தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குறை கூறினால் கோபம் வருகிறதா?

குறை கூறினால் கோபம் வருகிறதா?

குறை கூறினால் கோபம் வருகிறதா?


PUBLISHED ON : அக் 11, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக

தவறானது.

'நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே... அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா... வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்...' என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, 'அப்படியா சொல்றீங்க?' என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.

'படிக்கட்டுன்னா பார்த்து நடக்க வேணாம்; புது இடமில்ல... வீட்டு படிக்கட்டா இது... ரெண்டு கையிலயுமா இப்படி பொருட்களை வச்சுக்கிறது. அந்தப் பையை தோளில மாட்டிக்கிட்டிருந்தா, படிக்கட்டோட நீள, உயரம் தெரிஞ்சுருக்கும்ல...' என்று எவரேனும் இவரது தவறை சுட்டிக் காட்டினால், 'யோவ்... (டேய்) உன் வேலையை பாத்துக்கிட்டு போவியா... பெரிசா படிக்கட்டு இறங்குறதுக்கு எனக்கு கத்துக்குடுக்க வந்துட்டே...' என்று, தவறை சுட்டிக்காட்டியவருக்கே, பதிலடி கொடுக்கவே நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்.

நம் தவறை பிறர் சுட்டிக்காட்டும் போது, அதை, 'ஆமா... நீங்க சொன்னது ரொம்ப சரி...' என்று ஒப்புக் கொள்ள முன் வர வேண்டும். இதன்மூலம், இரு நன்மைகள் நிகழ்கின்றன.

'முதலாவது, நம் மனம், நமக்குள் சென்று, 'இனி பார்த்து நட... அலட்சியத்திற்கும், கவனக்குறைவிற்கும் விலை மிக அதிகம்; பல்லாயிரம் ரூபாய் செலவும், பல மாதப் படுக்கையும் நிகழ்ந்திருக்கும்...' என்று உணர்த்துகிற போது, அது ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிகிறது; இது, அடுத்தமுறை படிக்கட்டில் இறங்கும் போது பயன்படும்.

இரண்டாவது, 'என்னைப் பார்த்து எவனாவது வாயை திறந்தீங்க... அப்புறம் நடக்கிறதே வேற...' என்கிற எச்சரிக்கை மணியை, எவர் முன்னும் அடிக்காத காரணத்தால், 'பார்த்துப் போங்க; ஒரே சகதி...' என்று சொல்ல பலரும் முன் வருவர்.

நான் சொல்வது நடக்கிற பாதைக்கு மட்டுமல்ல... வாழ்க்கை பாதைக்கும் சேர்த்து தான். ஆம்... 'நல்லது சொன்னால், இவர் கேட்டுக் கொள்வார். பொருட்படுத்திக் காதில் வாங்கிக் கொள்வார்; செயல்படுத்துவார். நம் அக்கறையை சரி வர புரிந்து கொள்கிறவர்...' என்பன போன்ற நம்பிக்கைகளை மற்றவர்களிடையே உருவாக்கும்.

ஆனால், இவர்களது வாயை, உருட்டல், மிரட்டல்களால் அடைக்கும் போதும், வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் போதும் என்ன நடக்கும் தெரியுமா?

நாம் பாதிப்பு அடையும் வரை பார்த்துக் கொண்டிருந்தபின், 'இந்தாளுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்...' என்று உள்ளுக்குள் மகிழ்கிற கூட்டம் பெருத்துப் போகும்.

நம் முகத்தில் கழுவாமல் விடப்பட்ட சோப்பு நுரையையே, பிறர் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் போது, முதுகின் அழுக்கை யார் தான் சுட்டிக் காட்டுவதாம்?

நான் ஒருமுறை சிக்னல் ஒன்றில் பச்சை விளக்கிற்காக காத்திருந்த போது பக்கத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற பெண்மணி ஒருவர்,

தன் ஹெல்மெட்டில் இருந்த முன் பிளாஸ்டிக் தடுப்பை உயர்த்தி, 'நீங்கள் உங்கள் காரின் பின் கதவை சரியாக சாத்தவில்லை...' என்று சொன்னார். 'மிக்க நன்றி...' என, உடனே மகிழ்ச்சி தெரிவித்தேன்.

ஆனால், நான் கல்லூரி மேடையில் பேசி விட்டுக் கீழே இறங்கிய போது, 'இன்னும் கூட உங்களிடத்தில் எதிர்பார்த்தேன்...' என்று ஒரு பேராசிரியை கூறியதும், என் முகம் சுருங்கி விட்டது.

என் கோணத்தில் அது நல்ல பேச்சாக இருக்கலாம். ஆனால், அது சென்று அடைந்தவர்களை திருப்திப்படுத்தவில்லை என்கிற போது, எங்கே கோளாறு நிகழ்ந்திருக்கிறது என்று நான் பரிசீலித்திருக்க வேண்டும்.

இரு பெண்களும் என் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களே. ஒன்றில், எனக்கு நன்றி தெரிவிக்க தோன்றியது; மற்றதில் ஏனோ தோற்றுப் போனேன். இவருக்குமல்லவா நான் நன்றி தெரிவித்து, என் குறையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்; விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

அடுத்த கல்லூரிக் கூட்டத்தில் பேச, குறிப்புகளை தயார் செய்த போது, அப்பேராசிரியைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, ஒரு தேர்வை சந்திக்கும் மாணவன் போல், என்னை கருதிக் கொண்டேன். இது பலனளித்தது என்பதை, நான் உங்களிடமாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்.

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us