தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தொண்டு செய்வதே கடமை!

தொண்டு செய்வதே கடமை!

தொண்டு செய்வதே கடமை!


PUBLISHED ON : அக் 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடே போற்றும் வகையில், சென்னையில் நடந்து முடிந்த, 71வது சுதந்திர தின விழாவில், 'இளைஞர் விருது' பெற்ற நெல்லை, ஸ்ரீபதி தங்கத்தை ஊரே போற்றுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், வீரவல்லூரில், எளிய குடும்பத்தை சேர்ந்தவர், ஸ்ரீபதி தங்கம். அம்மா இல்லை; அப்பா உலகநாதன் தான் அவரது உலகம்.

சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர், தங்கம். அவர் படிக்கும், நெல்லை காந்திநகர், ராணி அண்ணா பெண்கள் கல்லூரி நிர்வாகம் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும் மேலும் சமூக சேவையில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

கல்லூரியில் என்.எஸ்.எஸ்., எனப்படும் நாட்டு நலப் பணித் திட்டம் மூலமாக, பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். நீர் நிலைகளுக்கு ஆபத்தை தரும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட ஆட்சியர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளார்.

கல்லூரி மாணவியரை திரட்டி, போலியோ, டெங்கு மற்றும் கேன்சர் விழிப்புணர்வு பேரணி நடத்துவதுடன், கல்லூரியில், ரத்த தானம், கண் தானம் மற்றும் சித்த மருத்துவ முகாம் நடத்துகிறார்.

கல்லூரி செயலராகவும், என்.எஸ்.எஸ்., தலைவராகவும் இருப்பதால், நாஞ்சன்குளம் போன்ற கிராமங்களை தத்தெடுத்து, அக்கிராமத்து மண்வாகிற்கு ஏற்ப, மரங்கள் நட்டு வளர்த்து, கிராம மக்களிடம் ஒப்படைத்துள்ளார். 123 பேரில் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, குலுமணாலியில் நடைபெற்ற பத்து நாள் சிறப்பு முகாமில் பங்கேற்று, அங்கு கிடைத்த மலையேற்ற பயிற்சி, மழை வெள்ளத்தில் மக்களை எப்படி காப்பாற்றுவது மற்றும் அடிபட்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி போன்ற பயிற்சிகளை சக மாணவியருக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்.

தற்போது, மூன்றாம் ஆண்டு மாணவியாக இருந்தாலும், முதலாம் ஆண்டிலிருந்தே பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும், 'ஸ்கிரைப்பராகவும்' இருக்கிறார்.

இப்படி பொது நலத் தொண்டு செய்து கொண்டே இருந்தால், படிப்பு என்னாவது என்று சிலர் கேட்கக்கூடும். அதில் சமரசமே இல்லை. எப்போதுமே, வகுப்பில் முதல் மாணவி தான். இவரது லட்சியமே நன்றாக படித்து, கலெக்டராவது தான்.

வயது, 19 தான் என்றாலும், கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சி, மரம் வளர்ப்பு, சீமைக்கருவேல மர ஒழிப்பு, கல்வி, மருத்துவ விழிப்புணர்வு என்று, கேட்பவர் மனம் நிறைவடைய பேசுகிறார்.

'விருது வாங்கிய கையோடு, நெல்லைக்கு போயிட்டீங்களேம்மா... இங்க மீடியாவெல்லாம் உங்கள தேடிட்டுருந்தோம்...' என்றதும், 'அதுவா சார்... காலேஜ்ல படிக்கிற, 4,500 மாணவியருக்கும் இலவச மரக்கன்று வழங்கும் விழா வச்சுருக்கோம். நான் வரலைன்னா மரக்கன்றுகள் மட்டுமல்ல, பிள்ளைகளும் வாடிருவாங்க. அதனால தான் ஓடியாந்துட்டேன்...' என்றார்.

மேலும், 'விருதை எதிர்பார்த்து இதையெல்லாம் செய்யவில்லை; என் ஆத்ம திருப்திக்காக செய்தேன். சுதந்திர தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். பின், சென்னை வரச் சொல்லி, சிறந்த இளைஞர்களுக்கான விருதை கொடுத்து கவுரவித்தனர். மிகவும் மகிழ்ச்சியாகவும், இன்னும் கூடுதலாக உழைக்க உற்சாகமும் ஏற்பட்டுள்ளது...' என்று கூறும் ஸ்ரீபதி தங்கம், உண்மையிலேயே பெண் குலத்தின் சொக்கத் தங்கம் தான்.

- எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us