தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!

எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!

எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!


PUBLISHED ON : டிச 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச., 24, எம்ஜிஆர்., நினைவு நாள்

எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!

சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று...

ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள்.

'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது.

இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.

உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.

அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.

எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.

பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.

இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!

எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

எஸ்.ஆர்.சாந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us