தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி போக வேண்டிய நிர்பந்தம்...எழும்பூரில் ரயில் பிடித்தேன். சவுகரியமாக அமர்ந்த பின், உடன் எடுத்துச் சென்றிருந்த எஸ்.எம்.கமால் எழுதிய, 'மன்னர் பாஸ்கர சேதுபதி' என்ற, நூலை படிக்க ஆரம்பித்தேன்.

அதிலிருந்து சுவையான பகுதி:

பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருக்கும் போதே அவரது தந்தை, இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி காலமானார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷாரின்,'கோர்ட் ஆப் லார்ட்ஸ்' என்ற ஆட்சிக்குழு, சேது மன்னரது, பிள்ளைகளை வளர்க்கும், பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

பாலகர்களாக இருந்த பாஸ்கரர் மற்றும் தினகரை சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்கு கல்வி கற்க ஏற்பாடு செய்தது. தம் அன்றாட வாழ்க்கையை பற்றி, நாட் குறிப்புகளிலும், சொந்தச் செலவுகளை, கணக்குப் பதிவேடுகளிலும் பதிவு செய்து வந்தார் பாஸ்கரர்.

இளவரசர் பாஸ்கரர், 1888ல், எப்.ஏ., பட்டத் தேர்வில் தேர்வு பெற்றபின், அவரது திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தது பிரிட்டிஷ் அரசு. அத்துடன், சமஸ்தான நிதியில் இருந்து, திருமணச் செலவிற்காக, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

ஆனால், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து, பாஸ்கர சேதுபதி திருமணத்தை, மே 13, 1888ல், ஆடம்பரமாக நடத்தினார் ராணியார்.

மன்னரது வாழ்க்கை துணையாக வந்தவர், களவரி கிராமம் சேதுராஜ தேவர் மகள், மங்களேசுவரி நாச்சியார்.

இத்திருமணம் நடைபெற்ற சில நிமிடங்களில், மன்னருக்கும், சிவபாக்கியம் நாச்சியார் என்பவருக்கும் அரண்மனை அந்தபுரத்தில், மற்றுமொரு திருமணம் நடந்தது.

ஏற்கனவே, கும்பினியார் இந்த இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி மறுத்ததால், உறவினர்கள் முன்னிலையில், இந்த திருமணம் தனியாக நடந்தது.

மன்னரது தூரத்து உறவினரான, தூவல் கிராமம், கண்ணுச்சாமி தேவர், தம் மகள் சிவபாக்கியத்தை, ராமநாதபுரம் அரண்மனைக்கு அழைத்து வந்து, 1885ல், மன்னரது தாயாரிடம் ஒப்படைத்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரினார்.

துரைத்தனத்தாரின் முன் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தின் போது, ராணியின் இன்னொரு உறவினரான, களவரி கிராமம் சேதுராஜ தேவர், அவரது மகள் மங்களேசுவரியை, மன்னருக்கு துணைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு, ராணியை வற்புறுத்தி வந்தார்.

இருவரும் மன்னரது உறவினர்கள்; இவர்களில் எவரை புறக்கணித்தாலும், சுற்றத்தாருக்குள் மனவருத்தம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகி விடும்; ஆதலால், இருவரையுமே மணப்பெண்களாக வரித்துக் கொள்ளும் நிர்பந்தம் மன்னருக்கு ஏற்பட்டது.

மன்னர் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த போது, ராமநாத சுவாமி கோவிலில், அர்த்த சாம பூஜையில் கலந்து, சுவாமி, அம்பாள் திருமேனிகள் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படும் பல்லக்கிற்கு முன், தங்கத் தீவட்டி தூக்கி செல்வதை, வழக்கமாக கொண்டிருந்தார்.

வேம்பு ஐயர் என்ற புலவர், தமிழில் இரு பொருள்பட பேசுவதிலும், பாடல்கள் புனைவதிலும் சிறந்தவர். இதனால், அவருக்கு, 'சிலேடைப் புலி' என்ற பட்டமும் உண்டு. ஒருநாள், மன்னரது அவைக்கு வந்தார் வேம்பு ஐயர். அப்போது புலவர்கள் பகுதியில் இருந்த அனைத்து இருக்கைகளிலும், புலவர்கள் நிறைந்து இருந்தனர்.

செய்வதறியாது, ஒரு நிமிடம், மலைத்து நின்றார் வேம்பு ஐயர். அவரை ஏளனமாக பார்த்து, 'வேம்பு நிற்பது தான் இயல்பு...' என்றார் ஒரு புலவர். நிலைமையை புரிந்த மன்னர், புலவரை அழைத்து, தமக்கு அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்து, அவரை பெருமைப்படுத்தினார்.

மகிழ்ச்சியில் திளைத்த புலவர், 'அரசு அருகில் தான் வேம்பு இருக்கும்...' என்று, சிலேடையாகச் சொன்னார். (அரச மரமும், வேப்ப மரமும் அருகருகே வளரச் செய்வது தமிழர் மரபு.) புலவரது திறமையான பதில், அவையில் இருந்த அனைவரையும் மகிழ்வித்தது.

இச்சமயத்தில், அமெரிக்காவில், அனைத்து சமயங்களின் பேரவை கூட்டம், கூட இருப்பதாக, மன்னருக்கு செய்தி கிடைத்தது. தாம் மேற்கொண்டுள்ள தெய்வீகத் திருப்பணி அனைத்தையும் விட, இந்த பேரவையில் கலந்து, இந்து சமயச் சிறப்பையும், இந்திய பண்பாட்டையும் மேல்நாட்டார் புரிந்து கொள்ள செய்வது, தம் கடமையென கருதினார் பாஸ்கரர்.

இந்திய நாட்டின் எந்த மடாதிபதியும், சனாதனவாதியும் எண்ணிப் பார்க்காத செயல் இது! மதுரை ஜில்லாக் கலெக்டராக இருந்த, கரோல் என்ற வெள்ளையர் மூலமாக, தம் பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்தார் பாஸ்கரர்.

இதற்கிடையில், கன்னியாகுமரிக்கு யாத்திரையாக வந்த, சுவாமி விவேகானந்தரை, சென்னை நண்பர் ஜஸ்டிஸ் சுப்ரமணிய ஐயர் மூலமாக கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்தார். அவருடன் ஆன்மிக சித்தாந்த செய்திகளை அளவளாவி, பரிமாறிக் கொண்ட பின், தம் பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டார் மன்னர்.

இல்லறத்தில் இருக்கும் தன்னை விட, ஒரு துறவி மூலமாக, அந்தக் கருத்துகளை, ஆங்கில மொழியில், உலகப் பேரவையில் வெளியிடுவது இன்னும் பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று எண்ணினார். முதலில் சுவாமிகள் தயங்கினாலும், பின், ஒப்புக்கொண்டார்.

பம்பாய் துறைமுகத்திலிருந்து பெனின்சுலா என்ற கப்பலில், மே 31, 1893ல், அமெரிக்க பயணத்தை துவங்கி, ஜூலை கடைசி வாரத்தில், சிகாகோ போய் சேர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.

மேலைநாடுகளில், நான்கு ஆண்டு கால வெற்றிப் பயணத்தை சிறப்பாக முடித்து, தாயகம் திரும்பினார்.

கொழும்பு துறைமுகத்தை அடைந்த சுவாமிகள், யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து தென்மேற்கு திசையிலுள்ள பாம்பனுக்கு, ஜன., 20, 1897ல் வந்து சேர்ந்தார்.

மன்னர் பாஸ்கர சேதுபதி, தன் பரிவாரங்களுடன் முன்னதாகவே அந்த ஊருக்கு வந்து, சுவாமி விவேகானந்தருக்கு, பிரமாண்டமான வரவேற்பை வழங்கி, நினைவுச் சின்னம் ஒன்றையும், திறந்து வைத்தார்.

படகில் இருந்து தரையிறங்கிய சுவாமிகளது புனித பாதங்களை, தன் தலையில் வைத்து, தரை இறங்குமாறு, வேண்டினார் மன்னர்.

- இப்படி இன்னும் சுவையான சம்பவங்களை புத்தகம் விவரிக்கிறது; இன்னும் படித்து முடிக்க வில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us