PUBLISHED ON : ஜூலை 30, 2023

துத்தி செடியில் பத்து வகைகளுக்கு மேல் உள்ளன. வட்டவடிவமான கூர்முனைக்கொண்ட இலைகளை உடைய, துத்தி செடி தான், நம் பயன்பாட்டுக்கு உகந்தது.
மஞ்சள் நிற பூவுடனும், வட்டவடிவ சக்கரம் போலான காயுடனும் காணப்படும் இச்செடியை, சின்ன தொட்டியில் வளர்க்கலாம். இது, கீரை வகையை சார்ந்த மூலிகை இனம்.
இதன் இலை, காம்பு, பட்டை, பூ, காய், வேர் என, எல்லாமே மருந்து தான். லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால், நாம் வீட்டில் வளர்த்து அத்தனை பாகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. இதன் கொழுந்து இலைகளை பறித்து மென்று முழுங்கினாலே போதும்.
இச்செடியை வளர்க்க, சிறிதளவு பராமரிப்பே போதுமானது.
* மூலத்திற்கு சிறந்த மருந்து இது. இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து, அதன் கிருமிகள் இறந்து விடும்
* துத்தி இலைகளை நிழலில் காயவைத்து, பொடி செய்து, காலை - மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, சுடு தண்ணீர் குடித்து வந்தால், மூலம், ரத்த மூலம் போன்ற அனைத்தும் சரியாகும்
* துத்தி இலைகளை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரால் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், வலி குறையும், காயம் ஆறும். கொதிக்க வைத்த நீருடன் பாலும், சர்க்கரையும் கலந்து குடிக்க, ஆசன வாய் கடுப்பு சரியாகும்; வாய் கொப்பளித்து வர பல்வலி, துர்நாற்றம் நீங்கும்
* துத்தி விதைகளை பொடி செய்து, 10 கிராம் அளவில் எடுத்து, 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை போன்ற தோல் வியாதிகள் நீங்கும்
* ரசம் செய்து அருந்தி வந்தால், நீர் நன்கு பிரியும்; சிறுநீரக நோய் வராது
* இதன் நரம்பு நீக்கிய இலைகளை அரைத்து, நம் வீட்டு இட்லி மற்றும் தோசை மாவில் கலந்து வாரம் இருமுறை பயன்படுத்தலாம்
* இதன் இலைகளை பிற கீரைகள் சமைக்கும் போது, அதனுடன் ஒரு கைப்பிடி சேர்த்து, கூட்டாய் செய்து சாப்பிடலாம்
* எந்த வகையில் துத்தி இலையை உட்கொண்டாலும், உடலின் வெப்பத்தைக் குறைத்து விடும்
* நேரந்தவறிய மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால் மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, உடல் சூடு போன்ற காரணங்களால் ஆண்களுக்கு விந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போக வாய்ப்புண்டு.
இப்படிப்பட்ட ஆண்கள், துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பால் சேர்த்து, காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, விந்து உற்பத்தி அடர்த்தியாகும்.
அடுத்த வாரம், துாதுவளை!
— வளரும்
டிப்ஸ்!இலை, தண்டு, வேர், பூ, காய், கனி, சருகு என, எந்த ஒரு இயற்கையான தாவரப் பொருளையும் இரண்டு நாட்கள் நீரில் ஊற வைத்து விட்டால், அதில் நுண்ணுயிர்கள் பெருக ஆரம்பிக்கும். இந்த நுண்ணுயிர்கள் செடிகளுக்கு நல்ல உரமாக இருந்து வருகிறது. வடிக்கட்டிய அந்த நீருடன், 10 மடங்கு கூடுதல் நீர் சேர்த்து தொட்டிச்செடியின் மண்ணில் தெளிக்க மண்ணின் வளமும், தரமும் அதிகரிக்கும்.
ம. வான்மதி
