sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பயணங்களின் முடிவில்!

/

பயணங்களின் முடிவில்!

பயணங்களின் முடிவில்!

பயணங்களின் முடிவில்!


PUBLISHED ON : செப் 17, 2017

Google News

PUBLISHED ON : செப் 17, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன.

உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று!

உண்மை தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன், குருட்டு தைரியத்தில், 'சுமி ஸ்டிச்சஸ்' என்று ஆரம்பித்தது, இன்று பெயர் விளங்கும் கடையாக வளர்ந்து வருவதில் பெருமை தான். மகன் மழலையாக மடியில் இருக்க, கணவன் மறைந்தபோது, மனம் முழுவதும், இருள் ஆக்கிரமித்திருந்தது. மூதாட்டியான தாயும், மகனும் அவளின் கைப்பிடித்து நின்ற போது, அவள் தன் தையல் கலையைத் தான் நம்ப வேண்டி வந்தது.

இரவு, பகல் பாராமல், தையல் மிஷினுடன் விரல், மனம், முதுகு என்று ஒப்புக் கொடுத்ததற்கு, காலம் இப்போது பலனைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

கல்லூரி பெண்கள், டிசைனர் ரவிக்கைகள் தைக்கவும், கல்யாணப் பெண்கள், சோளிகளுக்கு எம்பிராய்டரி செய்யவும் தேடி வரத் துவங்கியுள்ளனர். மெல்ல கடையை மெயின் பஜார் பக்கம் மாற்றினால், இன்னும் வாடிக்கையாளர்கள் வரலாம்; இன்னொரு உதவியாளரைப் போட்டுக் கொள்ளலாம்; லைனிங் துணிகள், பால்ஸ், வண்ணக் கற்கள் என்று இங்கேயே வாங்கி வைத்தால், இன்னும் சுலபமாக இருக்கும். இந்த கனவுகள் நிறைவேற, நிறைய உழைக்க வேண்டும்.

இப்போது தான், கீழே தரையும், மேலே ஒரு கூரையும், மூன்று வேளை சாப்பாடும் உறுதிபட்டிருக்கிறது. வாடகையை முதல் தேதியே கொடுக்க முடிகிறது. அத்துடன், நூல், கத்திரி, மிஷன் சர்வீஸ், பாபின் என்று வாங்கி வைக்கிறாள். 40 ரூபாய் கொடுத்து, அம்மாவுக்கு மூட்டு வலி தைலம் வாங்க முடியாமல் இருந்த காலம் மாறி, அம்மாவைச் சுற்றி தைலப் பாட்டில்கள் உருள்கின்றன.

மெதுவாக மகளின் அருகில் வந்து, ''சுமி... ஏன் டல்லா இருக்கே... என் மீது கோபமா...'' என்றாள், அம்மா.

''சிட்டி எங்கம்மா?''

''விளையாடப் போயிருக்கான்...''

''உண்மைய சொல்லு...''

''கடைக்குப் போய்ட்டு, அப்படியே கிரிக்கெட் விளையாடிட்டு வரேன்னு சொன்னான்.''

''பணம் கேட்டானா?''

''ஆமா... இல்லலே...''

''தடுமாறாம சொல்லு; எவ்வளவு கேட்டான், எவ்வளவு கொடுத்தே?''

''என்ன சுமி... வக்கீல் மாதிரி குறுக்குக் கேள்வி கேட்குறே... நூறு ரூபா கேட்டான்; அவன் பிரெண்டுக்கு பொறந்த நாளாம்... பானிபூரி வாங்கித் தரணுமாம்; அவன், இவனுக்கு நிறைய உதவி செய்வானாம்; அதான் கொடுத்தேன்,'' என்றாள்.

''பிறந்த நாளுக்கு செய்யட்டும்மா... ஆனா, இதே மாதிரி ரெண்டு நாள் முன், ஐஸ்கிரீம் சாப்பிட, நூறு ரூபா கேட்டான். போன வாரம், டி - ஷர்ட்ல ஜூனியர் சேகுவாரா படம் போடுறதுக்கு நானூறு ரூபா கேட்டான். இவ்வளவு ஆடம்பர செலவு நமக்கு சரியா வருமா... அதுவும் எட்டாவது படிக்கிற வயசுல...''

பெருமூச்சு விட்டு, ''தப்பு தான்; ஆனா, காலம் மாறிப் போச்சுங்கிறத நீ புரிஞ்சுக்கணும். தயிர் சாதம், மாவடுன்னு நீ படிச்சே; பழைய சாதம், வெங்காயம்ன்னு நான் படிச்சேன். இப்ப அப்படியா... லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல்ன்னு, 'டிவி'யில கிச்சன் ஷோ ஒடுது... தெருவுக்குத் தெரு, பத்து ஸ்நாக்ஸ் கடைகள்... கூட படிக்கிற பசங்க, விதவிதமா வாங்கி சாப்பிடுறாங்க... சிட்டிக்கு, மனசு ஏங்காதா சொல்லு,'' என்றாள், அம்மா.

''ஊர் எப்படி வேணா இருக்கட்டும்... நம்ம நிலைமை என்னான்னும், காசோட மதிப்பும் அவனுக்கு தெரிய வேணாமா... ஒவ்வொரு ரூபாய்க்குப் பின் இருக்கிற வியர்வை தெரியணும்... மந்திரத்துல விழாது மாங்காய்ன்னு புரியணும். கஷ்டம் தெரிஞ்சு வளர்ற குழந்தை தான், வாழ்க்கையில ஜெயிக்கும்,'' என்றதும், ''சரி... நான் போய் இட்லி வைக்கிறேன்; சிட்டி பசியோட வருவான்... பேசிக்கலாம்,'' என்று, பட்டும் படாமலும் எழுந்து போன அம்மாவை, கவலையுடன் பார்த்தாள், சுமி.

மனதில், 'சிட்டியை நாம் சரியாகக் கையாளவில்லயோ அல்லது குருட்டுப் பாசமா... பட்டாம் பூச்சி பருவம் அல்லவா இந்த வயது. பாம்பைத் தாண்டுகிற வேகம்; மழையில் ஆடுகிற ஆர்வம்; நண்பன், இசை, சினிமா, கிரிக்கெட், உணவு என்று இளமையின் துள்ளல் ஆரம்பமாகும் வயது. விளையாட்டுப் பிள்ளையாய் இருந்து, மெல்ல மெல்லத் தான் விவரம் புரியும். ஆனால், சிட்டிக்குள் அப்படி எந்தப் புரிதலும் இல்லயே... 'உழைப்பு உன் வேலை; கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பது உன் கடமை; வாங்கி, அனுபவிப்பதெல்லாம் என் உரிமை...' என்று தானே மிதக்கிறான்...

'நேரிடையாக சொல்லியாச்சு. மறைமுகமாக, கோபமாக, வருத்தமாக, கெஞ்சலாக, அதட்டலாக என்று, அத்தனை வழிமுறைகளில் முயன்று பார்த்தாச்சு. கேட்பதாகவே இல்லயே... சரியான விஷயங்கள, இந்த வயதில் விதைக்காவிட்டால், பின்னால் தவறான விஷயங்களைத் தானே அறுவடை செய்ய வேண்டி வரும்...' என்று பலவாறு புலம்பினாள்.

''அம்மா... ரெண்டு நாள்ல எனக்கு ஆயிரம் ரூபா வேணும்; இப்பவே சொல்லிட்டேன்... ரெடி செய்துடு,'' என்று கூறி, ''பாட்டி டிபன் ரெடியா...'' சூறைக்காற்று மோதியதைப் போல், அவள் முகத்தருகே குனிந்து கத்தி விட்டு, சமையலறைக்குள் விரைந்தான், சிட்டி.

''ஏய் சிட்டி... வா இங்கே...'' என்றாள் குரலை உயர்த்தி!

''என்ன...''

''எதுக்கு ஆயிரம் ரூபா...''

''ஸ்கூல்ல டூர் போறோம்.''

''எங்க, என்னிக்கு?''

''அடுத்த வாரம்... ஸ்கவுட், ரெட்க்ராஸ்; எஜுகேஷன் கம்பைன் டூர்... அப்படியே, ஏற்காடுக்கு போறோம்; பேர் கொடுத்தாச்சு...''

''நீ போக வேணாம்.''

''அதெல்லாம் முடியாது; நான் போகணும்... போவேன்.''

''என்கிட்ட பணம் இல்ல.''

''அது என் பிரச்னை இல்ல; எங்க வகுப்புல எல்லாரும் போறோம்...''

''சிட்டி... இன்னும் நம்ம குடும்ப நிலைமை சரியாகல; கொஞ்சம் நல்ல நிலைக்கு வரட்டும்... உன் ஆசை எல்லாம் நிறைவேத்திக்கலாம். இப்ப படிப்பை மட்டும் பார்.''

''ச்ச்சே... வீடா இது...'' என்று, தரையை உதைத்து, தலையை சிலுப்பினான், சிட்டி.

''டேய்... டிபன் சாப்டுடா,'' என்று ஓடி வந்த பாட்டியை அப்புறப்படுத்தி, அம்மாவை முறைத்து, வெளியே ஓடினான்.

''ஏன் சுமி இப்படி இருக்கே... சின்னக் குழந்தை அவன்... நூத்துக்கிழவி மாதிரியா அவன்கிட்ட பேசுவே... ஆயிரம் ரூபாய மிச்சப்படுத்தி, மாடமாளிகையா கட்டப் போறோம்,'' என்றாள் அம்மா.

''ப்ளீஸ்மா... அசட்டுச் செல்லம் கொடுத்து, அவனைக் கெடுக்காதே...''

அவள் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல், நகர்ந்தாள், அம்மா.

திருமணப் புடவைகளுக்கான எட்டு சோளிகள் வந்திருந்தன. பெரிய இடத்துப் பெண்; அரசியல் குடும்பம். நல்லபடியாக வேலை முடித்து கொடுத்தால், நிறைய தொடர்புகள் கிடைக்கும். ஆனால், வேலை சுலபமில்லை. எட்டும், எட்டு ரகமாக வேண்டும் என்று சொல்லியிருந்தனர்.

வெள்ளைக் காகிதத்தில் வரைந்து, லைனிங் துணி எடுத்து, கவனமாக வெட்டினாள். பின், பட்டுத் துணியை எடுத்து, கண்களும், மூளையும் ஒருங்கிணைய, கத்திரி கோலால் சீராக வெட்டி, தையல் மிஷன் முன் உட்கார்ந்தபோது, பக்கத்தில் வந்து நின்ற சிட்டி, ''அம்மா...'' என்றான் தழுதழுப்பான குரலில்!

''என்ன,'' என்றாள் நிமிராமல்.

''டூர் எப்படி இருந்ததுன்னு கேக்க மாட்டியா...''

''சொல்லு...''

''என்னை புது சிட்டியா மாத்திடுச்சும்மா இந்த டூர்...''

''புரியல...''

''டூர்ல, ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போனோம்... அங்க நிறைய குழந்தைகளைப் பாத்தேன். என் வயசுப் பையன்கள், பெண்கள்... அவங்கள பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சு.

''அவங்களுக்கு நல்ல டிரஸ், நல்ல சாப்பாடு இல்ல; ஏன், படுத்து தூங்க பாய், தலகாணி கூட இல்ல. ஆனா, ரொம்ப நல்லா படிக்கிறாங்க. ஒரு பையன், கணக்குல சென்ட்டம் வாங்கியிருக்கான். என் மார்க் நினைவுக்கு வந்துச்சு. முப்பது, நாற்பது, அம்பதுன்னு... வெரி சாரிம்மா.''

அருகில் வந்து, அவள் முகத்தையே பார்த்தான் சிட்டி. அவன் கண்கள் ஈரத்தில் பளபளத்தன.

''டிரஸ், சாப்பாடெல்லாம் கூட விடும்மா... அவங்களுக்கு எல்லாம் உன்னை மாதிரி அன்பான அம்மா இல்ல. அதாம்மா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அம்மாவோ, அப்பாவோ இருந்து, நம்மை மாதிரி வீடு, சாப்பாடு, தூக்கம், ஸ்கூல்ன்னு கிடைச்சிருந்தா, அவங்கள அடிச்சிக்க ஆளே இருக்காது இல்லம்மா...'' என்றவன், ''அவங்கள பாத்ததுல இருந்து உன்னைதாம்மா நினைச்சிட்டுருக்கேன்... ஒருநாள் கூட எனக்கு பசிக்க விட்டதில்ல; கதை சொல்லாம, முத்தம் கொடுக்காம, தலைவாரி விடாம இருந்தது இல்ல. துணிமணி வாங்கித் தராம இருந்தது இல்ல. இவ்வளவு அன்பு கெடைக்க, நான் எவ்வளவு லக்கியா இருக்கணும்...

''சாரிம்மா... இனிமே நான் நல்லா படிச்சு, நிறைய மார்க் வாங்குவேன். நல்ல வேலைக்கு போன பின், நீ அங்க இருக்கிற பிள்ளைகளுக்கும் அம்மாவா இருக்குற மாதிரி, அங்கேயே வீடு கட்டுறேன் சரியாம்மா...'' என்ற மகனை, கண்ணீருடன், வாரி அணைத்தாள், சுமி.

வானதி






      Dinamalar
      Follow us