தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே - ப

ஜப்பானை சேர்ந்த நடிகை ஒருவர், நம்மூர் பொன்னி ரக அரிசியை, 'முருகா' என்ற பெயரில், தன் சொந்த நிலத்தில் விளைவித்து, சமீபத்தில், தமிழகத்துக்கு எடுத்து வந்து, பல கோவில்களுக்கு நன்கொடையாக கொடுத்துச் சென்ற செய்தியை சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர், உதவி ஆசிரியர்கள்.

'நம்மூரில், பழமையான நெல் ரகங்களை மீட்டு எடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பது போல், நம்மைப் போல் அரிசி உணவை விரும்பி உண்ணும் ஜப்பானியர்களும், விதவிதமான அரிசி ரகங்களை விளைவிக்க விரும்புகின்றனர் போலும்...' என்று, நினைத்துக் கொண்டேன்.

அப்போது, ஜோல்னா பை சகிதம் உள்ளே வந்தார், 'திண்ணை' நாராயணன்.

ஏதாவது படிக்கலாமே என்று, அவரது பையை துழாவியதில், தொ.பரமசிவன் என்பவர் எழுதிய, 'தமிழர் உணவுப் பண்பாடு' என்ற புத்தகம் கிடைத்தது. புரட்டி பார்த்தேன். அதில் ஒரு சிறு பகுதி இது:

சங்க இலக்கியங்களில், மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி மற்றும் கும்மாயம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கடவுள் பக்தி பெருக, உணவு வகையிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

லட்டு, எள் உருண்டை, அப்பம் போன்றவற்றை பற்றி, தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார், பெரியாழ்வார். சோழர் கால கல்வெட்டுகளில் சர்க்கரை பொங்கல், பணியாரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

'காய்கறி' என்ற சொல், காய்களையும், மிளகையும் சேர்த்து குறிக்கும். ஏனெனில், தமிழர் சமையலில் உறைப்பு சுவைக்காக, கறுப்பு மிளகை மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.

பண்டைய தமிழகத்தில், ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய் சோறு, புளிச் சோறு, பாற் சோறு, வெண் சோறு என, பலவிதமான சோறு உண்ணப்பட்டிருக்கிறது.

நெல், அரிசி, வரகு அரிசி, தினை, மூங்கில் அரிசி ஆகியவைகளை உணவுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

மருத நில மக்கள், வெண்ணெய் சோற்றினை, சுவையான நண்டுக் கறியுடன் சேர்த்து பரிமாறி இருக்கின்றனர். கைக்குத்தல் அரிசியால் சோறாக்கி, வயல்களில் பிடித்த நண்டையும், பீர்க்கங்காயையும் சேர்த்து சமைத்துள்ளனர். வரகரிசிச் சோற்றை, அவரைகாய் பருப்புடன் கலந்து உண்டு வந்துள்ளனர், உழவர்கள்.

சிவப்பரிசிச் சோறும், உடும்புக் கறி பொரியலும் சாப்பிட்டுள்ளனர், குறிஞ்சி நில மக்கள். 'வெந்தது, வேவிறைச்சி' என்றும், சுட்டது, சூட்டிறைச்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வரகரிசிச் சோற்றுடன், பருப்பு கலந்து உண்டிருக்கின்றனர், முல்லை நில மக்கள். தினை அரிசிச் சோறும், பாலும் சேர்த்த பால் சோற்றினை சாப்பிட்டிருக்கின்றனர்.

நெய்தலில், மீனும், நண்டும், சோறுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளனர். சுட்ட கருவாடும், ஆமை இறைச்சியும் சமையலில் இடம் பிடித்துள்ளது.

மான் கறியும், உடும்பும், புளியும், பசு மோரும் சோற்றுடன் சாப்பிட்டுள்ளனர், பாலை நில மக்கள்.

- இப்படியாக விவரித்து செல்கிறது, அப்புத்தகம். இன்னொரு நாள் சாவகாசமாக முழுமையையும் படிக்க வேண்டும் என்று, நாராயணன் அனுமதியுடன், புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டேன்.



ஜோதிட சமாசாரங்களில், தமிழ்வாணனுக்கு அதிகம் ஆர்வம் இருந்தது. அதற்கு தீனி போடும் வகையில், ஜோதிட சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை படித்து, தன் ஜோதிட அறிவை பெருக்கிக் கொண்டார்.

குறிப்பாக, கை ரேகைக்கே அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். பல வெளிநாட்டு கை ரேகை மேதைகள் எழுதிய புத்தகங்களை கரைத்துக் குடித்து, ஏப்பம் விட்டிருந்தார், தமிழ்வாணன். அதற்கு தகுந்தாற் போல, அவர் சொல்லிய விஷயங்கள் துல்லியமாய் பலித்தன.

பல வி.ஐ.பி.,களின் கைரேகைகளையும் படித்து, எதிர்காலத்தை துல்லியமாக கணித்திருந்தார்.

ஒருநாள், காரில் சென்று கொண்டிருந்தவர், திடீரென ரோட்டின் ஓரம் காரை நிறுத்தினார். தன் தொப்பியையும், கண்ணாடியையும் கழற்றி காருக்குள்ளேயே வைத்துவிட்டு, சாலையை கடந்து, மரத்தடியில், 'இவ்விடம் கைரேகை பார்க்கப்படும்' என்ற, 'போர்டு' முன் அமர்ந்திருந்தவனை நோக்கிச் சென்றார்.

அவன் அருகில், கருமாரியம்மன் படமும், லென்ஸ் ஒன்றும் இருந்தது. கையில் மந்திரக்கோல் போன்ற தோற்றத்தில் சிறிய கம்பு ஒன்றை வைத்திருந்தான்.

தமிழ்வாணனை பார்த்ததும், 'வாங்க சாமி, வாங்க... உங்க ரேகையை பார்த்து நடந்தது, நடக்கிறது, நடக்கப் போறது எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்கிறேன்...' என்றான்.

விஷமமாய் சிரித்தபடி கையை நீட்டினார்.

அருகிலிருந்த சாமி படத்தை வணங்கி, லென்சை கையில் எடுத்துக் கொண்டான். அதன் வழியே அவர் கையை உற்று நோக்கினான். ஐந்து நிமிடத்திற்கு பின், 'சாமி... நீங்க கவலையே படாதீங்க. உங்க மனசுல நினைச்ச காரியம், இன்னும் ரெண்டு நாள்ல நிறைவேறப் போகுது. உங்க குடும்பம்...'

பாதியில் இடைமறித்து, 'எனக்கு இந்த கதை, கட்டுரை எல்லாம் வேண்டாம். நான் இப்போ கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு...' என்றார், தமிழ்வாணன்.

'என்ன கேட்கணுமோ கேளுங்க சாமி...'

'என் கையில் செவ்வாய் ரேகை எங்கே இருக்கு...'

அவன் முகம் மெதுவாய் மாறத் துவங்கியது. மீண்டும் லென்ஸ் மூலம் ஆராயத் துவங்கினான்.

'என்ன... கிடைச்சுதா?'

'இதோ இதோ... சுண்டு விரலுக்கு கீழே படுக்கை வசத்துல ஒரு ரேகை போகுது பாருங்க, அதுதான் செவ்வாய் ரேகை...' என்றவனின் குரலில், லேசான தடுமாற்றம் தெரிந்தது.

அவனை ஊடுருவும் பார்வை பார்த்தார், தமிழ்வாணன்.

'என்ன சாமி... அப்படி பார்க்குறீங்க?'

'ரேகை சாஸ்திரம் பற்றி தெரியுமா உனக்கு?' குரலில் கடுமை ஏறியிருந்தது.

'என்னங்க, மிரட்றீங்க...'

'ஏம்ப்பா... திருமண ரேகையை காண்பிச்சு, செவ்வாய் ரேகைன்னு சொல்ற... உன்னைய என்ன பண்றது, கட்டை விரலுக்கு கீழே போறது தான் செவ்வாய் ரேகை. சரி... சுக்கிர வளையம் எங்கே இருக்குன்னு, சொல்லு...'

அவன், பொறிக்குள் மாட்டிக்கொண்ட எலி போல் தவித்தான்.

'என்னங்க... பலன் கேட்பீங்கன்னு பார்த்தால், கேள்வி கேட்கிறீங்க...' என்றவன், தமிழ்வாணனின் காலை பற்றி, 'ஐயா சாமி... என் வயித்து பொழப்பை கெடுத்துடாதீங்க...' என்றான்.

'பொழைக்க எத்தனையோ வழி இருக்கு... ஒரு தெய்வீக கலையை வச்சு, ஏன் ஊரை ஏமாத்துறீங்க... இதோ பாரு, இந்த ஏரியாவில் உன்னை நான் பார்க்கவே கூடாது. வேற ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சுக்கோ...' என்றார்.

அடுத்த நொடி, தன் பொருட்களை அள்ளிக் கொண்டு, தப்பித்து ஓடினான்.

சிரித்தபடியே காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார், தமிழ்வாணன்.

இனி, எங்கேயாவது மரத்தடியில், 'இங்கு கை ரேகை பார்க்கப்படும்' என்ற பதாகை தென்பட்டால், இந்த சம்பவம் நினைவுக்கு வரும்தானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us