
அன்பு சகோதரி —
நான், 45 வயது பெண். என் கணவருக்கு வயது: 50. நாங்கள் இருவருமே பட்டதாரிகள். ஒரு பெண் குழந்தை உள்ளது. கல்லுாரியில் படிக்கிறாள். என்னுடைய, 25வது வயதில் திருமணம் ஆனது. என் மாமனார், எங்கள் திருமணத்திற்கு முன் ஆரம்பித்த எலக்ட்ரிக்கல் கடையை, நடத்தி வருகிறார், கணவர்.
எங்கள் திருமணம் ஆன புதிதில், ஒரு தம்பதியர் அந்த கடையில் வேலை செய்தனர். அவர்களுக்கு அப்போது இரு குழந்தைகள் இருந்தனர். என் திருமணத்திற்கு பின், வீட்டு வேலைகளில் பல உதவிகளை செய்தாள், அந்த பெண். மிகவும் நம்பிக்கை ஆனவள். என் திருமணத்திற்குப் பின், அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
அந்த பெண்ணின் கணவன், மதுவுக்கு அடிமையானவன். அவர்களுக்குள் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும். அதனால், அவள், என் திருமணம் நடந்து ஏழு ஆண்டுகளுக்கு பின், தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அவள் சென்ற பின், ஒரு மிகப்பெரிய உண்மையை கூறினார், என் கணவர். இவருக்கும், அவளுக்கும் எங்கள் திருமணத்திற்கு முன்பிருந்தே கள்ள உறவு இருந்தது என்றும், அது, ஏழு ஆண்டுகள் தொடர்ந்தது என்றும் சொன்னார்.
திருமணத்திற்குப் பின், அந்த உறவு தொடரவில்லை. அந்த பெண்ணும் பணத்திற்காக என்னிடம் பழகவில்லை. என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவள் இல்லை என்றால் எங்கேயாவது தவறான, பெண்களிடம் மாட்டி, அனைத்தையும் இழந்திருப்பேன் என்றும் கூறினார்.
என்னால் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. என் அழகு, படிப்பு, அந்தஸ்து எல்லாம், அந்த வேலைக்காரியிடம் தோற்று விட்டதாகவே உணர்கிறேன். என்னை பெண் பார்த்த பின், என்னிடமும் போனில் பேசிவிட்டு, அவளிடமும் உறவு கொண்டிருக்கிறார். எங்கள் திருமணம் முடிந்து சரியாக எட்டு மாதங்கள் கடந்த பின், அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
அவள் வேலையை விட்டு சென்ற பின், அவளைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசியதில்லை. நான் தான் அவர்களைப் பற்றி நிறைய கேள்வி கேட்கிறேன். இந்த வயதிலும் என்னோடு அன்பாக, ஆசையாக இருக்கிறார். திருமணத்திற்குப் பின், நான் வேறு யாரிடமும் உறவு கொண்டதில்லை என்கிறார்.
சிறுவயதிலிருந்தே, என்னை முதலில் தொடும் ஆண், என் கணவராக தான் இருக்க வேண்டும் என்றும், என் கணவர் தொடும் முதல் பெண், நானாகத்தான் இருக்க வேண்டும் என, ஒரு கனவு இருந்தது. அந்த கனவை சிதைத்த அந்த வேலைக்காரியிடம் எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. அவள் எங்களை விட்டு சென்ற பின், ஒரு தடவை கூட இங்கு வரவோ, எங்களை தொடர்பு கொள்ளவோ இல்லை.
'நீ, குக்கிராமத்தில் பிறந்தவள் உலகம் தெரியவில்லை. வெளியுலகத்தில் எல்லா ஆண்களும் இப்படிப்பட்டவர்கள் தான்...' என்கிறார், கணவர். என் திருமணத்திற்கு பிறகும் அவளிடம் உறவு கொண்டிருப்பாரோ என, தினம் தினம் நினைத்து சாகிறேன்.
கடையில் பணியாற்றும் எந்த பெண்ணிடம் அவர் பேசினாலும், அவளிடம் உறவு வைத்திருப்பாரோ என, எண்ணுகிறேன்.
நான் சாவதற்குள், அந்த வேலைக்கார பெண்ணை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்; நிறைய கேள்விகள் கேட்டு, அவளை துடிக்க வைக்க வேண்டும் என்றும், அவளின் குழந்தைகளை பற்றிய உண்மைகளை அறிய வேண்டும் என்றும் எண்ணுகிறேன்.
இது சரியா, தவறா எனக் கூறுங்கள். அவர்கள் இருவரும் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கின்றனர். எந்தவித தவறும் செய்யாமல் நான், நிம்மதியாக வாழ முடியவில்லை.
எஞ்சிய காலத்தின் மன நிம்மதிக்கு நான் என்ன செய்ய வேண்டும் என, அறிவுரை கூறுங்கள், சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு,
உன்னுடைய கடிதத்தை படித்ததும், ஒரு கணம் கண்கலங்கிவிட்டேன். கடிதம் முழுவதும் உணர்வு ரீதியான படிமங்கள் தொக்கி நிற்கின்றன.
இக்கடிதம் மூன்று துருவங்களை சித்தரிக்கிறது.
* என் முதல் ஸ்பரிஸம், கணவருக்கு கணவரின் முதல் ஸ்பரிஸம் எனக்கு -என்ற மாய யதார்த்தவாதி நீ
* முதலாளிக்கு ஏழு ஆண்டுகள் விசுவாசமாய் உடல்தானம் செய்து, ஒரு குழந்தையும் பெற்று, முதலாளியின் வாழ்க்கையில், பணத்தில் பங்கு கேட்காமல் வனவாசம் போன பணிப்பெண் அவள்
* காமத்தில் முறை பிறழ்வது ஆணின் இயல்பு. ஒரு தகுதியான பெண்ணிடம் தான் உறவு வைத்து, என் கண்ணியம் காத்தேன் எனக் கூறும் நகாசுபடுத்தப்பட்ட ஆணாதிக்கவாதி, உன் கணவர்.
இறப்பதற்கு முன், கணவரின் கள்ளக்காதலியை ஒருமுறை பார்க்க விரும்புகிறாய். எதற்கு பார்க்க வேண்டும்?
உங்கள் மூவரில் மேன்மையானவள் அவள் தான்.
எவ்வளவு பெருந்தன்மையாக உங்களிருவர் வாழ்க்கையை விட்டு வெகுதுாரம் விலகிப் போய் விட்டாள்.
நீ அவளை நேரில் பார்த்து இழிவுபடுத்தி, உன் மாண்பை சீர்குலைத்து கொள்ள வேண்டுமா!
உன் கணவருக்கும், அவளுக்கும் பிறந்த குழந்தையை நீ வாங்கி வளர்க்கப் போகிறாயா அல்லது அந்த குழந்தை வளர்ப்புக்கு பணம் தரப் போகிறாயா?
உன்னுடன் அவளை ஒப்பிட்டு பார்க்கப் போகிறாயா? இதெல்லாம் தேவையற்ற வீண் வேலை. போனவள் போனதாகவே இருக்கட்டும். வாழ்க்கையை கவிதைத்தனமாக யோசிக்காதே. வாழ்க்கை, கரடுமுரடான ஒரு உரைநடை.
குற்ற உணர்வு யாரிடம் இல்லை? இந்த விஷயத்தை பெரிதுப்படுத்தி, வாழ்க்கையை போர்க்களம் ஆக்காதே.
கணவரை தனியாக அழைத்து, 'உங்கள் தவறை இறைவனுக்காக மன்னித்தேன். இதுபோல் தவறுகள் இனி எப்போதும் நடக்க கூடாது. நம் வாழ்க்கையை விட்டு விலகிப் போன அந்த பணிப் பெண்ணுடன் நேரிலோ, போனிலோ நீங்கள் தொடர்பு கொள்ள கூடாது...' என, சாமி படத்தின் மீது சத்தியம் வாங்கு.
இனி மகளுக்காக வாழ்.
மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் வெளியில் தேடாதே. உனக்குள் இருக்கிறது.
வாழ்த்துகள்!
— -என்றென்றும் பாசத்துடன்,சகுந்தலா கோபிநாத்.

