PUBLISHED ON : பிப் 06, 2022

படித்தது
'கொரோனா' தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி, எனக்காக தனி கேபினையும் ஒதுக்கித் தந்துள்ளார், பொறுப்பாசிரியர்.ஓய்வு நேரத்தில் படிக்க வேண்டி சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது.படித்ததில் பிடித்த நறுக், நொறுக் செய்திகள் உங்களுக்காக இதோ: 'கண்ணதாசன் குட்டி கதைகள்' நுாலிலிருந்து: நோய் நொடியின்றி, 90 வயது வரை, திடகாத்திரமாக இருந்த பெரியவரிடம், 'இந்த வயதிலும், இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே... எப்படி?' என்றார், நிருபர் ஒருவர்.'நான், வெற்றிலை போடுவதில்லை; புகை பிடிப்பதில்லை; மது அருந்துவதில்லை. அதனால் தான், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்...' என்றார். அந்த நேரத்தில், நாற்காலி உருளும் சத்தமும், 'ஹோ... ஹோ...' என்ற கூச்சலும் கேட்டது. 'மாடியில் என்ன சத்தம்...' என்று கேட்டார், நிருபர். 'அதுவா... என் தாத்தா தான், குடித்து விட்டு, நிதானம் இல்லாமல் இருக்கிறார்...' என்றார், அந்த பெரியவர். பொதுவாக, விமானத்தில் விலங்குகளுக்கு அனுமதி இல்லை. முதல் வகுப்பு பயணியர் சிலர், சிறப்பு அனுமதி பெற்று, வளர்ப்பு விலங்குகளை தங்களுடன் அழைத்துச் செல்வர்.பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ், அவர் பயணித்த விமானத்தில், பாதுகாப்புக்காக, தன் நாயையும் அழைத்து வந்தாராம். அந்த நாய், தன்னை கடித்து விட்டது என கூறி, 21 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டார், ஒருவர். இங்கிலாந்து தலைநகர் லண்டன், மேபேர் பகுதியில், டார்செயிஸ்டர் ஹோட்டல் உள்ளது. இங்கு, சலுான் கடை நடத்தி வரும், கென்மோடெர்டு என்பவரிடம் தான், மாதம் ஒருமுறை முடி வெட்டிக் கொள்வார், புருனை நாட்டு சுல்தான்.இவர், விமானத்தில் பறந்து, நட்சத்திர ஹோட்டலில் தங்கி முடி வெட்டி திரும்ப ஆகும் செலவு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்தியாவை சேர்ந்த காசி சமத்தர் என்பவர், உலகிலுள்ள, 194 நாடுகளுக்கு சென்று, உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, இவற்றில், 70 நாடுகளுக்கு தன் மனைவியையும் அழைத்துச் சென்றுள்ளாராம். பலாவை குறிக்கும், 'ஜாக்' என்ற ஆங்கில வார்த்தை, 'ஜாக்கா' என்ற போர்த்துக்கீசிய வார்த்தையிலிருந்து உருவானதாகும். இவ்வார்த்தை, 'சக்க' என்ற மலையாள வார்த்தையி ன் அடிப்படையில் உருவான சொல். அக்காலத்தில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், அலங்கார செடியாக வளர்க்கப்பட்டது, அன்னாசி. பிரபுக்கள் இதை கண்ணாடி கூண்டுகளில் வளர்த்தனராம்.முதன் முதலில் தக்காளி, 'லவ் ஆப்பிள்' என்ற பெயரில், அழகு செடியாகத் தான் வளர்க்கப்பட்டது. 19ம் நுாற்றாண்டில் தான் தக்காளி, உணவாகப் பயன்படுத்தப்பட்டது.முந்திரி மரம், இந்தியாவுக்கு மண்ணரிப்பை தடுக்கும் மரமாகவே முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது.அதிகமான மக்களால் உண்ணப்படாததாக பனம் பழம் இருந்தாலும், இதிலிருந்து, 'ஜாம், ஜெல்லி' தயாரிக்கலாம். வெளிநாடுகளில் இதிலிருந்து ஒரு வகையான, 'ஷாம்பெய்ன்' எடுக்கப்படுகிறது.உலகில் சுமார், 83 நாடுகளில் மாம்பழம் பயிரிடுகின்றன. இவற்றில், இந்தியா தவிர, மெக்சிகோ, பாகிஸ்தான், சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் மாம்பழ உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர், ஜான் எப் கென்னடி, மாயக்குரல் மன்னராக இருந்தவர். அதாவது, பொம்மை அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைத்து, அது பேசுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் கலையில் வல்லவர். 'செஸ்' விளையாட்டில் பயன்படுத்தப் படும், 'செக்மேட்' என்ற வார்த்தை, 'ஷா மேட்' என்ற பாரசீக மொழியில் இருந்து வந்தது. இதன் அர்த்தம், மன்னர் இறந்து விட்டார் என்பதாகும். சீட்டுக்கட்டில் உள்ள நான்கு ராஜாக்களும், வரலாற்றில் புகழ்பெற்ற நான்கு முக்கிய மன்னர்களை குறிக்கின்றன. 'ஸ்பேடில்' உள்ளது, டேவிட் மன்னர்; 'க்ளாவர்'இல் உள்ளது, மகா அலெக்சாண்டர்; 'ஆட்டினில்' உள்ளது, சார்ல்மேக்னெ; 'டயமண்டில்' உள்ளது, ஜூலியஸ் சீசர். ஒரு பூங்காவின் முன் நிறுவப்படும் குதிரை வீரன் சிலையில், அதன் முன்னங்கால்கள் இரண்டும் துாக்கியிருந்தால், அந்த வீரன் போரில் இறந்து விட்டான் என்று அர்த்தம். இதுவே, குதிரையின் ஒரு முன்னங்கால் தரையில் ஊன்றியிருந்தால், அந்த வீரன் போரில் பட்ட காயத்தால் இறந்தான் என்று அர்த்தம். ஒருவேளை, குதிரையின் நான்கு கால்களும் ஊன்றியிருந்தால், அந்த வீரன் இயற்கையாக இறந்தான் என்று அர்த்தம். மேரி கியூரி, ரேடியம் கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுக்கு பயன்படுத்திய நோட்டு புத்தகங்களில் இப்போதும் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய அருங்காட்சியகத்தில் நோட்டுப் புத்தகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி பார்க்க விரும்பினால் அவர்களுடைய சொந்த பொறுப்பிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். வாசுவும், அவன் நண்பன் மணியும், 1980ம் ஆண்டு அடுத்தடுத்த நாட்களில் பிறந்தனர். தன், 23வது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடினான், வாசு.நண்பன் மணியும், வாசுவை போலவே பிறந்த நாளை கொண்டாட நினைத்தான். ஆனால், அவனால் முடியவில்லை.என்ன காரணம்... உங்களால் சொல்ல முடியுமா?
விடை: வாசு பிப்., 28ம் தேதி பிறந்தான். மணி, பிப்., 29ம் தேதி பிறந்தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டில் தான், பிப்ரவரிக்கு, 29 நாட்கள். 2003ம் ஆண்டு லீப் ஆண்டு இல்லை. அதனால், மணியால் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை. நகர வங்கிக்குள் புகுந்தான், ஒரு கொள்ளைக்காரன்.வானத்தை பார்த்து சுட்டான். சரணாகதி கைகளுடன் மக்கள் மிரண்டனர். கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.இருந்த நகை, பணத்தையெல்லாம் வாரிச் சுருட்டி, கிளம்பினான்.கிளம்பும் முன் ஒருவனிடம், 'நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா...''ஆமாம்...' என ஆமோதித்து, தலையாட்டியவனின் நெற்றிப் பொட்டில் சுட்டான்.சுருண்டு விழுந்தான்.அடுத்து, இன்னொருவனின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை அழுத்தி, 'நீ பார்த்தாயா...' என்றான், திருடன்.'இல்லை... நான் பார்க்கவில்லை. இதோ, என் மனைவி தான் பார்த்தாள்...' என்றான்.மனைவி மீது எவ்வளவு அன்பு பாருங்கள்!
