
சென்னையில் இருந்து புறப்பட்டு, ராணிப்பேட்டை தாண்டி, சித்தூரை கடந்து, பெங்களூரு நோக்கி விரைந்து கொண்டிருந்தோம் நானும், லென்ஸ் மாமாவும். உடன், இரு நண்பர்கள்.
வெளிமாநிலத்தை சேர்ந்த மனநோயாளி ஒருவர், சாலை ஓரத்தில் அமர்ந்து, சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்து, இந்தியில் ஏதேதோ பேசியபடி இருந்தார்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் எப்படி தமிழ்நாட்டிற்குள் வந்தனர். மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இம்மாதிரியான நோயாளிகளுக்கு, எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கின்றனர் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சியில், மனநோயாளிகளை எப்படி, 'ட்ரீட்' செய்தனர் என்பது குறித்து எப்போதோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
வேறு எந்த இனக்கலப்பும் இல்லாமல், சுத்தமான ஆரிய ரத்தத்தை உருவாக்க எண்ணினான் ஹிட்லர்.
ஹிட்லரது காலத்தில், ஜெர்மானிய ரத்தத்துடன், இஸ்ரேலிய ரத்தக் கலப்படம் அதிகம் இருந்தது.
அதனால், ஜெர்மானியர்கள், இஸ்ரேலியருடன் திருமண உறவு கொள்வதற்கு தடை விதித்ததுடன், ஜெர்மனியில் வாழ்ந்த இஸ்ரேலியர்களையும் கொன்று குவித்தான் ஹிட்லர்.
அச்சமயம், ஜெர்மானிய பாதிரியார் ஒருவர், ஹிட்லருக்கு கடிதம் எழுதினார். அதில், தன் மகன் ஊனமுற்றவன் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றும் எழுதி, இப்படிப்பட்டவர்களை உயிருடன் வைத்திருந்தால், 'ஹெல்த்தி'யான ஆரிய இனம் எப்படி தழைக்கும் எனக் கேட்டிருந்தார்.
கடிதத்தைப் படித்த ஹிட்லர், ஊனமுற்ற மற்றும் மனநலம் குன்றிய ஜெர்மானிய குழந்தைகளை விஷமிட்டுக் கொல்ல உத்தரவிட்டான்...
- இக்கொடுமையான கதையை நான் கூறும் போதே, 'போதும், நிறுத்து... கேட்கவே பயங்கரமா இருக்கு...' என்றார் லென்ஸ் மாமா.
உடன் இருந்த நண்பர் ஒருவர், 'வண்டியை கொஞ்சம் நிறுத்து; இயற்கையின் உந்துதலை கவனிக்கணும்...' என்றார். ஓரம் கட்டி மர நிழலில் வண்டியை நிறுத்தி, கீழே இறங்கினோம்.
ஆளுக்கொரு திசை சென்று, இயற்கையின் உந்துதலை தணித்துக் கொண்டிருந்த போது, சற்று தூரத்தில் மனநலம் குன்றிய இளைஞன் ஒருவன், நடந்து வருவதைக் கண்டு அலறிய நண்பர், 'மணி... ஓடிப் போய் கார் கதவை, 'லாக்' செய்... சீக்கிரம் போ...' என, அவசரம் காட்டினார்.
என்ன, ஏது என்று விவரம் புரியாமல் ஓடிச் சென்று காரின், 'சென்ட்ரல் லாக்கிங்' சிஸ்டத்தை ஆபரேட் செய்து, நான்கு கதவுகளையும், 'லாக்' செய்தேன். அதற்குள், சாலையின் எதிர் திசையில் சென்று கொண்டிருந்த அந்த மனநலம் குன்றிய இளைஞர், சாலையை கிராஸ் செய்து, கார் அருகே வந்து, குனிந்து உட்கார்ந்து கண் தெரியாதவர் போல் நடித்து, இந்தியில், 'குடிக்கத் தண்ணீர் வேணும்...' எனக் கேட்டார்.
'பாருய்யா... ரொம்ப அழகா ரோடை கிராஸ் செய்து, நம்ம கார்ல மோதிக்காம சூப்பரா வந்து குந்திகின்னு கண் தெரியாதவன் போல, 'ஆக்ட்' கொடுக்கிறான்...' என்றார் லென்ஸ் மாமா.
ரொம்ப நாட்களாகவே எனக்குள் ஒரு சந்தேகம்... நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, ஆங்காங்கே மனநலம் குன்றியவர்கள் பலரும் நடந்து செல்வதை பார்த்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும், வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பது ஏன் என்ற கேள்வி எனக்குள் எழும். அதற்கு இதுவரை விடை தெரிய வில்லை.
நண்பர்களிடம் இக்கேள்வியைக் கேட்டு, மனநலம் குன்றியவரிடம் ஒரு பாட்டில் குடிநீரையும் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
என் கேள்விக்கு நண்பர், 'அது பெரிய கதைப்பா... சொல்றேன்... அதுக்கு முன், கதவை மூடுன்னு ஏன் அவசரப்படுத்தினேன் தெரியுமா...
'ஒருமுறை வெளியூர் சென்று தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று கொண்டிருந்தோம்... இரவில், ஒயின் ஷாப்பில், சரக்கு வாங்குவதற்காக காரை நிறுத்தச் சொன்னேன்.
'காரில், டிரைவர் மற்றும் இரண்டு பேர் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். நான் மட்டும் இறங்கி கடைக்குச் சென்றேன்.
'திரும்பி வந்து பார்த்த போது, டிரைவர் சீட் அருகே பைத்தியம் ஒன்று ஏறி ஜாலியாக அமர்ந்திருந்தது. புத்தம் புதிய கார்... விலையுயர்ந்த லெதர் சீட்... எப்படி இருக்கும் எனக்கு... நான் குரல் கொடுக்கவும், காரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறிப்புடைத்து எழுந்து, காரை விட்டு இறங்கினர்.
'காரில் அமர்ந்திருந்த பைத்தியத்தை வெளியே இறக்க முயற்சித்தோம்; அது இறங்க மறுத்து, கூச்சல் போட்டது; பெருங்கும்பல் சேர்ந்து விட்டது.
'யார் யாரோ எவ்வளவோ தாஜா செய்தும், இறங்கவில்லை. கடைசியில் உள்ளூர்காரர் ஒருவர், 'இது நல்ல பைத்தியம்தாங்க... அடிச்சி கிடுச்சி புடாதீங்க. பிரியாணி பொட்டலம் கொடுத்தா இறங்கிடும்...' என்றார்.
'கடைசியில் உள்ளூர்காரன் சொன்னபடியே, பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து, அதைக் காட்டிய பின் தான், காரில் இருந்து இறங்கியது அந்தப் பைத்தியம்.
'இந்த களேபரங்களால், உற்சாக பான மயக்கத்தில் இருந்த நண்பர்களின் போதை தெளிந்தே போனது... பின், அருகே இருந்த மருந்து கடையில் டெட்டால் வாங்கி, தண்ணீரில் கலந்து சீட்டை துடைத்தெடுத்தோம்...' என்றார்.
கார் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது; பசி வயிற்றைக் கிள்ளியது. சாலையோரம் இருந்த தோப்பிற்குள், 'தாபா' ஒன்று கண்ணில் பட்டது; வண்டியை அங்கே நிறுத்தினோம்.
சுக்கா ரொட்டி, பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் மசாலா மற்றும் டால்பிரை ஆர்டர் செய்து காத்திருந்தோம்.
லென்ஸ் மாமா மற்றும் நண்பர்கள் கூல்பேக்கில் இருந்த பீர் கேன்களை திறந்து, சூட்டைத் தணித்துக் கொள்ள தயாராயினர்.
நான், தாபாக்களில் எப்படி விரைந்து உணவு தயாரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, கிச்சன் அருகில் சென்று கவனித்தேன்.
உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட், காலிபிளவர் போன்றவற்றையும், அசைவ அயிட்டங்களையும் வேக வைத்தோ, பொரித்தோ தயார் நிலையில் வைத்திருக்கின்றனர்.
நம் ஆர்டருக்கு ஏற்றார்போல், அதையும், இதையும் கலந்து, 'ஹை பிளேமில்' சமைத்து, உடனுக்குடன் தருகின்றனர்.
வாயில் வைக்க முடியாத சூட்டில் உணவு இருப்பதால், நம்மால் சுவையை அறிந்து கொள்ள முடிவதில்லை. கொஞ்சம் ஆற வைத்து சாப்பிட்டால் தான் ஒன்றுடன் ஒன்று, 'மிக்ஸ்' ஆகாமல் இருப்பது தெரிகிறது. பசி நேரத்திற்கு இதையெல்லாம் யார் பொருட்படுத்துகின்றனர். உணவுக்கான விலையும் கொஞ்சம் நஞ்சமல்ல, தாளித்து விடுகின்றனர்.
உணவு தயாராகி மேஜைக்கு வந்ததும், அவசர அவசரமாக பீரை குடித்து வந்தனர் நண்பர்கள். பாதி வயிறு நிரம்பி, பேச திராணி வந்ததும், நண்பரிடம், 'மனநலம் குன்றி தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் பெரும்பாலானோர், வட மாநிலத்தவராகவே இருக்கின்றனரே... அதற்கான காரணம் தெரியும் என கூறினீர்களே...' என்றேன்.
கோழிக் காலை கடித்துக் கொண்டிருந்த நண்பர், 'பொறு... பொறு...' என்பது போல் சைகை காட்டி, தன் கடமையில் கவனமாக இருந்தார். கடைசி சொட்டு சதை வரை குதறி, எலும்பை கடித்து உறிஞ்சி கீழே போட்டார்.
பின், 'வடமாநிலங்களில் நம்மூர் ஏர்வாடி போன்ற மனநல காப்பகங்கள் எதுவும் இல்லை என நினைக்கிறேன். அதனால் தான் பைத்தியம் பிடித்தவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் உற்றார், உறவினர், தென் மாநிலங்களுக்குச் செல்லும் நேஷனல் பர்மிட் லாரி டிரைவர்களைப் பிடித்து, அவர்களுக்கு பணம் கொடுத்து கண்காணாத இடங்களில் இறக்கி விட சொல்லி விடுகின்றனர்.
'பணம் பெற்றுக் கொண்ட டிரைவர்களும், இரவு நேரத்தில் லாரி சென்று கொண்டிருக்கும் போது, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் காட்டு பகுதிகளில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். இது தான் இவர்களின் பின்னணி...' என்று கூறி முடித்தார்.
- மனம் நலம் குன்றியவர்களிடம், பெற்றோர் கூட இப்படி அரக்கத்தனமாக நடந்து கொள்வரா என எண்ணிய போது, தான் பெற்ற பெண் குழந்தைகளையே கள்ளிப்பால் கொடுத்தும், நெல் மணியை பாலுடன் புகட்டியும் நம்மூரிலேயே சாகடிக்கின்றனரே என்பது கவனத்திற்கு வர, மனம் கனத்துப் போனது!

