PUBLISHED ON : நவ 04, 2018

தீபாவளி நேரத்தில், பலகாரம் செய்வது, பூஜை செய்வது, தன்னை அலங்கரித்து கொள்வது இதெல்லாம் செய்தாலே போதும், என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், தீபாவளியின் போது, வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதால், வீட்டையும் அலங்காரம் செய்தால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தீபாவளி அன்று உங்கள் வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்:
* வரிசையாக தீபம் ஏற்றி, வீட்டை அலங்கரிக்கலாம். குழந்தைகள் நடமாடும் இடத்தை விட்டு, வீட்டு வாசலில், பால்கனி மற்றும் ஜன்னல்களிலும் விளக்குகளை வைக்கலாம். விளக்கின் ஒளி மட்டும் தெரியும்படி, அழகிய குட்டி குட்டி பித்தளை பாத்திரங்களிலோ, கண்ணாடி பாத்திரங்களிலோ விளக்குகளை உள்ளே வைத்தால், வீடு ஜொலிக்கும்
* தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன், பூஜை அறையை சுத்தப்படுத்தி, விளக்குகளை துலக்கி, தீபாவளி அன்று, பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கலாம்
* வீட்டை சுத்தப்படுத்தி, வாசலில் தோரணங்கள் கட்டும்போதே, வீட்டுக்கு திருவிழா களை வந்துவிடும். மார்க்கெட்டில், விதவிதமான, தொங்கும் அலங்கார பொருட்கள் கிடைக்கின்றன. பழைய மாவிலை தோரணமும் அழகு தான். செயற்கை பூ மாலைகளால் கூட வாசலை அலங்கரிக்கலாம்
* வாசலில் அல்லது ஹாலில், 'டெரகோட்டா' பானைகளை, பூக்களால் அலங்கரிக்கலாம். 'ரூம் ஸ்பிரே' அடித்த பின், பூக்களால் அலங்கரித்தால், கொசு தொல்லை இருக்காது
* பால்கனி சுவர் அல்லது காம்பவுண்ட் சுவர் மீது, சின்ன சின்ன பிளாஸ்டிக் கப்களில், தெர்மாகோல் அல்லது ஸ்பான்ச் அடைத்து, பொக்கேவில் பயன்படுத்தும் இலைகளை சொருகி, அதில் பூக்கள் வைத்து அலங்கரிக்கலாம். கொத்தாகவோ, ஒற்றைப் பூவோ... எல்லா கப்புகளிலும் ஒரே மாதிரி அலங்கரித்து வைத்தால் தான் அழகு வீட்டு தோட்டத்தில் இருக்கும் பூக்களையோ, குறைந்த விலையில் கிடைக்கும் பட்டன் ரோஸ்களை கூட வாங்கி வைக்கலாம். அதன் நடுவே, 'சீரியல் லைட்' போட்டு அழகு படுத்தினால், உங்கள் வீடு அழகாய், தனித்து தெரியும்
* பெரிய தொட்டிகளில் வாழைக் கன்றை விற்கின்றனர். அதை வாங்கி வாசல் ஓரங்களில் வைத்தால், உங்கள் வீட்டுக்கு, 'கிராண்ட் லுக்' வந்து விடும். கூடவே, வாசலில் கோலம் போட்டு, அதில் ஒரு அகல் விளக்கையும் வைத்தால், பார்க்க, தெய்வாம்சமாக இருக்கும்.
