PUBLISHED ON : ஆக 08, 2021

எவ்வளவுதான் சினிமா பிரம்மாண்டமானதாக இருந்தாலும், நாடகம் தான், எஸ்.வி.சேகருக்கு உயிர் என்று, கடந்த வாரம் எழுதியதைப் பார்த்த ரசிகர்கள் பலருக்கு, ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
'என்ன சார், 100 நாடகத்தில் நடித்து பெறும் வருமானத்தை, ஒரே படத்தில் வாங்கி விடலாமே. தவிர, அதன், 'ரீச்சே' தனியாயிற்றே...' என்றெல்லாம், அவரிடம் கேள்விக்கனைகளை வீசினர்.
அவர் ஏற்கனவே சொல்லியபடி, நாடக நடிகராக இருந்த போதும் சரி, சினிமா நடிகராக மாறிய போதும் சரி, எம்.எல்.ஏ.,வாக இருந்த போதும் சரி, எப்போதுமே பணத்தின் மீது நாட்டம் கொண்டதில்லை.
பணம் தான் பிரதானம் என்றால், எம்.எல்.ஏ.,வாக இருந்தபோதே சம்பாதித்து இருப்பார். கட்சியில் இருந்து தேர்தல் செலவிற்கு அவருக்கு கொடுத்த பணத்திற்கே, ஜெயலலிதாவிடம் கணக்கு காட்டியவர்.
அப்போதும், இப்போதும், அவரின் சந்தோஷத்திற்கு பணம் குறுக்கே நின்றது இல்லை; குறுக்கே வரவிடுவதும் இல்லை. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா, வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். வரும் வருமானத்திற்குள் வாழப் பழகிக் கொள் அல்லது செலவிற்கு ஏற்ப, உன் வருமானத்தை நேர்மையாக பெருக்கிக் கொள்; அவ்வளவு தான்!
குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் வருகிறது என்றால், யாருக்கெல்லாம் உதவலாம் என்று திட்டமிட ஆரம்பித்து விடுவார். அந்த நிதியை அப்போதே மேடையில் வைத்து கொடுத்தும் விடுவார்.
அவர் தேவைக்கு மேல் பணம் இருந்தால், அதை கல்விக்கான உதவிக்தொகையாகவோ, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணம் வாங்கும் செலவாகவோ, தேடித் தேடிப் போய் கொடுத்து விடுவார்.
மந்தைவெளியில் மாடி வீடு, கார் என்று எல்லாமும் இருந்தாலும், உழைத்துப் பிழைக்கும் சுகமே தனி. அவரது ஒரே மகன், அஷ்வின் நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். மருமகள் ஸ்ருதி, திருமண ஆடை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
சரி, இனி நாடகத்திற்கு வருவோம். நாடகத்திற்கு என்ன வயதோ, அதே வயது, அவரது நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இருக்கும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடனேயே இருக்கின்றனர். நாடகத்தின் மூலம் மக்கள் எந்த அளவு ஜாலியாக இருப்பரோ, அதே அளவிற்கு அவர்களும் ஜாலியாகவே இருப்பர்.
முப்பது பேர் கொண்ட அவர்களின் குழுவிற்கு, எப்போதுமே, 55 பேர் செல்லும் பேருந்தைத்தான் வாடகைக்கு அமர்த்துவர். இதனால், ஒருவரை ஒருவர் நெருக்கியடித்துக் கொள்ளாமல், 'ரிலாக்ஸ்' ஆக பயணம் செய்வர்.
கோவையில் ஒரு நாடகம் போடப்போன போது, 104 டிகிரி, காய்ச்சல் வந்துவிட்டது,
எஸ்.வி.சேகருக்கு. மாலையில் நாடகம் போட்டாக வேண்டும். என்ன செய்வது என தெரியாதபோது, அங்கு வந்த டாக்டர், அவருக்கு வித்தியாசமான சிகிச்சை கொடுத்து, நார்மலுக்கு கொண்டு வந்தார். அவருக்கும் சந்தோஷம்; அவரால் ரசிகர்களுக்கும் சந்தோஷம்.
நான்கு முறை டாக்டர் பட்டம்!
கடந்த, 1990களில், அமெரிக்காவில் நடத்திய நாடகங்களின் அடிப்படையில், அங்குள்ள உலகத்தமிழ் பல்கலைக்கழகம், எஸ்.வி.சேகருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இதுவரை, நான்கு டாக்டர் பட்டங்கள் பெற்றிருக்கிறார்.
— தொடரும்
எல். முருகராஜ்
