PUBLISHED ON : ஆக 04, 2019

பா - கே
இந்தியாவிலிருந்து, சிறு தானிய வகைகள் மற்றும் மல்லி, ரோஜா போன்ற மலர்களை, வெளிநாடுகளுக்கு அனுப்பும், ஏற்றுமதி நிறுவன அதிபராக இருக்கிறார், நண்பர். வியாபார விஷயமாக அவர், சமீபத்தில், சில வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். மதியம், ஓட்டல் ஒன்றுக்கு, என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்துச் சென்றார்.
வழக்கம்போல், ஊர்வன, நடப்பன, பறப்பன போன்றவற்றுக்கும், உ.பா.,வுக்கும், 'ஆர்டர்' செய்து, அங்கு வந்திருந்த, வெளிநாட்டு பெண்களை நோட்டமிட்டபடி இருந்தார், மாமா.
நண்பரிடம், வெளிநாட்டு பயணம் பற்றி விசாரித்தேன்.
'பயணம் நல்லபடியாக இருந்தது மணி... ஆனால், இந்த முறை, நான் போன நாடுகளில், அங்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள், என்னை ஆச்சரியப்படுத்தியது...' என்றார்.
அதை அறிந்து கொள்ளும் ஆவலில், விபரமாக கூறும்படி கேட்டேன்.
நண்பர் கூற ஆரம்பித்தார்:
மேலை நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்கிறீர்கள். அங்கு, நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் போகும் நாட்டில், என்ன நடைமுறை உள்ளது என, அறிந்து, அதன்படி நடந்து கொள்வது நல்லது
* நம் நாட்டில், அன்பளிப்புகள் வழங்கும் முன், அதன் விலையை பலர் கிழித்து விடுவர் அல்லது பேனாவால் கிறுக்கி, விலை தெரியாதபடி மறைத்து விடுவர்
ஆனால், அமெரிக்காவில் இப்படி செய்வது அநாகரிகம். மாறாக, அன்பளிப்பு தருவோர், அதை வாங்கிய கடை ரசீதுடனேயே தருவர். ஏனெனில், பிடிக்கவில்லை என்றால், அதே கடையில் கொடுத்து, மாற்றிக் கொள்ள தான்
* பண்டிகை சமயங்களில், பலர், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அதிகாரிகளுக்கும், அன்பளிப்புகளை தரும்போது, அந்த பொருள் மீது, 'தீபாவளி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து...' என்று, எழுதி கொடுப்பர்
ஆனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அப்படி இல்லை. மாறாக, 'ஹேப்பி ஹாலிடேஸ்' என, குறிப்பிட்டு தான் வழங்குவர். குறிப்பிட்ட பண்டிகையை சொல்லி வழங்குவது, அங்கு, நல்ல பண்பாடாக கருதப்படுவதில்லை
* இந்தியாவில், ஓட்டலுக்கு கூட்டமாக சென்று சாப்பிடும்போது, யார் அழைத்துச் செல்கிறாரோ அவர் தான், 'பில்'லுக்குரிய பணத்தை தருவார்
ஆனால், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கூட்டாக சென்றாலும், தனித்தனியாக, 'பில்' போடப்பட்டு, அவரவர் சாப்பிட்டதற்கு, பணம் செலுத்துவர். நைஜீரியா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலும் இதே போல தான்
* தென் கொரியாவில், பலர் சேர்ந்து ஓட்டலுக்கு சென்றால், யார், 'சீனியரோ' அவர் தான் பணம் கொடுப்பார். நாம் குறுக்கிட்டு கொடுத்தால், அதை, அவர் ரசிக்க மாட்டார்
* சீனாவிற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். புத்தாண்டின் போது, அன்பளிப்பாக, பூக்களை வழங்கலாம். அதில், ரோஜா, துலிப், கார்னேஷன் ஆர்கிட்ஸ் மற்றும் செம்பருத்தி போன்ற பூக்களை தரலாம். ஆனால், மறந்தும், வெள்ளை நிற பூக்களை தரக்கூடாது; வெண்மை நிறம், அங்கு, துக்கத்தின் சின்னம்
* சிங்கப்பூரில், அன்பளிப்பாக, கடிகாரம் தருவதை ஏற்க மாட்டார்கள். காரணம், கடிகாரம் மரணத்தை நினைவுபடுத்துவதாம்
* சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில், திருமணங்களுக்கு வருவோர், முடிந்த வரை பணமாக கொடுத்து சென்று விடுவர். பணம் கொடுப்பதிலும் கூட, சில முறைகள் உள்ளன. பெரிய இடமாக இருந்து, திருமணம் அமர்க்களமாக நடந்தால், குறைந்தது, 200 சிங்கப்பூர் டாலர். இந்திய மதிப்பில், 10 ஆயிரம் ரூபாய். இப்படி தருவது தான், கவுரவமாக கருதப்படுகிறது
* வெளிநாடுகளில், நாம் பயணிக்கும், 'லிப்ட்'டில், இடையில் ஒருவர் வந்து சேர்ந்து கொண்டால், அவரை வரவேற்பது போல், கையை உயர்த்தி வரவேற்பர். மேலும், பட்டன் அருகில் யார் இருக்கிறாரோ, அவரிடமே நாம் செல்ல வேண்டிய தளத்திற்கான பட்டனை அழுத்த சொல்ல வேண்டும். நம் நாடாக இருந்தால், எங்கிருந்தோ கையை நீட்டி, நமக்கு வேண்டிய தளத்தை நாமே அழுத்துவோம். இப்படி செய்வதை, பல நாடுகளில் அநாகரிகமாக கருதுகின்றனர்
* நம் நாட்டில், நமக்கு தெரிந்த ஒருவரை திடீரென சந்திக்கும்போது, அவரை விசாரிப்பதுடன், 'அப்பா, அம்மா எப்படி இருக்காங்க... நலமா...' என்றெல்லாம் கேட்போம். ஆனால், அமெரிக்காவில் அப்படி விசாரிப்பதை, அநாகரிகமாக கருதுவர். அத்துடன், 'அவங்க என்ன, செத்துக்கிட்டிருக்காங்கன்னு உங்களுக்கு நினைப்பா...' என்று, சிலர் கோபப்படவும் கூடும்
* இங்கிலாந்தில், காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, குழந்தையுடன் ஒருவர், சாலையை கடந்து கொண்டிருக்கிறார். உடனே, நீங்கள் காரை நிறுத்தி, அவரை செல்ல அனுமதிக்க வேண்டும். மாறாக, 'ஹாரன்' அடித்தால், அது, அநாகரிகமாக கொள்ளப்படும். சகட்டுமேனிக்கு, 'ஹாரன்' அடிப்பதையும் தவிர்க்கணும்
* சிங்கப்பூர் போன்ற நாடுகளில், நமக்கு உதவி செய்பவர்களுக்கு, நன்றி சொல்வது சிறந்த பண்பாடாக கருதப்படும். டாக்சி டிரைவர், கதவை திறந்து விடுபவர் மற்றும் ஓட்டல் சப்ளையர் போன்றவர்களுக்கு, நன்றி சொன்னால், அவர்கள், அகமகிழ்ந்து போவர்
* அமெரிக்க உணவகங்களில் வேலை செய்வோர், ஒப்பந்த கூலிகள். அவர்களுக்கு, 'டிப்ஸ்' கொடுத்தால், அதை ரசிப்பர், மகிழ்வர். ஆனால், ஜப்பானில், 'டிப்ஸ்' கொடுப்பது அநாகரிகம்
'ஆக, எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து, அதன்படி நடந்து கொண்டால், நம் மரியாதை காப்பாற்றப்படும்...' என்று முடித்தார், நண்பர்.
அது சரி... இந்தியாவில் இதுபோன்று பிரத்யேக வழக்கங்கள் ஏதாவது இருந்தால், எனக்கு எழுதுங்களேன். இந்தியா வரும், வெளிநாட்டினருக்கு தெரியப்படுத்தலாமே!
ப
ஒரு சிறு தீவில், ஒற்றைக் கண் - அதாவது, நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண் உள்ள மனிதர்கள் இருப்பதாக, கேள்விப்பட்டான், ஒருவன். அவர்களில் ஒருவனை பிடித்து வந்து, சந்தையில் நிறுத்தி, கட்டணம் வசூலித்து, பெரும் பணக்காரனாகி விடலாம் என்று எண்ணினான்.
படகில் ஏறி, ஒற்றை கண் மக்கள் வாழும் தீவுக்கு சென்றான். ஒருவனை பிடிக்க போனான். ஆனால், அவர்கள் முந்திக் கொண்டனர்.
'இவனுக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன. இவனை பிடித்து, நம் மக்களிடம் வேடிக்கை காட்டினால் நிறைய சம்பாதிக்கலாம்...' என்று கூறி, அவனை பிடித்துச் சென்றனர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
