தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணியின் பதில்கள்

அந்துமணியின் பதில்கள்

அந்துமணியின் பதில்கள்


PUBLISHED ON : பிப் 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*எஸ்.சாந்தா, கோட்டையூர்: எந்த ஏர்-லைன்சின் சேவை உங்களுக்கு பிடித்து இருக்கிறது?

இந்தியாவில் இருந்து கிழக்காசிய நாடுகளானாலும் சரி, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதானாலும் சரி... எல்லா ஏர்-லைன்சிலும் சேவை மட்டம் தான். ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் எல்லா பெரிய விமான நிறுவனங்களின் சேவையும் அபாரம்தான். அதுவும், உடல் பருத்த பெரிய விமானங்களில் முதல் அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்புகள் என்றால் சுகமோ சுகம் போங்கள்!

***

*பி.ரஞ்சித், கள்ளக்குறிச்சி: உலகிலேயே அழகிய பெண்களைக் கொண்ட நாடு; உங்கள் கண்ணோட்டத்தில் எது?

நம் நாட்டு பெண்கள்தான்! (இது உதையில் இருந்து தப்ப...) கிரீஸ், வெனிசுலா, மொராக்கோ நாட்டுப் பெண்கள் செதுக்கிய சிற்பங்கள் என்றால் மிகையாகாது!

***

** ஆர்.அகல்யா, காரைக்குடி: ஒன்று அல்லது இரண்டு ரூபாயே அடக்கம் ஆகும் இங்க் ரீபிள்கள் தற்போது, 7 முதல் 10 ரூபாய் வரை கொள்ளை விலையில் விற்கப்படுகிறதே... இதற்கு நுகர்வோர் மன்றம் செல்ல முடியுமா?

விலை அதிகம் என்றால் அதை ஏன் வாங்குகிறீர்கள்? இங்க் பேனா பயன்படுத்தலாமே; ஏன், இன்னும் விலை குறைவான ரீபிள்களும் கிடைக்கத்தானே செய்கின்றன;. அதை வாங்கலாமே! எதற்கெடுத்தாலும் நுகர்வோர் கோர்ட் படியே றினால், முடிவே இல்லாமல் போய்விடும்; வக்கில்களின் பர்ஸ் பருத்துவிடும்!

***

*ஏ.பாலாஜி, திருநகர்: சிறுகதை எழுத ஏற்ற நேரம் எது?

'மூடு' இருக்கும் நேரமெதுவோ, அப்போதெல்லாம் எழுதலாம். இதற்கு நேர, காலமெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!

***

** சி.பெருமாள், ஜோதிபுரம்: மனிதனை, மனிதன் பரஸ்பரம் நேசிக்கக் கற்றுக் கொள்வது எப்போது?

ஒரு இழப்பு ஏற்படும்போது, சோதனை - கஷ்டங்கள் - தோல்வியை சந்தித்தபின் பரஸ்பரம் உதவி - நேசிக்கக் கற்றுக் கொள்கிறான் என்பது என் அனுபவ உண்மை!

***

*என்.அருண்குமார், முத்தியால்பேட்டை: எனக்கு கெட்ட, கெட்ட கனவாக வருகிறது... இது நல்லதில்லையாமே!

இது நல்லது - கெட்டது என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆழ் மனதில் புதைந்துள்ள பயங்களும், சந்தேகங்களும் இதுபோன்ற கனவுகளை வரவழைக்குமாம்! உறங்கும் முன் நல்ல சிந்தனைகளைத் தரக் கூடிய புத்தகங்கள் படியுங்கள்... இது போன்ற கனவுகள் வராது!

***

** வி.ரகுநாதன், அம்மாபேட்டை: தொழில், பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகளோடு இந்தியா போட்டி போட முடியவில்லை... இதற்கு காரணம் கடின உழைப்பு, ஒருமைப்பாட்டு உணர்வு மக்களிடம் இல்லையா அல்லது தாம் முன்னேறினால் போதும் என்ற மக்களின் சுயநலம் காரணமா?

'போட்டி போட முடியவில்லை...' என்ற ஸ்டேட்மென்ட்டை ஏற்றுக் கொள்ள முடியாது; வளர்ந்த நாடுகளுக்கு சமமாக முன்னேறவில்லை எனச் சொல்லலாம். நம் மக்களிடம் உழைக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நிறைய இருக்கிறது. ஆனால், வெள்ளைக்காரன் காலத்து சிவப்பு நாடா சட்டங்கள் சிலவற்றை இன்னும் நம் அரசு கடைபிடிப்பதால், வேகமான தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சிவப்பு நாடா முட்டுக் கட்டைகளை உடைத்து எறிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் நம் அரசு.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us