தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிலுக்கு ஸ்மிதா! (1)

சிலுக்கு ஸ்மிதா! (1)

சிலுக்கு ஸ்மிதா! (1)


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆந்திர மாநிலம், ராஜமகேந்திரபுரம் அருகே, போவாலி கிராமம். ஏலுார் ரயில் நிலையத்திலிருந்து மாட்டு வண்டியில் தான் போக முடியும்; ரேடியோ கூட இல்லாத குக்கிராமம்.

அங்கிருந்த குடிசைகளில் வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளில் ஒருவர் தான், நரசம்மா. அவருக்கு ஒரு பெண் குழந்தை. பெயர், விஜயலட்சுமி. இரண்டாவதாக, ஓர் ஆண் குழந்தை பிறந்த சில நாளிலேயே, அவரது புருஷன் ஓடிப்போய் விட்டார்.

'என் புருஷனை பார்த்தீங்களா...' என, ஊரில் உள்ள, ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார், நரசம்மா.

தேடி தேடி களைத்து போன அவருக்கு புரிந்து விட்டது. காணாமல் போன புருஷன் என்றால், தேடி கண்டுபிடிக்கலாம்; போலீசில் புகார் கொடுக்கலாம். வேண்டாம் என்று விட்டு விட்டு, இன்னொருத்தியுடன் ஓடிப் போனவனை என்ன செய்ய முடியும்!

'அந்தாளு, போனா போகட்டும்... எனக்கு துணையா, ரெண்டு புள்ளைங்க இருக்காங்க...' என்று, மனதை தேற்றி, இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தார்.

விவசாய கூலி என்று ஆரம்பித்து, கிடைத்த வேலைகளை செய்தார். குழந்தைகளை, பக்கத்து குடிசையில் வசிக்கும், அன்னபூரணி அம்மாள் வீட்டில் விட்டு, வயல் வேலைக்கு போனார், நரசம்மா.

'பாப்பா... பக்கத்து ஊரு கொட்டாய்ல, இன்னிக்கு, புது படம் மாத்தியிருக்கான்... சாயங்கால ஆட்டத்துக்கு உன்னை அழைச்சுட்டு போறேன்...' என்றார், அன்னபூரணி.

விஜயலட்சுமி என்ற விஜிக்கு, அம்மாவை விட, அவ்வப்போது சினிமாவுக்கு அழைத்து போகிற, அன்னபூரணியை அதிகம் பிடித்து விட்டது. விஜியை செல்லமாக, 'பாப்பா' என்றே அழைத்தார்.

நான்காவது வரையே பள்ளிக்கூடம் போனாள், விஜி. போகும், வரும் வழியில், சாவித்திரி நடித்த சினிமா, 'போஸ்டர்'களை வெகு ஆர்வத்துடன் நின்று பார்ப்பாள். சினிமா, 'போஸ்டர்'கள், வசனங்கள், பாடல்கள் மனதில் பதிந்த அளவுக்கு, பள்ளி படிப்பு பதியவில்லை. சதா நேரமும், சாவித்திரியின் சினிமா புகைப்படங்கள், நிறைய புத்தகங்களை கையில் வைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அப்போது, அவளுக்கு வயது, 8. கருப்பாக தான் இருந்தாள். ஆனாலும், மனதுக்குள், தன்னை சினிமா நட்சத்திரமாக எண்ணி மகிழ்வாள். 'கருப்பா இருந்தா என்ன, எனக்கு பிடித்த நடிகை, சாவித்திரியும் கருப்பு தானே...' என, தனக்கு தானே சொல்லிக் கொள்வாள், விஜி.

வறுமையின் கோரப் பிடியில், அகல விரிந்த கண்களை, இன்னும் அகல விரித்து, சாவித்திரியை போல் தன்னையும் ஒரு நடிகையாக பாவித்து, 'ஓ தேவதாஸ்...' என்று பாடித் திரிந்தாள். பல நேரங்களில், அந்த கற்பனை தான், அவளது பசியை நிஜத்தில் மறக்க செய்தது.

பருவம் எய்தினாள், விஜி. அடுத்த சில ஆண்டுகளில், திருமணம் நடந்தது. தன் குடிசையிலிருந்து மாமியாரின் குடிசைக்கு இடம் பெயர்ந்தாளே தவிர, வறுமை இடம்பெயரவில்லை.

தாலி, தாம்பத்யம், புருஷன், மாமியார் என, இதெல்லாம் சில நாட்களே நீடித்தது. சாவித்திரி போல், நடிகையாக வேண்டும் என்ற கனவு மட்டுமே, அவளிடம் மிச்சமிருந்தது. புகுந்த வீட்டை உதறித்தள்ளி, மீண்டும், போவாலிக்கே வந்து விட்டாள், விஜி.

'சரி, பாப்பா... அழாதே... நான் இருக்கேன்ல, நீ எதுக்கும் கவலைப்படாதே...' என, அன்புடன் அடைக்கலம் கொடுத்தாள், அன்னபூரணி.

அந்த சிறிய கிராமத்தில் இருந்து, சினிமா கனவு கண்டு கொண்டிருப்பதில் பயனில்லை என்பதால், அந்த ஊரை விட்டு கிளம்பினர், விஜியும், அன்னபூரணியும்.

சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது, ரயில்.

'பாப்பா... நீ, பெரிய நடிகையா வரப்போற... எனக்கு, மெட்ராசுல சினிமாக்காரங்க சிலரை தெரியும். எப்படியாவது அவங்ககிட்ட சொல்லி, உன்னை, சினிமாவுல நடிக்க வைக்க வேண்டியது, என் பொறுப்பு...' என, விஜிக்கு, தைரியம் சொல்லி, அழைத்து வந்தார், அன்னபூரணி.

சாயாதேவி என்ற பழம்பெரும் தெலுங்கு நடிகையை, அன்னபூரணிக்கு தெரியும். அவர் மூலம், சின்ன சின்ன சினிமா வாய்ப்புகளாவது வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்னபூரணியின் உறவினர் ஒருவர், பாரிமுனை, அங்கப்ப நாயக்கன் தெருவில் இருந்த சத்திரம் ஒன்றில், தங்க இடம் கொடுத்தார். கொஞ்ச காலம் அங்கிருந்தனர். பின், உறவினர் வீட்டில் சில நாட்கள்.

மீண்டும் சாயாதேவியை சந்தித்ததில், ஒரு வழி கிடைத்தது. அபர்ணா என்றொரு கவர்ச்சி நடிகை, அப்போது கொஞ்சம் பிரபலம். சாயாதேவியின் சிபாரிசில், சாலிகிராமம், காவேரி நகரில் இருந்த அபர்ணா வீட்டின் வெளிப்புறத்தில், ஓர் ஓரத்தில் தங்க இடம் கிடைத்தது.

ஒரு பையில் கொஞ்சம் துணிமணிகள், ரெண்டு தட்டு, டம்ளர், கூடவே ஒரு நாய் குட்டி. அப்போதைக்கு தங்கும் பிரச்னை தீர்ந்தது.

விஜிக்காக, 'ஸ்டுடியோ ஸ்டுடியோ'வாக, அலைய ஆரம்பித்தார், அன்னபூரணி. பார்க்கிற சினிமாகாரர்களிடம் எல்லாம் வாய்ப்பு கேட்டு கெஞ்சினார்; காலில் விழ கூட தயங்கவில்லை.

ம்ஹூம்... பிரயோஜனமில்லை. ஏனென்றால், விஜி, அப்போது பார்க்க அத்தனை எடுப்பாக இல்லை. குண்டாக, குள்ளமாக, கருப்பாக, வறுமை தாண்டவமாடிய முகமாக, யாரையும் கவரவே இல்லை.

இந்நிலையில், அபர்ணா வீட்டில், விஜியை கூப்பிட்டனர்; நடிக்க அல்ல, வீட்டு வேலைகளை செய்யும் எடுபிடியாக. அன்னபூரணிக்கு, சமையல் வேலை. அங்குள்ள, 'அவுட் ஹவுசி'லேயே இருவரும் தங்கினர்.

தொடரும்

பா.தீனதயாளன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us