PUBLISHED ON : ஜூலை 18, 2021

கே
அன்று காலை, துாங்கி எழுந்தவுடன், வழக்கம்போல், 'கார்வான்' ரேடியோவில், பாடல் கேட்டபடி பல் துலக்க ஆரம்பித்தேன்.
'எப்போதும்தான் பாடல்களை கேட்கிறோமே... இன்று, 'பென்டிரைவ்' போட்டு வேறு ஏதாவது கேட்கலாமே...' என நினைத்து, குப்பண்ணா எப்போதோ கொடுத்த, 'பென்டிரைவ்' ஒன்று கண்ணில்பட, எடுத்து ரேடியோவில் செருகி, 'ஆன்' செய்தேன். தென்கச்சி சுவாமிநாதனின், 'இன்று ஒரு தகவல்' ஒலிக்க ஆரம்பித்தது...
குளியலறை வாசலில் வைத்து, குளித்தபடியே கேட்கத் துவங்கினேன். அதில்:
'கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு'ன்னு, புத்தி சொன்னார், ஒரு பெரியவர்.
அதைக் கேட்ட சின்ன பையன், 'அது எப்படி பெரியவரே, புத்தியை தீட்டறது... கத்தியை தீட்டுன்னா ஒரு கருங்கல்லுலே கத்தியை தேய்க்கலாம். புத்தியை தீட்டுன்னா, தலையை எடுத்து போய் தரையில தேய்ச்சுக்கிட்டிருக்க முடியுமா?' அப்படின்னான்.
இந்த பையனுக்கு புத்தி கூர்மை கம்மின்னு புரிஞ்சுக்கிட்டார், பெரியவர்.
அது சரி... அறிவுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் என்ன வித்தியாசம்?
இது, ஒரு முக்கியமான கேள்வி.
இதே கேள்வியை, சாக்ரடீஸ்கிட்ட அவருடைய சிஷ்யன் ஒருத்தன், 'அறிவுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் என்னங்க வேறுபாடு'ன்னு கேட்டான்.
சாக்ரடீஸ் நிமிர்ந்து அந்த சிஷ்யனை பார்த்து, 'இதுக்கு நான் பதில் சொல்றேன். அதுக்கு முன், நீ ஒரு காரியம் செய்யணும். அதோ பார்... அங்கே, ஒரு வயசான பெரியவர் உட்கார்ந்திருக்கார். நேரா அவர்கிட்ட போ, இங்கேயிருந்து பக்கத்துல இருக்கிற கிராமத்துக்கு போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும்ன்னு கேட்டுக்கிட்டு வா...' என்றார்.
அவனும், அந்த பெரியவர்கிட்ட போய், 'ஏங்க பெரியவரே... இங்கேயிருந்து பக்கத்துல இருக்கிற கிராமத்துக்கு போய் சேர, எவ்வளவு நேரம் ஆகும்'ன்னு கேட்டான்.
பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். ஆனா, பதில் எதுவும் சொல்லலே.
'சரி... பெரியவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல...' என்று, வந்த வழியிலேயே திரும்பி நடந்தான்.
கொஞ்ச துாரம் வந்தவுடனே, இவனை கூப்பிட்டார், பெரியவர்.
'நீ, இங்கேயிருந்து பக்கத்து கிராமத்துக்கு போய் சேர, ஐந்து நிமிஷம் ஆகும்...' என்றார்.
'ஏங்க பெரியவரே... இந்த பதிலை முதலிலேயே சொல்லாம, இப்ப ஏன் சொல்றீங்க?'ன்னான்.
'ஏம்ப்பா... நீ எவ்வளவு வேகமா நடக்கறேங்கிறதை பார்க்காம, எப்படிப்பா நீ, கிராமத்துக்கு போய் சேரக் கூடிய நேரத்தை சொல்ல முடியும்... அதனால தான் உன்னை நடக்க விட்டு, வேகத்தை பார்த்து, அதுக்கப்புறம் நேரத்தை சொன்னேன்...' என்றார், பெரியவர்.
சாக்ரடீஸ்கிட்ட வந்து, நடந்ததை சொன்னான், சிஷ்யன்
'அதுக்கு பேர் தான் புத்திசாலித்தனம்...' என்றார், சாக்ரடீஸ்.
இந்த புத்திசாலித்தனம் எல்லாருக்கும் வரணுங்கறதுக்காக தான், 'கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு'ன்னு பெரியவங்கள்லாம் புத்திமதி சொல்லிட்டிருக்காங்க. இருந்தாலும், அதையெல்லாம் யாரு கேட்கறாங்க...
இந்த காலத்து ஆசாமி ஒருத்தர், இன்னொருத்தரை பார்த்து, 'ஏங்க, ஒரு விமானம் இங்கேயிருந்து புறப்பட்டு, ரெண்டு மணி நேரத்துல மதுரைக்கு போய் சேருது. அப்படின்னா என்னோட வயது என்ன?' என்றார்.
உடனே, 'உங்களோட வயசு இருபது'ன்னார்.
'எப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க'ன்னார், இன்னொருவர்.
'வேற ஒண்ணுமில்லே... எங்க பக்கத்து வீட்டுலே ஒரு முழு பைத்தியம் இருக்கு. அதோட வயசு 40' அப்படின்னார், அவர்.
கேட்டு முடித்ததும், சிரிப்பை அடக்க முடியவில்லை. இனி, தொடர்ந்து தினமும் கேட்க வேண்டும் என, முடிவு செய்து விட்டேன்.
ப
ரோம் நாட்டு சக்கரவர்த்தி, ஜூலியஸ் சீஸர், பட்டத்துக்கு வந்ததும், முதலில் செய்தது, நிலச்சீர்திருத்தம் தான்.
ரோம் நகரத்தின் பரப்பளவு, 496 சதுர கி.மீ., இன்றைய சென்னையை விட, கொஞ்சமே பெரியது. ரோம், எதிரி நாடுகளை வென்றபோது, அந்நாட்டு மக்கள் பிழைக்க வழி தேடி, தலைநகரத்தில் குடியேறினர். ஓரளவு கால் ஊன்றியவுடன், தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல ஏங்கினர்.
இவர்கள் நிலங்களை பறித்து வைத்திருக்கும் பணக்காரர்களை பார்த்து, ஏமாற்றம், அதிருப்தி, விரக்தி, அதிர்ச்சி மற்றும் ஆவேசம் எனும் அடுத்தடுத்த கொதி நிலைகளுக்கு தள்ளப்பட்டனர்.
நிலப் பிரச்னை, ரோமின் எதிர்காலத்துக்கே வேட்டு வைக்கும் வீரியம் கொண்டதாக இருந்தது. பெருவாரியான நிலம், பணக்காரர்களிடமும், செனட்டர்களிடமும் இருந்தது.
அவர்களை பகைத்துக் கொள்ள முடியுமா?
தீர்வு காண்பது, கூர்முனை கத்தியின் மீது நடக்கும் முயற்சி. பணக்காரர்கள், வீரர்கள்,
பொதுமக்கள் ஆகிய மூன்று பிரிவினருமே பிடிவாதமாக இருந்தனர். அரசு எடுக்கும் தீர்வு நியாயமானதாக, பாரபட்சமற்றதாக இருந்தால் மட்டும் போதாது; முப்பிரிவினரிடமும் நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை, மூன்று தரப்பினரிடமும் ஏற்படுத்த வேண்டும். இதை மனதில் வைத்து, நில சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தார், சீஸர்.
சீஸர் கொண்டு வந்த சீர்திருத்தம் தீர்வு என்ன தெரியுமா...
* அரசு, யாரையும் அவர்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றாது. நில உரிமையாளர்கள் எவரும், தாங்கள் அந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் என்பதை நிரூபிக்க, ஆவணங்களை காட்ட வேண்டியதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர், ஒரே நிலத்துக்கு உரிமை கொண்டாடினால் மட்டுமே, அரசு தலையிடும்
* மத்திய தரைக்கடல் பகுதிப் போரில், கைப்பற்றிய நிலங்களின் ஒரு பகுதி, அந்த போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்
* அரசு, யாரிடமிருந்தும் நிலங்களை கைப்பற்றாது, விளை பொருட்களை தனக்கு விற்கும்படி வற்புறுத்தாது. நிலத்தை விற்க விரும்புபவர்களிடம் நியாய விலை கொடுத்து வாங்கும்
* இப்படி வாங்கும் நிலங்களுடன், அரசிடம் ஏற்கனவே இருக்கும் உபரி நிலங்களையும் சேர்த்து, புலம் பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக பகிர்ந்து அளிக்கப்படும்
* மத்திய தரைக்கடல் பகுதி போர் வெற்றியால் கிடைத்த பணத்தால் மட்டுமே, இந்த நிலக் கிரயச் செலவுகளை சமாளிக்க முடியும். நில சீர்திருத்தத்துக்காக எந்த வரிச் சுமையும், மக்கள் மேல் சுமத்தப்படாது.
சீஸரின் அரசியல் எதிரிகள் கூட, இந்த சீர்திருத்தத்தில் குறை கண்டுபிடிக்கவில்லை. அத்தனை நியாயமாக, தெளிவாக ஷரத்துக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
கி.மு., 46ல், சீஸர் அறிமுகப்படுத்திய பல சீர்திருத்தங்கள், ரோம் சாம்ராஜ்ஜியத்தின் தலைவிதியையே மாற்றி எழுதின.
