PUBLISHED ON : ஆக 24, 2025

எந்தவொரு நாட்டிலும், தீவிரவாதிகள் உருவாக, மூளைச்சலவை முக்கிய காரணம். இதுவொரு, மனோவியல் செயல்முறையாகும். இதில், ஒருவரின் சிந்தனை, நம்பிக்கை மற்றும் நடத்தையை முழுமையாகக் கட்டுப்படுத்தி, அவரை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும்.
தீவிரவாத இயக்கங்கள், குறிப்பாக, மனித வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்துவோர், இந்த மூளைச்சலவையால் துாண்டப்படுகின்றனர்.
இதற்கு மிகப்பெரிய உதாரணமாக, அமெரிக்காவில், 1978ல் நடந்த, ஜோன்ஸ்டவுன் படுகொலையை கூறலாம். இதில், ரெவரென்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ் என்பவர், தன் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களை மூளைச்சலவை செய்து, 900க்கும் மேற்பட்டோரை தற்கொலை செய்ய வைத்தார்.
தன், 'பீப்பிள்ஸ் டெம்பிள்' இயக்கத்தின் பக்தர்களை, ஒரு புதிய உலகத்தை வாக்குறுதியாக கூறி, சயனைடு கலந்த பானத்தை குடிக்க வைத்தார், ஜோன்ஸ். அதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஏறத்தாழ, 918 பேர் இறந்தனர்.
தன் கவர்ச்சியான பேச்சு மற்றும் பயத்தை துாண்டும் யுக்தி மூலம், பக்தர்களை முழுமையாக கட்டுப்படுத்தினார், ஜோன்ஸ். அவர்களிடம், 'வெளி உலகம் தீமையானது; தற்கொலை மூலம் புனித உலகத்தை அடையலாம்...' என, நம்ப வைத்தார்.
எல்லாரும் கண் முன் இறப்பதை, கல் போல பார்த்து விட்டு, கடைசியில் கைத்துப்பாக்கியால், தன் நெற்றியில் சுட்டு, தற்கொலை செய்து, இறந்தார்.
மூளைச்சலவை என்பது, ஒருவரின் அடையாளத்தை அழித்து, புதிய நம்பிக்கைகளை திணிக்கும் செயல். இதில் பயம், குற்ற உணர்வு மற்றும் வாக்குறுதிகள் மூலம் மனதை கட்டுப்படுத்துகின்றனர்.
இதற்கு உணர்ச்சி மிகுந்த பேச்சுகள், தொடர் பயிற்சிகள் மற்றும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
மனித வெடிகுண்டாக மாறுபவர்கள் பெரும்பாலும், இளைஞர்கள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது மன உளைச்சலில் உள்ளவர்கள். இவர்களின் பலவீனங்களை பயன்படுத்தி, மதம், பழிவாங்கல் அல்லது குடும்பத்துக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்து, மூளைச்சலவை செய்கின்றன, தீவிரவாத இயக்கங்கள். இதனால், அவர்கள் தங்கள் உயிரையும், மற்றவர்களின் உயிரையும் பறிக்க தயாராகின்றனர்.
மூளைச்சலவை, ஒரு ஆபத்தான ஆயுதம். இதிலிருந்து தப்பிக்க, சிந்தனையும், விழிப்புணர்வும் அவசியம். அரசியல், மதம் அல்லது சித்தாந்தங்களால் மக்களை திசைமாற்றும் முயற்சிகளை எதிர்க்க, கல்வியும், சமூக ஒற்றுமையும் முக்கியம்.
நாட்டில் பொருளாதார பிரச்னைகளும், மக்கள் மத்தியில் ஒருவித மன உளைச்சலும், விரக்தியும் காணப்படும் போது, இது போன்ற புதிய இயக்கங்கள் உருவாகி, மக்கள் திசை மாறிப் போவர் என்கின்றனர், மனோதத்துவ நிபுணர்கள்.
அரசியல்வாதிகள் நாட்டைப் பற்றி கவலைப்படாமல், அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும் போது, இத்தகைய பயங்கரவாத இயக்கங்கள் தோன்றும் அபாயம் இருக்கிறது.
அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகளின் மூளைச்சலவையில் இருந்து, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.
எம். நிமல்

