PUBLISHED ON : ஜூலை 30, 2023

கோவை, ஒண்டிப்புதுாரை பூர்வீகமாக கொண்டவர், சதீஷ்குமார். குடும்பத்துடன் ஹைதராபத்தில் வசித்து வருபவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இவரது மகள் அகர்ஷனா, வயது: 11. அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவுடன் உள்ள இவருக்கு, புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். கல்வி சம்பந்தமாக மட்டுமில்லாமல், பொதுவான தலைப்புகளிலும் நிறைய புத்தகங்களை தேடி தேடி வாங்கிப் படிப்பார்.
இப்படி இவர் வாங்கிய புத்தகங்கள், வீடு கொள்ளாத அளவிற்கு போகவே, படித்து முடித்த புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்பினார்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நீண்ட நேரம் காத்திருப்பதை அறிந்து, அவர்கள் படிக்கும் வகையில், தன் புத்தங்களை வழங்க விரும்பினார்.
அனுமதி கிடைக்கவே, தன் புத்தகங்களை மட்டுமல்லாமல், உறவினர், நண்பர்கள், சக மாணவர்களிடம் இருந்தும் புத்தகங்களை சேகரித்து வழங்கினார்.
இந்த செயல் மனதிற்கு நிறைவாக இருக்கவே, தொடர்ந்து நுாலகங்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை தொடர முடிவு செய்தார்.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள மாணவர்கள், தங்களை சீர்திருத்திக் கொள்ள முதலில் செய்ய வேண்டியது நல்ல புத்தகங்களை படிப்பது தான் என்பதால், அங்குள்ள இரண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில், நுாலகம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
விடுமுறையில் அப்பாவுடன் கோவை வந்திருந்த போது, காவல் துறை சார்பாக, வீதி நுாலகம் நடைபெறுவதை அறிந்து, அதற்கும் புத்தகங்கள் வழங்கினார்.
சென்னை, நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணவ, மாணவியருக்காக, கடந்த ஜூன் 23ம் தேதி, 1,000 புத்தகங்களை, அங்குள்ள புதிய நுாலகத்திற்கு கொடுத்தார்.
இதற்கான விழாவில் கலந்து கொண்ட தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மாணவி அகர்ஷனாவையும், அவரது செயலுக்கு துணை நிற்கும் பெற்றோரையும் பாராட்டினார்.
நீங்களும் அகர்ஷனாவை பாராட்ட விரும்பினால், தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 98431 43605.
எல்.எம். ராஜ்
