
ஏப்., 5 - ராமநவமி
ராமன் பிறந்தது, புனர்பூச நட்சத்திரம், நவமி திதியில்!
இன்று, ஜென்ம நட்சத்திரத்துக்கே முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், முன்பு, ராமன், கிருஷ்ணர் போன்றோரின் திதிக்கே முக்கியத்துவம் தரப்பட்டது.
அயோத்தி மன்னர் தசரதருக்கு கவுசல்யா, கைகேயி மற்றும் சுமித்திரை என, மூன்று மனைவியர். ஆனாலும், குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பின், நாடாள பிள்ளை வேண்டுமே என்ற கவலையில், குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையைக் கேட்டார், தசரதர்.
'புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பிறக்கும்...' என்று குரு கூறியதும், யாகம் நடத்தப்பட்டது; யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட ஒருவன், தன் கையில் இருந்த பாயச பாத்திரத்தை தசரதரிடம் கொடுத்து, 'இதை தேவியர் மூவரும் அருந்தினால், குழந்தை செல்வம் கிடைக்கும்...' என்றான். திருமாலே பூமியில் பிறக்க இருப்பதால் இந்த முன்னறிவிப்பு!
தசரதர், பாயசத்தை நான்காகப் பகிர்ந்து, ஒன்றை கவுசல்யாவிடமும், மற்றொன்றை கைகேயிடமும், மீதி இரண்டு பகுதியை சுமித்திராவுக்கும் கொடுத்தார். கவுசல்யாவுக்கு, ராமனும், கைகேயிக்கு, பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் பிறக்க வேண்டும் என்பது, திருமாலின் சித்தம்.
பூமியில், தசரத மன்னருக்கு புத்திரனாக பிறக்கப் புறப்பட்டார், திருமால். அவரைத் தாங்கும், 'அனந்தன்' என்ற பாம்பு, 'நானும் உடன் வந்து உங்களை பாதுகாப்பேன்...' என்றது. பாம்பு கண் மூடுவதில்லை.
திருமாலின் ஒப்புதலின்படி, அனந்தன் என்ற பாம்பு, லட்சுமணனாகப் பிறந்தது. 14 ஆண்டுகள், ஒரு வினாடி கூட கண்மூடாமல், ராமனை பாதுகாத்தது. அதேபோன்று, திருமாலின் கையிலுள்ள சங்கு, பரதனாகவும், சக்கரம், சத்ருக்கனனாகவும் உடன் வந்தன.
ராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட லட்சுமணனை விட, பரதனை உயர்த்திச் சொல்கிறது, பாரதம். காரணம், அவன் ஆசையே இல்லாதவன்; அண்ணன் காடு சென்றதும், அவன் பதவியை பிடித் திருக்கலாம். அவ்வாறு செய்யாமல், அண்ணனின் பாதுகையை வைத்து நாட்டை ஆண்டான்.
பக்தனை, 'பாகவதன்' என்பர். பகவானை விட, பாகவதனே உயர்ந்தவன் என்கிறது ஆன்மிகம். பகவான்ராமனுக்கு, பாகவதனான பரதன் சேவை செய்தான் என்றால், அந்த பாகவதனுக்கு சேவை செய்தவன் சத்ருக்கனன்.
இப்படி, வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்தாலும், இந்த அன்புச் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்து காட்டிய இந்த வாழ்க்கை தான், இன்று வரை இந்திய சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், ஏதோ ஒரு பாச உணர்வு, சகோதரர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது.
இந்த சகோதர பாசம், வீட்டுக்குள் மட்டுமல்ல, நாட்டிலும் வேண்டும் என, அந்த ராமபிரானை வேண்டுவோம்!
தி.செல்லப்பா

