தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தேர்வுக்கு தயாராகிறீர்களா... (2)

தேர்வுக்கு தயாராகிறீர்களா... (2)

தேர்வுக்கு தயாராகிறீர்களா... (2)


PUBLISHED ON : பிப் 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தேர்வு நாளன்று, காலையில், புதிதாக எதையும் படிக்க வேண்டாம். அதனால், எந்த பலனும் இல்லை. முதல் நாள் இரவு வரை, தேர்விற்காக படித்த பாடங்களை, அதற்குரிய குறிப்புகளை நினைவுபடுத்திப் பார்த்தாலே போதுமானது.

* பல் துலக்கி, குளித்து, வீட்டில் சமைத்த சாப்பாட்டை தேவையான அளவில் சாப்பிட்ட பின், புத்துணர்வோடு தேர்வறைக்கு செல்லுங்கள். எதுவும் சாப்பிடாமல், காலி வயிற்றுடன் செல்லக் கூடாது.

* 'ஹார்மோன்' சுரப்பு தானாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதால், பசி அதிகமாகும்போது, 'அட்ரினலின்' என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பித்து விடும். அதனால், நம் கவனம் சிதற ஆரம்பிக்கும்.

* கடைசி நேரத்தில், அவசர அவசரமாக கிளம்பாமல், சற்று முன்னதாகவே, தேர்வுக்கு கிளம்பிச் செல்ல வேண்டும். தேர்வு நடைபெறும் இடத்தில், குறைந்தது, அரை மணி நேரத்திற்கு முன் இருக்கும்படி செல்வது, கடைசி நேர பதற்றத்தை குறைக்கும்.

* தேர்வறைக்குள் நுழையும் முன், மற்ற மாணவர்களுடன் பாடங்களை பற்றி விவாதிப்பதிலோ, அவன் என்ன படித்துள்ளான், இவன் என்ன படித்துள்ளான் என்பதை அறிந்து கொள்வதிலோ... அந்த கேள்வி வருமா, இந்த கேள்வி வருமா என, பிறரிடம் கேட்பதிலோ ஆர்வம் காட்டாதீர்.

* தேர்வு அறைக்குள் நுழைவதற்கான கடைசி மணி அடிக்கும் வரை, புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்காமல், தேர்வு அறை திறந்தவுடன், உள்ளே சென்று அமர்ந்து விடுங்கள். தேர்வறை மேஜையில் ஏதாவது எழுதப்பட்டுள்ளதா, பேப்பர் அல்லது துண்டு சீட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

* அப்படி ஏதாவது இருந்தால், தேர்வறை மேற்பார்வையாளரின் கவனத்துக்கு எடுத்து செல்வது முக்கியம். இல்லையெனில், யாரோ செய்த தவறுக்கு, நாம் பலியாக வேண்டியிருக்கும். அதேபோல, நம் நடவடிக்கைகளும், மேற்பார்வையாளருக்கு சந்தேகத்தை உருவாக்கிவிடாதபடி இருப்பது அவசியம்.

* தேர்வுக்காக எடுத்து சென்ற பொருட்களை மேஜை மீது வைத்த பின், இறுக்கமின்றி தளர்வான நிலையில் அமர்ந்து, மூளையை துாண்டுவதற்கான சுவாச பயிற்சியை இரண்டொரு முறை செய்யலாம். இதனால், மூளை முழு விழிப்பு நிலைக்கு வந்துவிடும்.

* மற்ற சமயங்களை விட, தேர்வு நாளன்று, தொடர்ச்சியாக எழுத வேண்டியிருக்கும். இதனால், விரல்களில் வலி, விரல்களை மடக்க முடியாமை போன்ற தொந்தரவுகள் வரலாம். இதை தவிர்க்க, சிறிது நேரம் மணிக்கட்டு பகுதிகளை சுழற்றியும், விரல்களை நீட்டியும், மடக்கியும் பயிற்சி செய்வது நல்லது.

* விடைத்தாளில், 'மார்ஜினை' மடித்து அல்லது பென்சிலால் கோடிட்டு கொள்ளலாம். 'மார்ஜினின்' அளவு மிக பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 'மார்ஜின்' இல்லாத விடைத்தாள்களை பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை.

* விடைத்தாளில் உங்களுக்குரிய பதிவு எண்ணை தெளிவாகவும், தவறின்றியும் குறித்துக் கொள்ளவும். ஆரம்ப செயல்பாடுகளை செய்து முடித்த பின், கேள்வித் தாளுக்காக காத்திருங்கள்.

* கேள்வித்தாள் கைக்கு வந்தவுடன், மறுகணமே எழுத ஆரம்பிக்காமல், முதலில், 10 நிமிடங்கள் கேள்வித்தாளை முழுமையாக வாசிக்கவும்.

* கேள்விகளுக்கு எந்த வகையில் விடையளிப்பது, ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கிக் கொள்வது என, முடிவு செய்தல் வேண்டும்.

* கேள்வி எண்ணை மட்டும் தெளிவாக விடை தாளில் குறிப்பிட்டால் போதுமானது. கேள்வி எண்ணை குறிப்பிடுவதில் நிகழும் தவறு, மதிப்பெண்களின் சதவிகிதத்தையே குறைத்து விடும்.

கேட்கப் பட்டதற்கும் அதிகமான கேள்விகளுக்கு விடை எழுதுவதையும், ஒரே கேள்விக்கான விடையை இரண்டு இடங்களில் எழுதுவதையும் ஒருபோதும் செய்யக் கூடாது. திருத்துபவர் இதை கண்டுபிடித்து விடும்போது, அவரால், உங்களை தேர்வில் தோல்வியடைய செய்துவிட முடியும்.

* விடை முடிந்ததற்கான அடையாளக் கோடுகளை, ஒவ்வொரு விடையின் இறுதியிலும் போட்டுள்ளோமா என, கவனிக்க வேண்டும். தவறுகள் ஏதுமில்லை என உறுதி செய்த பின், பக்க எண்ணின்படி விடைத்தாளை வரிசைப்படுத்தி, அதன் மேல் மூலையில் துளையிட்டு, நுாலால் முடிச்சிட்டு கொடுத்து, அறையை விட்டு வெளியேறுங்கள்.

* தேர்வறையை விட்டு வந்தவுடன், எழுதிய விடைகளை சரிபார்க்கவோ, நண்பர்களிடம் விவாதிக்கவோ வேண்டாம். ஏனென்றால், ஏதாவது ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்திருப்பது தெரிந்தால், மனம் அதையே அசை போட்டுக் கொண்டிருக்கும்.

* இதனால், உண்டாகும் மனச்சோர்வு, அடுத்த தேர்விற்கான தயாரிப்பில் இருக்க வேண்டிய உற்சாகத்தை குறைத்து விடும். எனவே, ஒரு தேர்வு முடிந்ததுமே, அந்த பாடம் சார்ந்த எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அடுத்த தேர்விற்கான பாடங்களை படிக்க தயாராகுங்கள்.

நன்றாக படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

* சில சமயங்களில், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களால், படிக்க முடியாத, தேர்வு எழுத முடியாத நிலை உருவாகலாம்

* தேர்வுக்கு தயாராகும் நாட்களில், ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், சோறு ஆகிய மிதமான உணவுகளை சாப்பிடலாம். இதனால், உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகமாக கிடைப்பதோடு, செரிமானத்திற்கு குறைவான ஆற்றலே செலவிடப்படும்

* இருமல், வயிற்றுப்போக்கு, ஜீரண கோளாறு, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளை தரக்கூடிய எண்ணெயில் பொறித்த பலகாரங்களை ஒதுக்கி, முளை கட்டிய தானிய வகைகள், பழங்கள், வெள்ளரி, கேரட் போன்றவைகளை சாப்பிடலாம். பேரீச்சை, தேன் ஆகியவை உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதில், முக்கிய பங்கு வகிக்கின்றன

* படிப்பதற்கென அதிக நேரத்தை செலவிட்டு, நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால், அஜீரண கோளாறுகள் உருவாகும். எனவே, சரியான நேரத்தில், சரிவிகித அளவு உணவை சாப்பிடுவது அவசியம் அதிக நேரம் விழித்து படிக்கும் சமயங்களில், உடல் சூடாகும். உடல் சூட்டை குறைக்க, இளநீர், மோர் மற்றும் பழச்சாறு பருகலாம். மிதமான இடைவெளியில் கொஞ்சமாக தண்ணீர் பருகலாம்

* அதிகப்படியான வெப்பத்தை உண்டாக்கும் பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், வைட்டமின் மாத்திரைகள், தேவைக்கு அதிகமான குளுக்கோஸ் ஆகியவைகளை, முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

ஞாபக சக்தி அதிகரிக்க...



தேர்வு சமயத்தில், எல்லா குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்னை, எத்தனை முறை படித்திருந்தாலும், மனதில் பதியாமல் மறந்து விடும். இந்த குறை நீங்க, அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைசாக அரைத்து, தேனில் மூன்று சிட்டிகை கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

- எஸ். பரணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us