
பா.கே.
சென்னை, புறநகரில் இருக்கும் காவல் நிலையத்தில், ஆய்வாளராக பணிபுரியும் ஒருவரை சந்திக்க வேண்டுமென, என்னையும் அழைத்துச் சென்றார், தொழிலதிபரான நண்பர் ஒருவர்.
பல காவல் நிலையங்கள், நவீனமயமாகி வர, இந்த காவல் நிலையம் மட்டும், பழைய பாணியிலேயே அரத பழசாக காட்சியளித்தது.
நுழைவு வாயிலில் காவலர் ஒருவர், காயலான் கடைக்கு போக வேண்டிய நிலையிலிருந்த துப்பாக்கியை ஒரு கையில் பிடித்தபடி, மற்றொரு கையில் மொபைல் போனை வைத்து, ஏதோ படத்தை படு சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
காரிலிருந்து இறங்கிய நண்பர், நேராக அவரிடம் சென்று, ஆய்வாளரை பார்க்க வேண்டுமென கூற, பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமலே, உள்ளே கை காட்டி வழி அனுப்பினார்.
நண்பரை உள்ளே அனுப்பி, நான் வெளியிலேயே நின்று, காவல் நிலையத்தினுள் எட்டிப் பார்த்தேன். பாலிஷ் போன டேபிள் - சேர், பெயின்ட் உதிர்ந்த சுவர் மற்றும் மேற்கூரை.
ஓரமாக இருந்த பெஞ்ச் ஒன்றில், லுங்கி, பனியன் அணிந்த ஆசாமி ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த கான்ஸ்டபிள் அடிக்கடி வந்து, அவரை எழுப்பி உட்கார வைக்க, அவர் தலை மறைந்ததும், மீண்டும் படுத்துக் கொண்டார், அந்த ஆசாமி. செம போதையில் இருப்பது தெரிந்தது.
அதே கூடத்தின் ஒரு மூலையில், உதவி ஆய்வாளர் என்ற பெயர் பலகை தென்பட்டது. அதன் எதிரில் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தவர், இடையிடையே தரையில் குத்த வைத்து அமர்ந்திருந்த, 'அக்யூஸ்ட்' ஒருவரை கடுமையான குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சத்தமாக பேசும் குரல் வரவே, வெளியே பார்த்தேன். வாசலில் காவலுக்கு நின்றிருந்தவர் தோள் மீது கை போட்டபடி, 'பேட்ட ரவுடி' ஸ்டைலில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
'டேய் ஜாக்கி... தோளிலிருந்து கையை எடுப்பா. இன்ஸ்பெக்டர் பார்த்தா, எனக்கு தான், 'டோஸ்' விழும்...' என, கெஞ்சும் குரலில் கூறினார், அந்த காவலர்.
'சரி... பிழைச்சு போ...' என்ற ரீதியில் ஒரு, 'லுக்' விட்டு, தோளிலிருந்து கையை எடுத்தான்.
நேரே உள்ளே போய், உதவி ஆய்வாளர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
'இன்னா சார்... எங்கே திருடு போனாலும் என்னை வரச்சொல்லி விசாரிக்கிறீங்க. நீங்க சொல்ற ஏரியாவுக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை சார்... சும்மா, 'டார்ச்சர்' குடுக்கறீங்க... அப்புறம் நான் மேலிடத்துக்கு போக வேண்டியிருக்கும்...' என்றான், தெனாவெட்டாக.
'டேய்... ஜாக்கி, உன்னைப் பற்றி தெரியும்டா, எனக்கு. திருடனைப் பிடிக்க, திருடனின் துணையுடன் போகணும்ன்னு, தமிழ்ல ஒரு பழமொழி சொல்வாங்க... உனக்கு தெரியாம இருக்காது. உண்மையை சொல்லிடு.
'திருடு போன வீடு, பெரிய இடத்தை சேர்ந்தவங்க... கண்டுபிடிக்கலைன்னா, எங்க வேலைக்கே சிக்கலாயிடும். என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. சம்பந்தப்பட்ட ஆள இங்க அழைச்சு வந்து நிறுத்திடு... பிறகு, நாங்க பார்த்துக்கிறோம்...' என்றார், உதவி ஆய்வாளர்.
'இதோடா... திருடனை பிடிக்கிறது தான், போலீசோட வேலை. இதுல என்னை கோர்த்து விடாதீங்க... நாங்க ஒண்ணுக்குள் ஒண்ணு தெரியுமா... காட்டிக் கொடுக்க மாட்டோம். ஆனாலும், இவன் எவனோ புது திருடன் போலிருக்கு... கை வைக்கக் கூடாத இடத்துல கை வச்சு இருக்கிறான். யாருன்னு பார்த்துடுவோம்...' என்றான்.
வெளியே வந்தவன், என்னை ஒரு பார்வை பார்த்து, ஓரமாக சென்று, யாருக்கோ போன் செய்தாள்.
'டேய்... (பெயர்), மண்டி தெருவுல திருடு போயிடுச்சாம்டா. இது, 'மூஞ்சுரு' வேலையா தான் இருக்கும். அவன் அடிக்கடி, நம்ம வழியில, 'கிராஸ்' ஆவறான்... அவன இரண்டு தட்டு தட்டி வைக்கணும்டா...' என்றான்.
அச்சமயம், தலைவிரி கோலமாக, 'சொர்ணக்கா' ஸ்டைலில், ஒரு அம்மா, வீராவேசமாக வந்தார்.
'இந்த போலீஸ்காரங்களுக்கு வேறு வேலையே இல்லை. 'கேஸ்' கிடைக்கலைன்னா, யாரையாவது இழுத்துட்டு வந்து, 'கேஸ்' எழுத வேண்டியது. அப்புறம் துட்டு வாங்க வேண்டியது...' என்றபடியே, உள்ளே நுழைந்தார்.
பெஞ்சில் படுத்திருந்தவரின் சட்டையைப் பிடித்து, 'உன்னோட பெரிய ரோதனையா போச்சுய்யா. குடிச்சுட்டு எங்கயாவது விழுந்து கிடக்கிற... இவனுங்க இழுத்துட்டு வந்துடறாங்க...
'இந்தாய்யா போலீசு... என் வூட்டுக்காரரை இன்னொரு தபா இழுத்துட்டு வந்தீங்கன்னா, நடக்கறதே வேற... எங்க தெருவுக்குள் கால் வைக்க மாட்டீங்க...' என்று எச்சரித்து, குடிகார ஆசாமியை முதுகில் நாலு சாத்து சாத்தி, இழுத்து போனாள்.
யாரும் தடுக்க முன்வரவில்லை.
- இதென்ன காவல் நிலையமா அல்லது திருடன் - போலீஸ் விளையாட்டு மைதானமா... சினிமாவில் காமெடி காட்சி பார்த்தது போலிருந்தது, எனக்கு.
பேசி முடித்து, வெளியே வந்த நண்பருடன் அங்கிருந்து கிளம்பினேன்.
ப
'ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி...' என்ற பாரதி வாக்குபடி, இன்று, ஆண் - பெண் வேறுபாடின்றி கும்மியடித்து பழகி வருகின்றனர்.
இளம் பெண்களே... உங்களது ஆண் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா... இதோ ஒரு சின்ன, 'டெஸ்ட்!'
நேர்மையாக, மனசாட்சிபடி பதில்களை, 'டிக்' செய்து, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
1. குடும்ப மற்றும் தனிப்பட்ட பிரச்னைகளை, ஆண் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டா?
ஏ. எப்போதாவது
பி. ஆம்
சி. இல்லை
2. ஆண் நண்பர்கள், உங்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுகின்றனரா?
ஏ. ஆம்
பி. ஒரு சில சந்தர்ப்பங்களில்
சி. இல்லை
3. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அல்லது உங்களது ஆடை அணியும் நேர்த்தியை அடிக்கடி பாராட்டுகின்றனரா?
ஏ. எப்போதாவது மற்ற நண்பர்கள் இருக்கும்போது
பி. இல்லை
சி. ஆம்
4. ஆண் நண்பர்களின் குடும்பத்தினர், உங்கள் நட்பை எப்படி பார்க்கின்றனர்?
ஏ. குடும்ப நண்பர்கள் போலவே கருதுகின்றனர்
பி. நட்பு தெரிந்தும், அதிக முக்கியத்துவம் தர மாட்டார்கள்
சி. எங்களது நட்பு அவர்களுக்கு தெரியாது
5. ஆண் நண்பர்களிடம் கடன் கேட்பதுண்டா?
ஏ. இல்லை
பி. எப்போதாவது
சி. ஆம்
6. மொபைல் போனில், உங்கள் பெயரை எப்படி பதிவு செய்து வைத்துள்ளார்.
ஏ. என் பெயரை குறிப்பிட்டு, நண்பர் என்று
பி. செல்ல பெயரில்
சி. ஆண் பெயரில்
7. எல்லா விஷயங்களையும், உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றாரா?
ஏ. ஆம்
பி. எப்போதாவது
சி. இல்லை
'ஏ' என்று குறிப்பிட்டிருந்தால், 10 மதிப்பெண் என்று குறித்துக் கொள்ளுங்கள். 'பி' என்றால், ஐந்து மதிப்பெண். 'சி' என்றால், மூன்று மதிப்பெண்.
* 60 - 70 மதிப்பெண் பெற்றிருந்தால், நல்ல ஆண் நண்பர்களை பெற்றிருக்கும் பாக்கியசாலிகள், நீங்கள்
* 35 - 50 மதிப்பெண் என்றால், நல்லது. ஆண் நண்பர்களை சற்று தள்ளி வைத்தே பழக வேண்டும்
* 30க்கு கீழே என்றால், உஷாராக இருக்க வேண்டியவர்கள், நீங்கள். புகழ்ச்சிக்கு மயங்கி விடாமல், எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.