PUBLISHED ON : மார் 19, 2017

எத்தனை விதமான சட்னி இருந்தாலும், சிறிதேனும், இட்லிப்பொடி தொட்டு சாப்பிட விரும்புவர் பலர். அதேபோன்று, தோசையில், 'வெரைட்டி' விரும்புவோருக்கு ஏற்ற விருந்து, நெய்பொடி தோசை!
சென்னை, தி.நகர் நடேசன் பூங்காவிற்கு அருகில், கண்ணதாசன் சாலையில் உள்ள தள்ளு வண்டி கடையில், இரவு 11:00 மணிக்கு சென்றாலும், சுடச்சுட, ஆவி பறக்கும் நெய்ப்பொடி தோசையை ருசிக்கலாம்.
இதன் சுவையின் காரணமாக, குடும்பம் குடும்பமாக இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
சிறிது அதிகமாக உளுந்து சேர்த்து, நைசாக அரைத்த மாவில், தோசை வார்த்து, உளுந்து, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை, மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து, குருணையாகவோ, 'நைஸ்' ஆகவோ இல்லாமல், முக்கால் பதத்திற்கு இடித்து தயாரித்த தோசை பொடியை, இதன் மீது தூவி, அதில் சிறிது நெய் விட்டு, மணக்க மணக்க சுட்டுத் தருகின்றனர்.
மொறு மொறுப்பான பொடி, சட்னி மற்றும் சாம்பாரும் தொட்டு சாப்பிட, அவ்வளவு ருசியாக உள்ளது, நெய்பொடி தோசை!
