PUBLISHED ON : ஏப் 23, 2023

கணவரைப் பிரிந்து தனி மனுஷியாக நின்று போராடிய, அம்மாவின் பிரிவு, பத்மினியை மிகவும் பாதித்தது. இத்துயரத்தை பங்கிட்டு கொள்ளவும், ஆறுதல் சொல்லவும் அக்கா, தங்கை இல்லை. சாய்ந்து கொள்ள துணைவரின் தோளுமில்லை என்ற பரிதவிப்பில் இருந்தார், பத்மினி.
இந்தியா திரும்பியதும், சில நாட்கள், கேரளாவில், பத்மினி தங்கியிருந்த போது, பிரபல டைரக்டர் பாசில், அவரை பார்க்க வந்தார். மலையாளத்தில் மாறுபட்ட படங்களை இயக்கியவர், இவர்.
தன் மகள் மீதும், பேத்தி மீதும் உயிரையே வைத்திருக்கும் பாசமுள்ள பாட்டியின் கதை ஒன்றை கூறினார். அந்த பாட்டியின் வேடத்தில் பத்மினி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார், இயக்குனர் பாசில்.
கணவர், சகோதரிகள், தாய், இவர்களின் இழப்புக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார், பத்மினி. இருப்பினும், 'சில நாட்கள் மட்டும் நடித்துக் கொடுத்தால் போதும்...' என்று, வேண்டுகோள் வைத்தார், இயக்குனர் பாசில்.
திரைக்கதையை இயக்குனர் விவரித்து சொன்னபோது, அந்த கதாபாத்திரம் பத்மினியை வெகுவாக ஈர்த்து விட்டது. பாட்டி பாத்திரத்தை சிறப்பாக செய்து, மீண்டும் நடிப்பில் முத்திரை பதித்தார், பத்மினி.
அந்தப் படம் தான், நோக்கெத்தாத்த துாரத்து கண்ணும் நட்டு. பத்மினியின் பேத்தியாக நதியா அறிமுகமானார். மகத்தான வெற்றி பெற்றது, படம். மலையாள பத்திரிகைகளும், ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். மீண்டும் பத்மினி வந்து விட்டார் என்று விமர்சனம் எழுதி பாராட்டினர்.
இதே படம், பாசில் இயக்கத்தில், பூவே பூச்சூடவா என்று, தமிழில் வெளியானது; பத்மினிக்கு அதே பாட்டி வேடம். தமிழ் திரையுலகம் பத்மினியை பாராட்டு மழையில் நனைத்தது. சிறந்த குணச்சித்திர நடிகை என்ற விருது, பத்மினிக்கு கொடுக்கவும் மறக்கவில்லை.
கடைசி காலத்தை, சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த, தன் வீட்டிலேயே கழித்தார், பத்மினி.
'என்னுடன் நடித்த நடிகர், நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரையும் எந்த பிறவியிலும் மறக்க முடியாது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என, மூன்று மொழி படங்களில் நடித்தேன்.
'ஹிந்தியில் மிகப் பிரபலமாக இருந்தேன். அங்கும் ரசிகர்கள் அதிகம். ஹிந்தி படங்களை ரஷ்யா வரை அன்று வெளியிடுவர். அங்கும் எனக்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது, வானத்தில் பறப்பது போல உணர்கிறேன்.
'என்னால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. ஆனாலும், சினிமாவின் மீது எனக்கு இன்னமும் ஈர்ப்பு இருக்கிறது...' என, தன் நினைவுகளை பதிவு செய்திருக்கிறார், பத்மினி.
செப்., 23, 2006ம் தேதி, அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள, சக்கர நாற்காலியில் பத்மினியை அழைத்து வந்தனர். அதுதான் அவர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி. மறுநாள் இரவு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அந்த நாட்டிய மயில், தன் நடனத்தை நிறுத்திக் கொண்டது.
பத்மினி உடல், வேளச்சேரியிலுள்ள அவரது தம்பி மகளான, நடிகை ஷோபனாவின் இல்லத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
கோடிக்கணக்கான ரசிகர்கள் மனமேடையில் அபிநயம் பிடித்த நாட்டியப் பேரொளி பத்மினி வாழ்க்கை, சென்னையில் தொடங்கி சென்னையில் நிறைவடைந்தது.
றந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, ஐந்து முறை பெற்றிருக்கிறார், நவரசநாயகி பத்மினி.தமிழக அரசின் கலைமாமணி விருது, 1958ல் பெற்றார்.சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது, மாஸ்கோ இளைஞர் விழாவில் வழங்கப்பட்டது.சோவியத் ஒன்றியம், பத்மினிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப் படுத்தியுள்ளது.
தன்னோட அத்தை பெண்கள், நான் என, 10 பேர். அதில், நான் மட்டும் தான் பரதநாட்டியம் கற்றுக் கொண்டவள். அதனாலே லலிதா அத்தைக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.'எனக்கு ஒரு நெத்திச்சுட்டி கொடுத்தாங்க, ராகினி அத்தை. அதுல, அவங்க கூந்தல் முடி நாலு இருக்கு. பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறேன்.'வெண்ணிற உடையில் சாக்லேட் கொடுத்துட்டு பறந்து போகும் ஏஞ்சல் தான், பத்மினி அத்தை. அமெரிக்காவில் இருந்து வீட்டுக்கு வந்தால் வீடே உல்டா ஆகிவிடும், எல்லாமே அவர்களை சுற்றி நடக்கும்...'-
- அத்தைகள் பற்றி இப்படி கூறியுள்ளார், நடிகை ஷோபனா.
படத்தில், பத்மினி சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்தனர். இந்த படத்தில், 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...' என்ற பாடலுக்கு, சிவாஜி, பத்மினி, ராகினி மூவரும் ஆடிய ஆட்டம், ரசிகர்களை தியேட்டரில் ஆரவாரம் செய்ய வைத்தன.இப்படத்தில், முதல் முறையாக, சிவாஜிக்கு பாடியிருந்தார், டி.எம்.எஸ்.,
சவுகார்ஜானகியின், சவுகார் முதல் படத்தில், பத்மினி நடனமாடியது முதல் இருவரும் நல்ல தோழிகள். பேசும் தெய்வம் படத்தில் நடிக்கும் போது, பத்மினிக்கு மாம்பழம் ரொம்ப பிடிக்கும் என்று தெரிந்ததும், சந்திக்கும் போதெல்லாம் மாம்பழம் எடுத்து வந்து கொடுப்பார், சவுகார் ஜானகி.
* சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, ஐந்து முறை பெற்றிருக்கிறார், நவரசநாயகி பத்மினி.
* தமிழக அரசின் கலைமாமணி விருது, 1958ல் பெற்றார்.
* சிறந்த பரத நாட்டிய கலைஞர் விருது, மாஸ்கோ இளைஞர் விழாவில் வழங்கப்பட்டது.
* சோவியத் ஒன்றியம், பத்மினிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
முற்றும்
சபீதா ஜோசப்
