PUBLISHED ON : ஜூலை 30, 2023

அ நிறம் | அளவு
பலம் மட்டுமே கொண்ட
மனிதர் ஒருவருமில்லை
பலவீனம் என்பது
மாற்றவியலாத குறையுமில்லை!
கண் எனும் உறுப்பு
எல்லாருக்கும் பொது தான்
காணும் பார்வையோ
அவரவருக்கு வேறு தான்!
துாசில்லா துாய காற்றென்பது
ஒருவரின் நம்பிக்கை மட்டுமே
ஆனால், நிதர்சனத்தில்
உண்மை அதுவல்ல!
சரியான எடையென்பது
நம் எண்ணம் மட்டுமே
தராசுகளின் வேறுபாட்டை
நாம் அறிய இயல்வதில்லை!
வண்ணங்கள் குழைத்து
துாரிகை தொட்டு
வரைந்திடும் ஓவியம் நிறைவானதா
என்பதை வரைந்தவனே அறிவான்!
சிற்றுளி தட்டி
கற்பாறைகள் செதுக்கி
வடித்திடும் சிலை முழுமைதானா
என்பதும் சிற்பியே உணர்வான்!
உதிர்க்கும் சொற்களின் முன் பின்னாய்
உண்மையெனும் பொய்யும்
பொய்யெனும் உண்மையும்
இருப்பதை மறைக்கலாமா?
குறையில்லா மனிதரில்லை
குறையில்லாதோர் மனிதரே இல்லை
எனும் உயரிய தத்துவத்தை
ஏற்றிட மறுக்கலாமா?
— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.
