PUBLISHED ON : அக் 13, 2013

'கூகுள்' இணையதளத்தை தட்டினால், அடுத்த வினாடியே, நமக்கு வேண்டிய தகவல் கிடைக்கும். அரியானாவைச் சேர்ந்த, ஐந்து வயது சிறுவன், கூகுள் இணையதளத்துக்கு, இணையாக, அன்றாட நிகழ்வுகள், அரசியல் உள்ளிட்ட, பொது அறிவு குறித்த, எந்த கேள்வியை கேட்டாலும், சற்றும் யோசிக்காமல், அடுத்த விநாடியே, 'புல்லட்' வேகத்தில் பதில் அளிக்கிறான். அந்த சிறுவனின் பெயர், கவுடில்யா.
நாடுகளின் பெயர், மொழி, நிலப்பரப்பு, மலை, கடல், கிரகங்கள், மக்கள் தொகை என, எந்த கேள்விகளுக்கும், அதிரடியாக பதில் அளித்து, அசத்துகிறான். இதனால், இவனை, 'கூகுள் பாய்' என, செல்லப் பெயர் வைத்து அழைக்கின்றனர். 'இந்த சிறு வயதில், எப்படி உன்னால், இப்படி பதில் அளிக்க முடிகிறது' என, அவனிடம் கேட்டால்,'யாராவது, என்னிடம், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு பதில் அளிக்க முடியாமல் போனால், ரொம்ப அவமானமாக இருக்குமல்லவா... அதனால் தான், எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்...' என, சர்வ சாதாரணமாக கூறுகிறான்.
— ஜோல்னா பையன்.

