம்...' என்று கர்ஜித்தார்.

அடுத்துப் பேச எழுந்த சி.வி.ராமன், 'அமைச்சர், எவரையும் பசி, பட்டினியால் சாக விட மாட்டோம் என்கிறார்; டாக்டரோ யாரையும் நோயால் சாக விட மாட்டோம் என்கிறார். இவர்கள் இப்படிச் செய்து விட்டால், பிறகு நாம் எப்படித்தான் சாவதாம்?' எனக் கேட்டதும், 'குபீர்' என, சிரிப்பலை எழுந்தது.

சென்னை ஐகோர்ட் வாசலில் கேட்டது:

வக்கீல்: நான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லணும்.

கட்சிக்காரர்: சரிங்க.

வக்கீல்: மறக்கக் கூடாது.

கட்சிக்காரர்: சரிங்க.

வக்கீல்: மறந்து போனால் என்ன செய்வே?

கட்சிக்காரர்: நீங்கதான் கோர்ட்டிலே இருப்பீங்களே... கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்.

கோர்ட்டுக்கு உள்ளே எட்டிப் பார்த்தபோது...

ஜட்ஜ்: அப்போ, மூன்று வருஷத்துக்குப் பிறகு, நேற்று நீ, உன் கணவனை சந்தித்தாயாக்கும்?

பெண்: ஆமாங்க.

ஜட்ஜ்: அவன் என்ன சொன்னான்?

பெண் : நரகத்துக்கு தொலைஞ்சு போன்னு சொன்னாருங்க.

ஜட்ஜ் : நீ என்ன பண்ணினே?

பெண் : உடனே உங்ககிட்டே வந்தேன்ங்க!

- 'மணி... நீ எதுக்கு கோர்ட் பக்கம் போனே?' என்று மட்டும் கேட்காதீங்க...

குப்பண்ணா ஒரு கதை சொன்னார்:

சர்தார்ஜி ஒருவர் கடைக்கு வந்து, 'ஹாட் பேக்கில் வைக்கப்படும் உணவுப் பொருள் எவ்வளவு நேரம் சூடாக இருக்கும்?' என்று கேட்டார். கடைக்காரர், 'ஆறு மணி நேரம் சூடாக இருக்கும்...' என்றார்.

சர்தார்ஜி கடை முழுவதும் அலசி, ஒரே அளவுள்ள நான்கு, 'ஹாட் பேக்'குகளை தேர்வு செய்து, பில் போடச் சொன்னார். பில் போட்டு பணத்தை வாங்கி, கல்லாவில் போட்டுக் கொண்ட கடைக்காரருக்கு, சந்தேகம் எழுந்தது, சர்தார்ஜி எதற்காக ஒரே மாதிரி நான்கு, 'ஹாட் பேக்'குகளை வாங்குகிறார் என்று தெரிந்து கொள்ளாவிட்டால், பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. தாங்க முடியாமல் கேட்டே விட்டார்.

சர்தார்ஜி பொறுமையாகக் கூறினார்... 'பையா... நான் ட்ரெயின்லே ட்வென்டி போர் ஹவர்ஸ் டிராவல் பண்ணப் போகுது. வீட்டிலேயே சூடா கானா (சாப்பாடு) தயார் செய்து, ஒரு ஹாட் பேக்ல போட்டுக்குவேன். தென், ஒவ்வொரு சிக்ஸ் ஹவர்சுக்கும் அதை ஒவ்வொரு ஹாட்பேக்ல மாத்திருவேன். ஸோ... ட்வென்டிபோர் ஹவர்சும் கானா சூடாவே இருக்கும். எப்படி என் ஐடியா?'

கேள்வி கேட்ட கடைக்காரர், தலையை பிய்த்துக் கொள்ளத் துவங்கினார். அதே வேலையை என்னையும் செய்ய வைத்து விட்டார் குப்பண்ணா.

குப்பண்ணாவும், நானும் பஸ் ஸ்டாப்பில் அரை மணி நேரமாக நின்றோம்; நாங்கள் போக வேண்டிய இடத்திற்கான பஸ் வரவில்லை.

'சாமி... தருமம் போடுங்க...' என்று ஒரு பிச்சைக்காரன், குப்பண்ணாவிடம் திருவோடை நீட்டினான்.

'என்னது... இப்போது தானே கால்மணி நேரத்துக்கு முன்னால் ஒரு ரூபாய் கொடுத்தேன்...' என்றார் குப்பண்ணா.

'ஹூம்... பழைய கதை பேசிப் பேசி தான் நம்ம சமுதாயமே கெட்டுப் போச்சு...' என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றான் பிச்சைக்காரன்.

குப்பண்ணாவுக்கு முகம், குங்ஞா முங்ஞா என்று ஆயிற்று!

ஒரு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வி:

அப்பாவின் வயது? (உயிருடனிருந்தால்)

வந்த பதில்: 120 வயது (உயிருடனிருந்தால்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us