PUBLISHED ON : அக் 15, 2023

மனித வாழ்க்கையின் சுழற்சியை உணர்த்துவதே, கொலு படிகளில் வைக்கும் பொம்மைகளின் தாத்பர்யம். முதலில் நவராத்திரி துவக்க நாளன்று காலையில், கலச பூஜை செய்து, மேல் படியில் வைத்துவிட வேண்டும்.
இந்த உலகம் நீரால் சூழப்பட்டது என்பதை உணர்த்திட, கொலு முன், தரையில் சிறு குளம் போன்ற அமைப்பை வைக்கவும். அதில் நீர்வாழ் ஜந்துக்களான மீன், ஆமை உள்ளிட்ட பொம்மைகளை மிதக்க விடவும்.
ஆடுத்து, வனவாசம் செய்த ராமபிரானை நினைவுபடுத்தும் விதமாக மலைகள், மரங்கள், செடி கொடிகளை அமைக்க வேண்டும்.
தொடர்ந்து கீழிருந்து மேலாக முதல் இரண்டு படிகளில் விசேஷமான தெய்வ மரங்களை அமைக்க வேண்டும். இவற்றுக்கு ஓரறிவுள்ள, 'பிரதிமைகள்' என்று பெயர். இரண்டாவது படியில், இரண்டறிவுள்ள சங்கு, நத்தை, அட்டை, அமீபா உள்ளிட்ட பொம்மைகளை வைக்க வேண்டும்.
மூன்றாவது படியில், கரையான், எறும்பு, சிலந்தி உள்ளிட்ட சுறுசுறுப்பாக இயங்கும் மூன்றறிவு உயிரினங்களை வைக்கலாம்.
நான்காவது படியில், நான்கறிவுள்ள பறந்து சென்று, தன் பணிகளை செய்கிற பறவை உள்ளிட்ட உயிரினங்களின் மொம்மைகளை வைக்க வேண்டும்.
ஐந்தாவது படியில், ஐந்தறிவுடைய பசு, காளை, காமதேனு, குதிரை, சிங்கம் மற்றும் புலி உள்ளிட்ட விலங்கு வடிவங்களை வைத்து அழகுபடுத்தலாம்.
ஆறாவது படியில், ஆறறிவு படைத்த ஆன்மாக்களான மனித வடிவங்கள், அறிவை வெளிப்படுத்துகிற நாதஸ்வர வித்வான்கள், வீணை இசைக்கும் பெண்மணி, ஆடலரசிகள், நாட்டியக்கலை பெண்மணிகள் உள்ளிட்ட பொம்மைகளை வைக்கலாம்.
ஏழாவது படியில், தவசீலர்கள், ஞானிகள், குருநாதர்கள், மகான்கள், அவதார புருஷர்களை வைத்து, அவர்களின் உலக நலன்கள் குறித்து எடுத்துரைக்கும்படி மரியாதை செய்வதாக நினைக்க வேண்டும்.
எட்டாவது படியில், தெய்வ அவதாரங்கள், தசாவதாரம், கிருஷ்ண பரமாத்மாவின் அவதார வடிவங்கள், நவசக்திகள், அம்பாளின் வித்தியாசமான வடிவங்கள், கிராம தேவதைகள், ஐயனார், காளி மற்றும் துர்க்கை பொம்மைகளை வைக்கலாம்.
ஒன்பதாவது படியில், கலசத்தை நடுவில் வைத்து, பூரண வடிவாய் சக்தி எழுந்தருளியுள்ளதாக நினைத்து, சக்தியின் அவதாரங்களாகன, பொம்மைகளை, ஐந்துக்கு மேல் வைக்காமல் அழகுபடுத்த வேண்டும்.
இந்த நவராத்திரி காலத்தில், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லா பெண்களும் படித்து, அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வந்தால், வாழ்வில் எந்த குறையுமின்றி வாழலாம்.
