தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சந்திரபாபு (15)

சந்திரபாபு (15)

சந்திரபாபு (15)


PUBLISHED ON : நவ 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் இந்திய ராணுவ வீரர்களுக்காக, கலை நிகழ்ச்சி நடத்த, தமிழக திரை கலைஞர்களுடன் டில்லி சென்றார், சந்திரபாபு. நிகழ்ச்சியின் போது, பொதுமக்களும் அரங்கிற்குள் வந்து, இந்தி பாடல்களை பாடச் சொல்லி வற்புறுத்தினர். அப்போது, சந்திரபாபு எழுந்து, 'நான் சொல்வதை அப்படியே, இந்தியில் அவர்களுக்குப் புரியுமாறு, மொழிபெயர்த்து சொல்லுங்கள்...' என்று கர்னலிடம் கூறி, மைக்கில் ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்...

'இந்தியாவின், தென் மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் நாங்கள், நம் வீரர்களுக்காக கலை நிகழ்ச்சிகளை நடத்த வந்திருக்கிறோம்; பொதுமக்களாகிய உங்களுக்கு அல்ல. இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, நீங்கள் சல்லிக்காசு கூட கொடுத்து வரவில்லை. அத்துடன், தமிழகத்தில் இருந்து வந்துள்ள எங்களது தாய்மொழி தமிழ்; எங்களுக்கு அந்த மொழி மட்டும் தான் தெரியும். நீங்களோ, இந்தி பாடல் பாடச் சொல்லி, இங்கே கூச்சல் போடுகிறீர்கள்... இந்தி பேசும் நீங்கள் தமிழகத்துக்கு வந்தால், உங்களைத் தமிழில் பாடச் சொன்னால் எப்படி இருக்கும்... உங்கள், முகமது ரபியை தமிழ் பாடல் பாடச் சொன்னால் அவரால் பாட முடியுமா... இதோ, இங்கே மேடையில் உட்கார்ந்திருக்கும் இந்த குள்ளமான மனிதர் யார் தெரியுமா... அவர் தான், பிரபல இசையமைப்பாளர், விஸ்வநாதன். உங்கள், சங்கர் - ஜெய்கிஷனை விட உயர்ந்தவர்.

'இதோ... இவர் தான் சிவாஜி கணேசன், ஆசியாவிலேயே தலைசிறந்த நடிகர்; உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கும் நான் யார் தெரியுமா... நான் தான் இந்தியாவின் சிறந்த ஹாஸ்ய நடிகன். உங்கள் ஹாஸ்ய நடிகர்களைக் கேட்டுப் பாருங்கள்; ஒப்புக் கொள்வர். நான் நடிகன் மட்டுமல்ல; தயாரிப்பாளன், இயக்குனர், கதாசிரியன், பாடகன், நாட்டியக்காரன் எல்லாமே... இப்போது நான், தமிழ்ப் பாடல் தான் பாடப் போகிறேன். அதற்கு, உங்கள் கர்னல் அர்த்தம் சொல்வார். அதை, அடுத்து சில ஹிந்திப் பாடல்களையும் பாடுவோம்; பத்மினியும் நடனமாடுவார்...' என்று சொல்லி, பிறக்கும்போதும் அழுகின்றாய்... என்ற பாடலை பாடத் துவங்கினார். அதன் அர்த்தத்தை கர்னல் மொழிபெயர்த்துக் கூற, கூட்டம் கண் கலங்கி, ரசித்தது.

பாடி முடித்து, மீண்டும் பேச எழுந்தார் சந்திரபாபு. போரில், தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் அதிகம் கொல்லப்படுகின்றனர். மற்ற மாநில வீரர்கள், போரில் தமிழர்களை முன் நிறுத்தி, தாங்கள் தப்பித்துக் கொள்கின்றனர் என்ற எண்ணம், சந்திரபாபுவின் மனதில் இருந்தது. 'எங்க தமிழனை எல்லாம் கூட்டி வந்து சாகடிக்கிறீங்க... நீங்க எல்லாம் பின்னால நிக்கறீங்களேடா...' என, எதைப் பற்றியும் யோசிக்காமல், தனக்குத் தோன்றியதை, மேடையில் பேசினார்.

நிகழ்ச்சிகளை முடித்து, சென்னை திரும்பும் முன், அப்போது, ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதா கிருஷ்ணன், சினிமா நட்சத்திரங்களை தம் மாளிகைக்கு அழைத்து, ராஜமரியாதையோடு விருந்து கொடுத்தார். அதன் பின், ஓர் அறையில், சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அமர்ந்து, ஜனாதிபதியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

எம்.எஸ்.வி.,யை பார்த்தபடி, 'யாராவது பாடுங்களேன்...' என்றார், ராதாகிருஷ்ணன்.

ஹார்மோனியப் பெட்டி இல்லாமல் எப்படிப் பாடுவது என்று, எம்.எஸ்.வி.,க்குத் தயக்கம்.

உடனே, ஹார்மோனியப் பெட்டியை கொண்டு வர உத்தரவிட்டார், ராதாகிருஷ்ணன். பத்து நிமிடத்தில், புது ஹார்மோனியம் வந்தது. எம்.எஸ்.வி., வாசிக்க, சந்திரபாபு பாடத் துவங்கினார்.

பிறக்கும்போதும் அழுகின்றாய்... பாடல் தான்.

மெய்மறந்து கேட்ட ராதாகிருஷ்ணன், 'அடடா, என்ன ஒரு அர்த்தம்; பிரமாதம்...' என, மனம் திறந்து பாராட்ட, சந்திரபாபுவுக்கு குஷி தாளவில்லை.

தன் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து, ராதாகிருஷ்ணனின் மடியில் போய் அமர்ந்தவர், அவர் தோளில் கையைப் போட்டு, அவர் தாடையைப் பிடித்துத் தடவி, 'கண்ணா, ரசிகன்டா நீ...' என, ஜனாதிபதி என்றும் பார்க்காமல், உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்.

சிவாஜி மற்றும் ஜெமினி என, எல்லாரும் கோபமாக, எம்.எஸ்.வி.,யை முறைத்து, பாட்டை நிறுத்தச் சொல்ல, ராதாகிருஷ்ணனோ, சந்திரபாபுவின் அந்தச் செயலை மிகவும் ரசித்து, சிரித்தபடியே பதிலுக்கு அவரது தாடையைத் தடவினார்.

இப்படி யாராக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி, ஒளிவு மறைவு இன்றி, தன் உணர்வுகளை வெளிப்படுத்திவிடுவார்; அது தான், சந்திரபாபு!

சுந்தரம், வின்சென்ட், மாதவன், அருணாசலம், கோபு மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து, 'சித்ராலயா' என்ற பெயரில், திரைப்பட யூனிட்டை துவங்கினர்.

அவர்களது யூனிட்டில், சந்திரபாபுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சித்ராலயா அலுவலகத்துக்கு நேரே சென்று, 'டெக்னீஷியன்ஸ் யூனிட், திரைப்பட உலகுக்குத் தேவை...' என்று பாராட்டினார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கு பின், சேவா ஸ்டேஜின், போலீஸ்காரன் மகள் என்ற நாடகத்தை படமாக எடுக்க விரும்பினார், இயக்குனர், ஸ்ரீதர்.

மற்ற நடிக, நடிகையர் தேர்வு செய்யப்பட்டு விட்ட நிலையில், காமெடி பாத்திரத்தில் யாரைப் போடுவது என்பது பற்றிய சிறு குழப்பம் வந்தது.

'இந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமான ஆள், சந்திரபாபு தான்...' என, உறுதியாக சொன்னார், வின்சென்ட். ஸ்ரீதருக்கும் அதில் உடன்பாடு இருந்தது.

சித்ராலயா அலுவலகத்தில் இருந்து, சந்திரபாபுவுக்கு போன் செய்து, 'உங்கள சந்திக்கணுமே, எப்போது பாக்கலாம்...' எனக் கேட்டதும், 'இதோ புறப்பட்டு வர்றேன்...' என, சித்ராலயா அலுவலகத்திற்கு வந்தார், சந்திரபாபு.

'நெஞ்சில் ஓர் ஆலயம் படம் நன்றாக ஓடுகிறது... அடுத்து என்ன படம் எடுக்கப் போறீங்க?' என்று ஸ்ரீதரிடம் கேட்டார், சந்திரபாபு.

'போலீஸ்காரன் மகள்; அப்படத்திற்கு நகைச்சுவை பாத்திரத்தில் நீங்க நடிக்கணும்...' என்று, ஸ்ரீதர் சொன்னது தான் தாமதம்... தான் உட்கார்ந்த சோபாவில் இருந்து நாலு அடி மேலே தாவி, ஸ்ரீதர் இருந்த இடத்துக்கு பாய்ந்து, அவரை உருட்டித் தள்ளி, அணைத்தபடி, 'நான் பாக்கியசாலி...' என்று கூறி, முத்தம் இட்டார், சந்திரபாபு.

பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம், ஏதோ சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது போல், ஆச்சரியத்துடன் பார்த்தனர். உற்சாகம் வந்து விட்டால், யாராலும், சந்திரபாபுவின் செயல்களை கட்டுப்படுத்த இயலாது.

போலீஸ்காரன் மகள் படம் தான், மனோரமாவும், சந்திரபாபுவும் இணைந்து நடித்த முதல் படம். ஆனால், அதற்கு முன், சந்திரபாபுவை, மனோரமா சந்தித்த சம்பவம் சுவையானது.

புகழ் பெற்ற காமெடியனாக, சந்திரபாபு வலம் வந்த நேரத்தில், நாடகங்களில் கதாநாயகியாகவும், சினிமாவில் சிறு சிறு வேடங்களிலும், நடித்து வந்தார், மனோரமா. அதனால், சந்திரபாபுவுடன் இணைந்து காமெடி செய்ய மனோரமாவுக்கு மிகவும் ஆசை. அச்சமயம், சந்திரபாபுவுக்கு கதாநாயகன் வாய்ப்புகள் வந்ததால், 'இனி, சந்திரபாபு கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பார்...' என்ற பேச்சு பரவியது; இதைக் கேட்டு, மனோரமாவுக்கு, தன் ஆசை, நிராசை ஆகிவிடுமோ என்ற வருத்தம் ஏற்பட்டது.

இந்நேரத்தில், கோயம்புத்துாரில், கண்ணதாசன் நடத்திய சினிமா விழா ஒன்றில் சந்திரபாபுவை சந்திக்கும் வாய்ப்பு, மனோரமாவுக்கு கிடைத்தது.

விழாவிற்கு, கோட் - சூட் அணிந்து, மிகவும் ஸ்டைலாக வந்திருந்தவர், சந்திரபாபு மட்டும் தான். சந்திரபாபுவுடன் ஜோடியாக நடித்த, எல்.விஜயலட்சுமி, மனோரமா அருகில் அமர்ந்திருந்தார். விஜயலட்சுமியின் அருகில் வந்த சந்திரபாபு, அவருடன் ஜாலியாக பேசத் துவங்கி விட்டார்.

தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ், சென்னை.

முகில்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us