தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/காக்காவை காதலித்தவன்!

காக்காவை காதலித்தவன்!

காக்காவை காதலித்தவன்!


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெல்ல கட்டிலை விட்டு எழுந்த ராமசாமி, வீட்டின் பின்புறம் இருந்த முற்றத்திற்கு வந்தார். அங்கே, வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரும், பித்தளை பிடி போட்ட மரக்காலில் தானியமும் இருந்தது. அவர் வரவுக்காகவே காத்திருந்தது போல், தோட்டத்தின் மரக்கிளைகளில் அமர்ந்திருந்த காகங்கள், இரண்டு நாட்களுக்கு பின், அவரைப் பார்த்த சந்தோஷத்தில், 'கா...கா...' என இரைந்தபடி, அவரை வட்டமடித்தன.

அவற்றின் பாசத்தில், உடற்சோர்வையும் மீறி, உற்சாகம் ஏற்பட, நெகிழ்ச்சியுடன் தானியங்களை அள்ளித் தூவினார். அவை, 'லவக் லவக்'என்று தன் அலகுகளால் கொத்தி விழுங்கும் அழகை ரசித்தவர், அப்போதுதான் நினைவு வந்து, கமலாவைத் தேடினார். இச்சமயங்களில், தன் அருகில் ஆசையுடன் வந்து அமரும் கமலாவை இன்று ஏனோ காணவில்லை. அவர் கண்கள் அந்த சிறு தோட்டத்தின் செடி, கொடி, மரங்களுக்கிடையே தேடின. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அவர் கண்களுக்கு தென்படவில்லை, கமலா.

''சீதா... இந்த கமலாவை எங்கேனும் பாத்தியோ... அவளக் காணலயே...'' என்றார் உரக்க!

''நேக்கு தெரியலண்ணா... ரெண்டு நாளா, நானும் அவளப் பாக்கல...'' என்று சமையலறைக்குள் இருந்தவாறு பதில் சொன்னாள், சீதா.

இதைக் கேட்டதும், 'இப்படி ஒருநாளும் ஏற்பட்டதில்லையே... 'டாண்'ணு வந்துடுவாளே... இன்னைக்கு ஏன் காணோம்... சீதா வேற அவள ரெண்டு நாளா பாக்கலன்னு சொல்றாளே...' என எண்ணியவருக்கு, மனதுக்குள் ஏனோ இனம் புரியாத பயம் ஏற்பட்டது.

இப்போது போல், பணக்காரர்களுக்கு ஒரு பள்ளி, ஏழைகளுக்கு ஒரு பள்ளி என்று இல்லாத காலம் அது!

அந்த கிராமத்து துவக்கப் பள்ளியில், ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்து, அலுமினிய தட்டுகளில் இருந்த மதிய உணவை ஆவலுடன் உண்டு கொண்டிருந்தனர், சிறுவர், சிறுமியர்.

தன் வெண்கல உணவு டப்பாவில் இருந்து, சிறிதளவு தயிர் சாதத்தை எடுத்து, வேப்பமரத்தை நோக்கி ஓடினான், இரண்டாம் வகுப்பு படிக்கும் ராமசாமி.

புங்கை மரத்தடியில் அமர்ந்து, அலுமினிய தட்டில் இருந்த அரசு கொடுத்த, கோதுமை சோற்றை அள்ளி விழுங்கிய கமலா, 'டேய் ராமு... எங்கட போறே...' என்றாள் உரத்த குரலில்!

'எங்க பாட்டிக்கு சாதம் வைக்க போறேன்...' உற்சாகத்துடன் சொன்னான் ராமசாமி.

அலுமினியத் தட்டை தூக்கியபடி அவன் பின் சென்ற கமலா, 'எங்கடா உங்க பாட்டி...' என்றாள், சுற்றும் முற்றும் பார்த்தபடி!

'அதோ அங்க உட்காந்து என்னையவே பாக்குறாளே... அவதான், எங்க பாட்டி; அவளுக்குத் தான் இப்ப சாதம் வைக்கப் போறேன்...' என்று வேப்பமரத்தில் அமர்ந்திருந்த காகத்தை காட்டினான்.

'ஐயே... அது காக்கா... அதப் போயி உன் பாட்டின்னு சொல்றே...'

'அது காக்கா இல்ல; செத்துப் போன எங்க பாட்டி தான் காக்கா ரூபத்துல என்னை பாக்க வந்துருக்கா...' என்று கூறியபடி, அருகிலிருந்த அரசமர இலையை கொய்து, அதில், தயிர் சாதத்தை வைத்தான் ராமசாமி.

'ராமு... எங்க பாட்டியும் என்ன பாக்க வருமா...' என்று கேட்டாள், கமலா.

'ம்கூம்... செத்துப் போனவா மட்டும் தான் வருவா... உங்க பாட்டி தான் ஊர்ல உசிரோட இருக்காளே...' என்றான்.

'அப்ப, சின்னப் புள்ளையில செத்துப் போன எங்க அக்கா வருமா...'

'ம்... வருவா... அதோ பார்... ஒரு குட்டி காக்கா... அதுதான் உங்க அக்கா... போய் சாதம் வை...'

உற்சாகத்துடன் தன் அலுமினிய தட்டை தூக்கியபடி ஓடினாள், கமலா.

அன்றிலிருந்து தினமும் இருவரும் போட்டி போட்டு காகங்களுக்கு சோறு வைப்பது வழக்கமானது. இவர்களைப் பார்த்து, மற்ற சிறுவர், சிறுமியரும் காகங்களை உறவு முறை சொல்லி, உணவு வைக்க ஆரம்பித்தனர்.

பால்மனம் மாறாத பால்யத்தில் ஆரம்பித்த இந்த நட்பு தான், வாலிப வயதில் எல்லா அந்தஸ்து பேதங்களையும் தாண்டி மனதில் வேரூன்றி ஆட்சிசெலுத்த, அதுவே, கமலாவுக்கு வினையாகிப் போனது.

அவ்வூரில் உள்ள சிவன் கோவில் அர்ச்சகரின் மகன், ராமசாமி. அவனுடைய அப்பாவுக்கு பாத்தியமான நிலத்தை உழுது, விவசாயம் செய்து, அவர்கள் கொடுக்கும் கூலியில் காலம் தள்ளுபவர்கள் கமலாவின் பெற்றோர்.

ராமசாமியும், கமலாவும் ஒரே வகுப்பு என்பதால், எப்போதும் அவன் பின், வாலு மாதிரி அலைவாள், கமலா. இதனால், அவளுக்கு, 'ராமசாமியின் வால்' என்றே பட்டப் பெயர் வைத்தனர், அவர்களது பள்ளித் தோழர்கள்.

ஒருமுறை, தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் காக்கா கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ளதாக கூறி, அதைக் காட்டுவதற்காக அவளை அழைத்து சென்றான், ராமசாமி.

இருவரும் புழக்கடை திண்ணையில் அமர்ந்து காக்கா குஞ்சிற்கு இரை ஊட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே வந்த அவனது அத்தை, 'அடி அலமு... இங்க வந்து பாரேன்... உன் பிள்ளையாண்டன் செய்திருக்கிற காரியத்தை... சூத்திர வீட்டு குட்டியை ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து விளையாடுறான்டி...' என்று கத்தினாள்.

சமையல் கட்டில் இருந்து, அரக்க பரக்க ஓடிவந்த அலமு, ராமசாமியின் முதுகில் நாலு சாத்து சாத்தி, 'இதுக்குத் தான் உங்க அண்ணாகிட்ட அடிச்சுண்டேன் மன்னி... பிள்ளைய டவுன்ல படிக்க வையுங்கோன்னு... கேட்டத்தானே...' என்று முகத்தை நொடித்தாள்.

இதைப் பார்த்து பயந்து போன கமலா, வீட்டிற்கு ஓடிவிட்டாள்.

மறுநாள், மதிய உணவு இடைவேளையின் போது, 'டேய் ராமு... சூத்திரருன்னா யாருடா...' என்று கேட்டாள், கமலா.

'அவாள் எல்லாம் தாழ்ந்த ஜாதியாம்...' என்றான்.

'ஜாதியின்னா என்னடா...'

'ஜாதியின்னாவா... தெரியலயே...' என்று அவன் முழித்த போது, ராமசாமிக்கு பள்ளிக் கட்டணம் கட்ட வந்த அவனுடைய அப்பா கோபால அய்யர், குழந்தைகள் பேசுவதைக் கேட்டு பதறி, 'ராமு... அப்படி சொல்லப்படாது; இந்த லோகத்துல யாரும் தாழ்ந்தவங்களோ, உயர்ந்தவங்களோ கிடையாது. ஈஸ்வரன் படைச்ச எல்லா உயிர்களுமே சமம் தான். ஒத்துமையா, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து அன்போட வாழணும்ன்னு தான் ஈஸ்வரன் இந்த லோகத்த படைச்சு, நம்மளை எல்லாம் உண்டு பண்ணினான்.

'மற்ற ஜீவராசிக எல்லாம் இறைவனோட நியதிக்கு கட்டுப்பட்டு, அத அதோட குணா அம்சத்தை மாற்றாம யுகம் யுகமாக அப்படியே ஜீவிக்கறது. மனுஷா மட்டும் தான், தன்னோட அகங்காரத்துக்காக, உயர்ந்தவன், தாழ்ந்தவன், கறுப்பு, வெளுப்புன்னு ஏதாவது ஒரு பேதத்தை உண்டு பண்ணி, ஆணவத்துக்கு தீனி போட்டு, லோகத்தை சவக்காடா ஆக்கறான்.

'குழந்தைகளான நீங்க ரெண்டு பேருமே ஈஸ்வரனோட பிள்ளைகள்; அதனால, அப்படியெல்லாம் வேற்றுமை பாக்கமா ஒத்துமையா, அன்பா இருக்கணும்...' என்றார் மென்மையாக!

நால்வகை வேதங்களையும், அனைத்து சாஸ்திர நெறிகளையும் முழுமையாக கற்றறிந்த பண்டிதர், கோபால அய்யர். அவரைப் பொறுத்தவரை, ஒழுக்கம் உடையவரே உயர் குலத்தோர்; அல்லாதோர் கீழ் குலத்தோர். அதனால், அவர் மனிதர்களை பிறப்பால் வேறுபடுத்தி பார்ப்பதை வெறுத்தார்.

ஆனால், மனித மனங்களில் மட்கி உரமாகி போய்விட்ட ஜாதிய ஆணவ உணர்வை, ஒரு கிராமத்து கோபாலய்யரால் அவ்வளவு எளிதில் நீக்கி விட முடியுமா?

ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்து, வீட்டுக்குள் முடங்கி போன கமலாவுக்கு, எப்போதும் ராமசாமியின் நினைவு; நட்பு என்பதைத் தாண்டி, அவன் மீது இனம்புரியாத பிரியமும், நேசமும் அவளுள் வியாபித்திருந்தது. ஆனால், இருவருக்கும் இடையிலான ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை நினைத்து, தன் ஆசைகளை மனதில் புதைத்து, மவுனமாக வலம் வந்தாள்.

ராமசாமிக்கு கமலா மீது அன்பும், பாசமும் நிறையவே இருந்தது. ஆனால், அது காதலா என்பதை அவனே உணராத நிலையில், நிம்மதியாக நகரத்தில், பி.யு.சி., படித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், கமலாவை பெண் பார்க்க வந்திருந்தனர், அவளது மாமன் வீட்டினர். அவள் எவ்வளவோ மறுத்தும், கேட்காமல் திருமணத்திற்கு தேதி குறித்து விட்டனர்.

மனம் முழுவதும் ராமசாமியின் நினைவுகளே நிறைந்திருக்க, வேறுவழியின்றி தற்கொலை செய்து, இறந்து போனாள், கமலா.

கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ராமு, ஏதேச்சையாக, கமலாவின் தோழியை பார்த்தான். அவள் தான், கமலா அவனை காதலித்த விஷயத்தைக் கூறி, அதனாலேயே தன் மாமன் மகனை மணமுடிக்க மறுத்து, தற்கொலை செய்து கொண்ட விபரத்தை கூறினாள்.

இதைக் கேட்டதும், கேவிக் கேவி அழ ஆரம்பித்தான், ராமசாமி. ஐந்து ஆண்டுகள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். வகுப்பில் கமலா முன் வரிசையிலும், அவளுக்கு நேர் பின்னால் ராமசாமியும் அமர்ந்திருப்பான்.

சிலேட்டு, பலப்பக் குச்சி, சந்தேகம் என்று அவளுக்கு, அவனிடம் ஏதாவது பேச வேண்டும். பாட இடைவேளையில், அப்படியே திரும்பி அவனைப் பார்த்தபடி உட்காருவாள். அவனும், வரிசையில் இருந்து நகர்ந்து வந்து, டிரவுசர் பாக்கெட்டுக்குள் கையை விட்டு, உப்பில் ஊற வைத்த வடுமாங்காய் வற்றலை எடுத்து, ரகசியமாய் அவள் உள்ளங்கையில் திணிப்பான். அவள் தன் ஓட்டைப் பற்களை இளித்து, நைசாக வாயிக்குள் போட்டு, கடைவாயில் ஒதுக்கிக் கொள்வாள். ராமுவிற்கு வறுத்த அரிசி ரொம்ப பிடிக்கும் என்பதால், வீட்டில் தின்பண்டத்துக்காக அரிசி வறுக்கும் போது, அதை தான் சாப்பிடாமல், தன் பள்ளிக் கூட அழுக்கு பையில் போட்டு எடுத்து வருவாள். மதிய உணவின் போது, காகங்களுக்கு பாதி, தங்களுக்கு மீதி என பங்கு வைத்து தின்பர்.

தன் அன்பிற்குரிய சிநேகியின் மரணத்திற்கு தானே காரணமாகி விட்டோமே என துடித்தான், ராமசாமி.

ஆனால், காலம் எனும் மருத்துவன், எல்லா காயங்களையும் ஆற்றும் வல்லமை படைத்தவனாயிற்றே!

படிப்பு, வேலை, திருமணம் என, ஆண்டுகள் உருண்டோட, கமலாவை மறந்தே போனான், ராமசாமி. அத்துடன், காகத்துக்கு உணவிடுவதையும்!

மத்திய அரசு அதிகாரியாய் வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து, தன் இரு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து, அவர்களும், அமெரிக்கா, லண்டன் என்று செட்டிலாகி விட, இதோ, தோட்டத்துடன் கூடிய கிராமத்து வீட்டில் தன் ஓய்வு காலத்தை மனைவியுடன் கழிக்கும் ராமசாமி, காலையில் காபி குடிக்கிறாரோ இல்லையோ, முதல் ஆளாய் காகத்துக்கு இரையிடுவது தான் அவரது பிரதான வேலை. அச்சமயங்களில், பளிச்சென்று அவர் நினைவுகளில் முன் வந்து நிற்பாள், கமலா.

ஒருநாள், புழக்கடை திண்ணையில் அமர்ந்து, காகங்களுக்கு தானியத்தை இறைத்த போது, சிறிய காகம் ஒன்று ராமசாமியின் அருகில் வந்து அமர்ந்தது.

அதை ரசனையுடன் பார்த்தவர், கையிலிருந்த தானியத்தை அதன் முன் சிதற விட்டார். ஆனால், அதை உண்ணாமல் அவர் தொடையில் ஏறி, உள்ளங்கையில் இருந்த தானியத்தை உரிமையுடன் கொத்தி தின்றது. ஆச்சரியத்துடன் பார்த்து, மெல்ல அதன் இறகுகளை தடவ, அது, அவர் கைகளுக்குள் அடைக்கலமானது. அவருக்கும், அக்குட்டி காகத்துக்குமான நட்பு இப்படித்தான் ஆரம்பித்து.

அன்று, ராமசாமியின் வீட்டிற்கு அவரது அக்கா குடும்பத்தினர் வந்திருந்தனர். அக்கா பேத்தியின் பெயர் கமலா; அவளை ஏதோ காரணத்திற்காக உரக்க கூப்பிட்டார், ராமசாமி.

உடனே, தோட்டத்திலிருந்து பறந்து வந்து, அவர் எதிரே அமர்ந்தது, அக்குட்டிக் காகம்.

'ஏண்டி கமலா... நான் உன்னையத் தானே கூப்பிட்டேன்; உன் தோழி வந்து நிற்கிறாளே...' என கிண்டலடித்தார், ராமசாமி.

அவள், 'தாத்தா...' என்று சிணுங்க, சீதா சட்டென, 'ஒருவேளை உங்க பால்ய சிநேகிதி கமலா தான் காக்கா ரூபத்துல வந்திருக்காளோ என்னவோ...' என்றாள் கேலியாக!

அவளுக்கு கமலாவை பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்லியிருந்தார், ராமசாமி.

உடனே, அவருக்குள் ஏதோ மின்னல் வெட்ட, அன்றிலிருந்து அக்குட்டிக் காகத்தை, கமலாவாகவே நினைக்க ஆரம்பித்தார்.

காலையில் உணவிடும் போது, அதை மடியில் அமர வைத்து, தடவிக் கொடுத்தவாறு பழங் கதைகள் பேசுவார்; சீராட்டுவர்; மனக் கஷ்டங்களை பகிர்ந்து கொள்வார். ஒருநாள் அதைக் காணவிட்டாலும் தவித்துப் போவார்.

இந்நிலையில், பணி நிலுவைத் தொகையில் ஏதோ பிரச்னை என்று, சென்னையில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்றவர், இரு நாட்கள் கழித்து, இரவு வீடு திரும்பியவருக்கு, காலையில், கமலாவை காணவில்லை என்றதும் மனக் கலக்கம் ஏற்பட்டது.

தோட்டத்திற்கும், வீட்டிற்கும் நடையாய் நடந்த கணவரைப் பார்த்து எரிச்சலடைந்த சீதா, 'அந்த காக்கா என்ன சாமியாரா... வளந்துடுத்தோ இல்லையோ, ஜோடி தேடி போயிருக்கும்...' என்று கூற, கோபத்தின் உச்சிக்கு போய் விட்டார், ராமசாமி.

'சீதா... முதல்ல கமலாவ, காக்கான்னு சொல்றத நிறுத்து; அவ, எப்பவும் என் காலடியில தான் இருப்பா; என்னை விட்டு எங்கயும் போக மாட்டா... இனி, எப்போதும் இப்படியெல்லாம் பேசாதே...' என்றார், கண்டிப்புடன்!

'காக்கைய காக்கான்னு சொல்லப்படாதோ, இப்படி கோவிக்கிறேளே...' என்றவள், அவரை வினோதமாக பார்த்து விட்டு போய் விட்டாள்.

ராமசாமியைப் பொறுத்தவரை, அது காகம் அல்ல; கமலா.

மறுநாளும் கமலா வரவில்லை என்றதும், 'சீதா சொன்னது போல் கமலா ஜோடி தேடிப் போயிட்டாளோ... நான் தான் ஒரு காக்காவப் போயி கமலான்னு நினைச்சு, அதன் மேல ரொம்ப பாசம் வச்சுட்டேனோ...' என்று மனதுக்குள் புலம்பினார், ராமசாமி.

அடுத்த நாள் காலை, 6:00 மணி -

தோட்டத்திலிருந்து, 'கா...கா...' என, ஒரே இரைச்சல். புழக்கடைக்கு வந்த ராமசாமி, காகங்கள் ஒரு இடத்தையே வட்டமிட்டு சுற்றுவதைப் பார்த்து, மெதுவாக அங்கே சென்றார்.

செடி, கொடிகள் மண்டியுள்ள புதரில், எறும்புகள் மொய்த்து பாதி தின்ற நிலையில், இறந்து கிடந்தது, ஒரு காகம்.

மல்லாந்து கிடந்த அதன் கால்களில், அவர் போட்டிருந்த அடையாளம், அது கமலா என்பதை உணர்த்த, அடுத்த வினாடி, 'கமலா...'என்ற அவரின் அழுகையில், கமலாவின் மீது அவர் கொண்டிருந்த காதல், ஜாதிய கோட்பாடுகளை தகர்த்து, இப்பிரபஞ்சம் முழுவதும் எதிரொலித்தது!

ப. லட்சுமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us