sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சாண்டோ சின்னப்பா தேவர்! (16)

சாண்டோ சின்னப்பா தேவர்! (16)

சாண்டோ சின்னப்பா தேவர்! (16)


PUBLISHED ON : நவ 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —

நாகி ரெட்டியின், எங்க வீட்டு பிள்ளை, ஏவி.எம்.,மின், அன்பே வா, பந்துலுவின், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள், எம்.ஜி.ஆரை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றன. 1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்!

இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு!

வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், 'என்ன முருகா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க...' என்றார்.

'நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே...' என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர்.

'அண்ணே... சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு... உங்களுக்கு ஏதாவது தெரியுமா...' என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், 'பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல... அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்...' என்றும், 'இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா... மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; புதுப்படம் எதுவும், 'புக்' ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்...' என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர்.

சிவாஜி கணேசனை வழியனுப்பி விட்டு வந்த தேவர், 'இங்கே என்னப்பா செய்யறீங்க... நான் சொன்ன சீனை யோசிச்சீங்களா...' என்று குரலை உயர்த்தினார்.

'அண்ணே... சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்...' என்றனர்.

'என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு...' என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர்.

மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால், ஜூன் 1, 1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார். தி.மு.க.,வை எப்படியாவது ஆட்சியில் அமர வைத்து விட வேண்டும் என்று இளைஞர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நேரம் அது. அச்சமயத்தில், 'அண்ணே... தனிப்பிறவி படத்துல ஒரு கனவு பாட்டு சீன் வருது; அதுல, நீங்க முருகர் வேஷமும், அம்மு வள்ளியா வந்தா நல்லாருக்கும்ண்ணே... கவிஞர் பல்லவியை அற்புதமா ஆரம்பிச்சுருக்காரு...' என்று தேவர் கூறியதும், அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.,

ஏற்கனவே, நல்ல தங்காள் படத்துக்கு வசனம் எழுத தடை விதித்து, கதை, வசனகர்த்தா

ஏ.கே.வேலனுக்கு, நாவலர் நெடுஞ்செழியனுக்கு, கடிதம் அனுப்பிய வரலாறும் உண்டு.

மேலும், 'அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா...' என்று நடித்து கைத்தட்டல் வாங்கிய பின், திடீரென்று முருகனாகத் தோன்றினால், கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்புமே...' என்று தயங்கியவர், 'முகராசிக்கு கிடைச்ச வெற்றியில, 'ரிஸ்க்' எடுக்காதீங்க அண்ணே...' என்றார்.

உண்மையில், எம்.ஜி.ஆரும் முருக பக்தரே! ஜூபிடர் படங்களில் நடிக்கிற காலத்தில், தேவரோடு சென்று, மருதமலை முருகனை வழிபடுவார் எம்.ஜி.ஆர்.,

பராசக்தி படத்தின் வெற்றிக்குப் பின், வறுமையில் வாடிய தமிழர்களில் பெரும்பாலோர், தி.மு.க.,வில் நம்பிக்கை வைத்தனர். எம்.ஜி.ஆரும் அதுவரை கதர் ஆடை அணிந்த காந்தியவாதியாகவும், கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு என்று பக்திப் பழமாகவே வாழ்ந்தவர் தான். பராசக்தி அடித்த புயலில், அவரும் தி.மு.க.,வில் கரை ஒதுங்கினார். ஆனாலும், அவர் மனசுக்குள் எப்போதும் முருகனே குடியிருந்தான்.

கவிஞர் வாலியின் நெற்றியில் பூசிய விபூதியை, கே.ஆர்.ராமசாமி விரும்ப வில்லை என்பதற்காக, அதை அழிக்கச் சொன்னவர் எம்.ஜி.ஆர்., ஆனால், தேவர், தனக்கு முருகனின் திருநீற்றைத் தராவிட்டால், அவரிடம் பேசக்கூட மாட்டார் எம்.ஜி.ஆர்.,

'சும்மா நடிங்கண்ணே ஜோரா இருக்கும்...' என்றார் விடாப்பிடியாக தேவர்.

எம்.ஜி.ஆருக்காகவே ஆள் உயர வெள்ளி வேலுக்கும் ஆர்டர் கொடுத்தார்.

நீண்ட தயக்கத்துக்குப் பின், தேகமெங்கும் நகைகளும், ஆபரணங்களும் தவழ, கையில் வேலோடு முருகனாகக் காட்சி அளித்தார் எம்.ஜி.ஆர்., அக்காட்சி படமாக்கப்பட்ட போது, தேவர் -

எம்.ஜி.ஆர்., உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர். முருகன் கை வேலை, தன் நண்பருக்கே அன்புப் பரிசாக கொடுத்தார் தேவர்.

எம்.ஜி.ஆரின் முருக பக்தி குறித்து, பிப்., 1974ல், 'பொம்மை' இதழுக்கு தேவர் அளித்த பேட்டி இது:

நான் இப்போ சொல்லப் போற சேதி உங்களுக்கெல்லாம் பிரமிப்பா இருக்கும்.

எம்.ஜி.ஆருக்கு தெய்வ பக்தி இல்லன்னு ரொம்ப பேரு சொல்றாங்க. ஆனா, நான் எப்ப மருதமலைக்கு போனாலும்,

எம்.ஜி.ஆர்., பேருக்கு அர்ச்சனை செய்வேன்; அந்தப் பிரசாதத்தைக் கொடுக்கும் போது, உட்கார்ந்திருந்தால் கூட, எழுந்து, பய பக்தியோட வாங்கிப்பார். எம்.ஜி.ஆரிடம்., ஒருநாள், 'மருதமலை போயிட்டு வந்தே'ன்னு சொன்னேன்; உடனே, 'பிரசாதம் எங்கே?'ன்னு கேட்டார். ஆனால், பிரசாதத்தை எடுத்துப் போக மறந்து விட்டேன். அன்று முழுவதும் எம்.ஜி.ஆர்., என்னுடன் பேசவே இல்ல!

- இவ்வாறு கூறியிருந்தார் தேவர்.

தேவரின், 'தா' வரிசைப் படங்கள் வசூல் செய்த மாதிரி, கன்னித்தாய், தொழிலாளி மற்றும் முகராசிக்குப் பின் வந்த, தனிப் பிறவி மக்களைக் கவரவில்லை. செப்.,1966ல் தனிப்பிறவியோடு வெளியான, சரஸ்வதி சபதம், கே.எஸ்.கோபால கிருஷ்ணனின், சின்னஞ்சிறு உலகம் மற்றும் முக்தா பிலிம்சின், தேன் மழை அத்தனையும் வெற்றி!

கொடைக்கானலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஜெமினி கணேசன், மீண்டும் கோடம்பாக்கத்தில் பிசியானார்.

பொங்கல் ரிலீசாக, தாய்க்கு தலைமகன் படம் வெளியாக இருந்தது. அத்துடன், கந்தன் கருணை, 'சோ'வின் மனம் ஒரு குரங்கு, பீம்சிங்கின், பட்டத்து ராணி மற்றும் பெண்ணே நீ வாழ்க என்று நிறைய படங்கள் வெளியாக காத்திருந்தன.

ஜனவரி, 13ல், பொங்கலுக்கு முதல் நாள், வெலிங்டனில், தாய்க்கு தலைமகன் படத்தை வெளியிட முடிவு செய்தார் தேவர். சில நேரங்களில், பொங்கல் தினம், கரிநாள் என்றும், 'சுபம் விலக்க' என்று காலண்டர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேவருக்கு ராசி எண் 5; ஆனால், ஏனோ, 1967ல் போகி அன்றே, படத்தை வெளியிட்டார் தேவர்.

தேவர் பிலிம்சின் ஆஸ்தான எழுத்தாளர் ஆரூர்தாஸ் மற்றும் மாராவும், மதுரை திருமாறனும் இணைந்து உருவாக்கிய படம், தனிப்பிறவி. ஆனாலும், அப்படத்தை எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் புறக்கணித்து விட்டனர். அதனால், தாய்க்கு தலைமகன் படம் குறித்து ரொம்ப ஆர்வமாய் இருந்தார் தேவர்.

தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

பா. தீனதயாளன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us