
உதவிகள் பலவிதம்!
அண்மையில், அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், எங்கள் வீட்டிற்கு வந்தார். குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர், அவரவர்களின் கல்வி மற்றும் இதர பிற தகுதிகள் பற்றி, ஆர்வமாக கேட்டார்.
எதற்காக இந்த தகவல்கள் என்ற குழப்பத்திலேயே பதிலளித்துக் கொண்டிருந்தோம். அம்மாவின் தொடர் வாசிப்பு திறன், மகன், தற்காப்பு கலையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றது. கணினி துறையில், மகளின் உயர் கல்வி போன்றவைகளை அறிந்து, முகம் மலர்ந்தார்.
'உங்களால், எங்கள் பள்ளிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ முடியுமா...' என்றதும், 'ஓ... நன்கொடை வேண்டி தான், இத்தனையும் விசாரித்தாரா...' என, நாங்கள் நினைத்தோம்.
அதற்குள் அவரே, 'எங்களுக்கு பண உதவி எதுவும் வேண்டாம். ஆனால், படிக்கும் பழக்கமுள்ள உங்கள் அம்மா, வாரம் அல்லது மாதம் ஒருமுறை வந்து, பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி கதைகள், நீதிபோதனை வகுப்பை நடத்தி தரலாம்.
'முதுகலையில் கணினி முடித்த மகள், மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கலாம். மகன் விரும்பினால், தற்காப்பு கலை பயிற்சி அளிக்கலாம்.
'தங்களை போன்றவர்களின் பேராதரவோடு, தற்போது, எங்கள் பள்ளி மாணவர்களுக்கு, யோகா, ஹிந்தி, கைவினை பொருள் தயாரிப்பு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போன்றவை கூடுதலாக வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
'இலவசமாக எடுக்க இயலாதென்றால், எங்களால் முடிந்ததை தருகிறோம். மனமுவந்து ஏற்று, உதவ முடியுமா?' என்றார்.
அவரின் வித்தியாச முயற்சி, எங்களை வெகுவாக கவர்ந்தது. நாங்களும், எங்களுக்கு தெரிந்தவர்களும், அவரவருக்கு தெரிந்ததை, மாணவர்களுக்கு இலவசமாக உதவுகிறோம்.
தற்போது, அப்பள்ளி மாணவர்கள், பாட்டு, பரதம், இசை கருவிகள் வாசிப்பு, கல்யாண கச்சேரிகளில் பாடுவது என, திறமைகளை வெளிப்படுத்தி, ஜொலிக்கின்றனர்.
மின் விளக்குகள் ஒளி தரலாம். ஆனால், ஒரு அகல் விளக்கு தான், இன்னொரு அகல் விளக்கை ஏற்ற உதவும்.
தி. பூபாலன், காவேரிப்பாக்கம்.
மனித உணர்வா... மத உணர்வா?
எங்கள் தெருவில் உள்ள, இந்து மதத்தை சேர்ந்தவர், வீட்டை விற்றார்; வாங்கியவர், கிறிஸ்தவர்.
வீட்டை விற்பதற்கு முன் வரை, மாத சம்பளத்திற்கு, ஒரு வேதியரை அமர்த்தி, வீட்டு வாசலில் இருக்கும், பிள்ளையாருக்கு, தினமும் பூஜை செய்து வந்தார், வீட்டு உரிமையாளர்.
இந்நிலையில், ஒரு வேண்டுகோளாக, 'பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டாம். தினமும் பூஜை நடக்க வேண்டும். அதற்குரிய சன்மானத்தை நானே அளிக்கிறேன்...' என, கூறினார், வீட்டை விற்றவர்.
வீட்டை வாங்கிய, கிறிஸ்தவ அன்பரோ, ஆச்சரியப்படத்தக்க வகையில், 'பூஜை செய்யவும் அனுமதி அளிக்கிறேன். வேதியருக்குரிய சம்பளத்தையும், நானே தருகிறேன்...' என, உறுதியளித்தார்.
அவரின் சில நண்பர்கள், இது பற்றி கேட்டதற்கு, 'பிள்ளையார் வழிபாடு வெளியில் நடைபெறுவதால், மத உணர்வுக்கு, எந்த இடைஞ்சலும் இல்லை...' என்றார்.
மத உணர்வால், மனித உணர்வுகளை துாண்டி, அரசியல் பிழைப்பு நடத்துவோர், இவரை பார்த்தாவது, திருந்த வேண்டும்.
- கே. கீதாவாசன், சென்னை.
மனம் இருந்தால்...
நண்பன் வீட்டினர், தலைமுறை தலைமுறையாக, மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
'சூப்பர் மார்க்கெட்களின் வருகையால், சில ஆண்டுகளாக, கடையில் வருமானம் இல்லை; கடையை மூடிவிட்டு, வேறு வேலைக்கு செல்லலாம் என்றிருக்கிறேன்...' என்று புலம்பினான், நண்பன்.
'ஏண்டா... யாரு, என்னன்னு தெரியாமலேயே, சீட்டு மற்றும் தீபாவளி பண்டு என்று பணத்தை கட்டுகின்றனர், நம் மக்கள்.
'உனக்கு, சொந்த வீடு, 50 ஆண்டு கால பாரம்பரிய கடை என்ற, நற்பெயர் உள்ளது. கொஞ்சம் மாற்றி யோசித்தால், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் பொங்கல் என்று, அந்தந்த பண்டிகைக்கு ஏற்ற வகையில் மளிகை பொருட்கள் விநியோகிக்க, சீட்டு நடத்தி, வரும் பணத்தை அப்படியே வங்கியில் போடு.
'பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அந்தந்த பண்டிகைக்கு எல்லாருக்கும் பிரித்து கொடுக்கலாம். வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு... வட்டிக்கு வட்டியும் ஆச்சு...' என்று, யோசனை கூறினேன்.
அந்த யோசனையை ஏற்று, தரமான பொருட்களை, குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகித்ததால், முதலாம் ஆண்டில், 43 பேர் மட்டுமே சேர்ந்தனர். இந்த ஆண்டு, தீபாவளியின் போது, 470 பேருக்கு மேல் சேர்ந்து, பொருட்களை, 'டெலிவரி' செய்ய முடியாமல் திக்குமுக்காடி போனான், நண்பன்.
எவ்வளவு பெரிய கடைகள் வந்தாலும், சிறிய கடைகளுக்கென்று குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்வர். காலத்திற்கேற்றவாறு மாற்றி யோசித்து, வியாபாரம் செய்ய வேண்டும்.
வியாபாரிகளே... நம் மக்கள், சிறுதுளி பெருவெள்ளம் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள். அதில், உங்கள் நேர்மையை மூலதனமாக்கி, வியாபாரத்தை பெருக்க முயற்சியுங்கள்!
— ஜே. பரத்குமார், கோவை.

