PUBLISHED ON : டிச 21, 2014

பதவி உயர்வும், சந்தேகப் புத்தியும்!
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் தோழி, பதவி உயர்வு கிடைத்ததிலிருந்து மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தாள். இது குறித்து அவளிடம் கேட்ட போது, 'என் கணவர், வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில், எனக்கு கிடைத்துள்ள பதவி உயர்வு, அவருக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்டது. இதனால், அவர், என்னுடன் சரிவர முகம் கொடுத்து பேசுவதில்லை. அத்துடன், என் பதவி உயர்வை மட்டம் தட்டி பேசுவதுடன், 'மேலதிகாரிகளுக்கு பல்லைக்காட்டி, படுக்கை விரித்து, பெற்றிருப்பே...' என்று நாகூசாமல் பேசுகிறார்...' என்று கூறி, கதறி அழுதாள்.
அப்போதைக்கு, ஆறுதல் சொல்லி, சமதானப்படுத்தினாலும், மனம் பதறியது எனக்கு. ஆணோ, பெண்ணோ பதவி உயர்வு பெறுவதற்கு, பணிபுரியும் திறன், பழகும் தன்மை, அவசர நேரங்களில் சரியான முடிவெடுத்தல், குறித்த நேரத்தில் வேலையை முடிப்பது, இவைகள்தான் காரணமாய் இருக்க முடியுமே தவிர, பெண் என்றால், எதையும் பேசி விடுவது ஆணாதிக்க கணவர்களுக்கு அழகல்ல.
தன்னை விட உயர்ந்து, ஜெயித்திருக்கும் ஒரு பெண், தனக்கு மனைவியாக கிடைத்திருப்பதை பாக்கியமாக கருதுவதை விட்டுவிட்டு, சந்தேகப்படும் குணம் எதற்கு? யோசிப்பீர்களா ஆண்களே!
— பி.சுபானு, காரைக்குடி.
விவசாயத்தை அழிக்கும் உ.பா., பிரியர்கள்!
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் என் நண்பர், நகரத்தை ஒட்டியுள்ள அவருக்கு சொந்தமான வயலில் விவசாயமும் செய்து வந்தார். சமீபத்தில், அங்கு உட்கார்ந்து மது அருந்திய சிலர், காலி பாட்டில்களை உடைத்து வயலில் போட்டிருக்கின்றனர். விவசாய வேலைக்காக வயலில் இறங்கிய நண்பரின் பாதத்தை உடைந்த கண்ணாடி துண்டுகள் பதம் பார்த்து விடவே, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.
அவரை நலம் விசாரிக்க சென்ற போது, 'மழையின்மை, உரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பிரச்னைகளைக் கூட சமாளித்து, இதுவரை விவசாயம் பார்த்து விட்டேன். ஆனால், இப்போதெல்லாம் வயல்வெளியில் அமர்ந்து, மது அருந்துபவர்கள், பாட்டில்களை அப்படியே போட்டாலும் பரவாயில்லை; உடைத்துப் போட்டு விடுகின்றனர். இதனால், இதுவரை பலமுறை என் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
'இப்படி தொடர்ந்து நடக்கும் போது என் உயிருக்கோ அல்லது உடலுக்கோ ஆபத்து ஏற்பட்டால், என் குடும்பத்தினர் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். அதனால், நான் விவசாயத்தை விட்டு விடப் போகிறேன்...' என்று வருத்தத்துடன் கூறினார். உ.பா., பிரியர்கள் தம்மையும், குடும்பத்தையும் அழித்துக் கொள்வதோடு, விவசாயிகளுக்கும் புது முறையில் வேட்டு வைக்கின்றனரே என்று வேதனையாக இருந்தது. இதைப்படிக்கும் சிலராவது திருந்துவரா!
— க.சரவணன், திருவாரூர்.
மனதில் பதிந்த அன்பளிப்பு!
என் அம்மா யார் வீட்டுக்கு சென்றாலும், அந்தந்த வயதினருக்கு ஏற்ற அன்பளிப்பை வாங்கிச் செல்வார். பொதுவாக பூ, பழம் என்று வாங்கிச் செல்லாமல், சிறு குழந்தைகளை பார்க்க சென்றால், பொம்மைகள், வளர்ந்த பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள் என்று, வாங்கிச் செல்வார்.
'இப்படி மெனக்கெடல் தேவையா...' என்று நான் கூட நினைப்பேன்.
அன்று தூரத்து உறவினர்களான, 60 வயதைக் கடந்த தாத்தா, பாட்டியைப் பார்க்க சென்றோம். அவர்களுக்கு, குறுக்கு எழுத்துப் போட்டி புத்தகத்தைக் கொடுத்த அம்மா, '50 - 60 வயசுக்கு மேல், ஞாபக மறதி வரும்ன்னு சொல்றாங்க; உங்க ஓய்வு நேரத்துல போட்டு பாருங்க, மூளை சோர்வடையாம இருக்கும். வயசானவங்க இந்த மாதிரி, குறுக்கெழுத்து எல்லாம் போட்டா ஞாபகமறதி வராம இருக்கும்ன்னு எங்க குடும்ப டாக்டர் சொன்னாரு...' என்றார்.
அந்த முதியவர்கள், முகத்தில் தெரிந்த ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே... நம் மேல் அக்கறை காட்டக் கூடியவர்களுக்கும் இருக்கின்றனரே என்ற நிம்மதி தெரிந்தது. நாம் என்னதான், பணம் பணம் என்று அடித்துக் கொண்டாலும், மனித மனம் எப்போதும் எதிர்பார்ப்பது, இந்த அன்பிற்குத்தான்.
தற்போது நானும், என் அம்மா வழியைப் பின்பற்றத் துவங்கி விட்டேன். நீங்களும் கடைபிடித்துத் தான் பாருங்களேன்!
— ஆர்.அம்பிகா, மதுரை.
