
இந்தி படத்தில் விக்ரம்!
விக்ரம் நடித்த, ராவணன் மற்றும் டேவிட் ஆகிய படங்கள் தமிழ் மற்றும் இந்தி என, இரு மொழிகளிலும் தயாரானது. இந்நிலையில், தற்போது, மராத்திய மன்னன் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்திப் படத்தில் நடிக்கிறார், விக்ரம். இப்படத்துக்காக, தன் பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றப் போவதாக கூறுபவர், தற்போது, தமிழில் நடித்து வரும், மர்ம மனிதன் மற்றும் கருடா படங்களை முடித்தபின், இந்த ஆண்டு இறுதியில், இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.
— சினிமா பொன்னையா
சிங்கம் - 3 படத்தில் இந்தி வில்லன்!
சிங்கம் மற்றும் சிங்கம் - 2 படங்களை இயக்கிய ஹரி, தற்போது, சிங்கம் - 3 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். மேலும், 'படத்தை இந்திய அளவில் வெளியிட வேண்டும்...' என்று திட்டமிட்டுள்ள ஹரி, பிரபல இந்தி வில்லன் நடிகர் சரத் சக்சேனாவை இப்படத்தில் முக்கிய வில்லனாக்கியுள்ளார். இந்த சரத் சக்சேனா, விஜயகாந்த் நடித்த, நரசிம்மா படத்தில், வில்லனாக நடித்தவர்.
— சி.பொ.,
சமந்தாவுக்கு ஷாக் கொடுத்த நடிகை!
தெலுங்கு சினிமாவில், சமந்தாவின் ஆதிக்கம் குறைந்து விட்டதால், அவரது இடத்தை, ராகுல் ப்ரீத் சிங் கேட்ச் செய்து, 'ஷாக்' கொடுத்து விட்டார். இதனால், செம டென்ஷனில் இருக்கும் சமந்தா, முன்னணி கதாநாயகர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தி, படங்களை இழுத்து வருகிறார். அத்துடன், தயாரிப்பாளர்களை கவரும் நோக்கில், தன் படக்கூலியையும், கணிசமாக குறைத்துள்ளார். ஆகாச வல்லிடி அதிர இடித்தது!
— எலீசா
மூன்று, 'கெட்டப்'பில் தனுஷ்!
அனேகன் படத்தில், சில, 'கெட்டப்'புகளில் நடித்த தனுஷ், அடுத்தபடியாக, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கயிருக்கும், வடசென்னை படத்தில், சிறுவன், இளைஞன், மெச்சூரிட்டியானவர் என மூன்று, 'கெட்டப்'புகளில் நடிக்கிறார். இப்படத்திற்காக, தன், 'கெட்டப்' மட்டுமின்றி, பாடி மேனரிசத்தையும் மாற்றி நடிக்கும் தனுஷ் கொடி படத்தில் நடித்தபடியே, வடசென்னை படத்திற்கான, 'ரிகர்சல்' பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
- சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
சுள்ளான் நடிகருடன் இரண்டெழுத்து படத்தில் நடித்த அகர்வால் நடிகை, அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகயிருப்பதை கேள்விப்பட்டு அப்படத்திலும் தனக்கு வாய்ப்பு தருமாறு கல்லெறிந்து வருகிறார். அது மட்டுமின்றி, இதுவரை, நள்ளிரவு பார்ட்டிகளுக்கு, 'விசிட்' அடிக்காமல் இருந்து வந்த நடிகை, மேற்படி நடிகரின் அழைப்புக்கு இணங்க, சமீபத்தில் அவர் கொடுத்த பார்ட்டியில், மப்பு குளத்தில் இறங்கி, நடிகரை குஷிபடுத்த, செம குத்தாட்டமும் போட்டுள்ளார்.
நீலாம்பரி நடிகையை அம்மா வேடங்களில் நடிக்க வைக்க, சில இயக்குனர்கள் துரத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு பிடிகொடுக்காமல் நழுவி வரும் நடிகை, 'வயதான நரைமுடி நடிகைகள் எத்தனையோ பேர் இருக்க, சின்ன வயசு நடிகையான என்னை அம்மாவாக நடிக்க கேட்கிறீர்களே... இது நியாயமா...' என்கிறார். அதைக் கேட்டு, 'அரை கிழம் வயதாகி விட்ட போதும் இன்னும் டீன் - ஏஜ் ஞாபகத்தில் இருக்கிறாரே நடிகை...' என்று புலம்பி வருகின்றனர் இயக்குனர்கள்.
தாரா நடிகையிடம் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் நச்சரிப்பது அதிகரித்து விட்டது. அதனால், திடீரென்று, தன் மொபைல் எண்ணை மாற்றி ரகசியமாக வைத்திருக்கும் நடிகை, முன்னணி பட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே, அந்த எண்ணை கொடுத்து, தேவைப்படும் போது தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால், பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள், மேற்படி நடிகை மீது செம காண்டில் உள்ளனர்.
சினி துளிகள்!
* நயன்தாராவின் படக்கூலி, இரண்டு கோடியில் இருந்து, மூன்று கோடியாக உயர்ந்து நிற்கிறது.
* விக்ரமுடன் நடிக்கயிருந்த, மர்ம மனிதன் படவாய்ப்பு நழுவிப் போனதால், செம கடுப்பில் இருக்கிறார் காஜல் அகர்வால்.
* பாகுபலி படத்தை போலவே, அதன் இரண்டாம் பாகத்திலும் ரம்யாகிருஷ்ணனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் உள்ளன.
அவ்ளோதான்!

