PUBLISHED ON : ஜன 08, 2017

ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் அமீர்கான்!
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், 2.0 படத்தில், வில்லனாக நடித்து வருகிறார், இந்தி நடிகர், அக் ஷய்குமார். இதையடுத்து, இந்தி நடிகரான அமீர்கானுக்கும், ரஜினியுடன் இணைந்து, தமிழ்ப்படத்தில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், ரஜினியை விட சிறிய வேடம் கிடைத்தாலும், அவருடன் நடிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
- சினிமா பொன்னையா
கமர்ஷியல் இயக்குனர்களை துரத்தும், மும்பை நடிகை!
மும்பையில் இருந்து தமிழுக்கு வந்த, ஜோதிகா மற்றும் சிம்ரனை தொடர்ந்து, தமன்னா மற்றும் ஹன்சிகா போன்றோரும், கோலிவுட்டில், கோலோச்சி வரும் நிலையில், இன்னொரு மும்பை நடிகையான, சிருஷ்டி டாங்கேவும், வேகமாக வளர்ந்து வருகிறார். அத்துடன், மும்பை நடிகைகளுக்கு, கவர்ச்சியே பிரதானம் என்பதால், கமர்ஷியல் கதைகளில் நடித்து, 'டாப்' நடிகையாகி விட வேண்டும் என்று, சில கமர்ஷியல் பட இயக்குனர்களின் அலுவலக கதவுகளை, தொடர்ந்து தட்டி வருகிறார். அடுத்து அடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்!
- எலீசா
அரவிந்த்சாமியுடன் மோதும் த்ரிஷா!
கொடி படத்திலிருந்து அதிரடி நாயகியாக உருவெடுத்துள்ள த்ரிஷா, அடுத்தபடியாக, அரவிந்த்சாமியுடன், சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், எதிரும், புதிருமான வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறுகின்றனர் என்பது தான், படம். அவ்வகையில், அவர்களுக்கிடையே ஆக் ஷன் காட்சியும் இருப்பதாக கூறப்படுகிறது.
- சி.பொ.,
விக்ரம் படத்துக்காக போட்டா போட்டி!
சிம்புவின், வாலு படத்தை இயக்கிய, விஜயசந்தர் இயக்கும் புதிய படத்தில், நாயகனாக நடிக்கிறார், விக்ரம். இப்படத்தில் நடிக்க, பிரேமம் படத்தில் நடித்த, சாய் பல்லவி தான், முதலில் கதை கேட்டார். ஆனால், தற்போது, மஞ்சிமா மோகனும், அப்படத்தில் நடிக்க, தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதனால், இரு நடிகைகளும் போட்டி போட்டு, சம்பளத்தை குறைத்து, விக்ரம் படத்தை கைப்பற்ற, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- சிபொ.,
மாதவனை இயக்கும், சற்குணம்!
களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அப்படத்தின், இரண்டாம் பாகத்தை, மீண்டும் விமலை வைத்தே இயக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதை மறுத்துள்ள, சற்குணம், 'மாதவன் நடிப்பில் தான், ஒரு படம் இயக்குகிறேன்; அதோடு, அப்படம், களவாணி படத்தில் இருந்து, முற்றிலும், மாறுபட்ட கதையில் உருவாகிறது...' என்று, விளக்கம் அளித்துள்ளார்.
- சி.பொ.,
பிரபல நடிகைகளை தவிர்க்கும் விஜய் ஆண்டனி!
பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பின், விஜய் ஆண்டனி நடித்த, சைத்தான் படமும் வெற்றி பெற்றதால், அவரது, எமன் படம், பிரமாண்டமாக தயாராகிறது. மேலும், வளர்ந்து வரும் கதாநாயகர்கள், நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டும் நிலையில், விஜய் ஆண்டனியோ, தன் படங்களில் நடிக்க, விருப்பம் தெரிவிக்கும் முன்னணி நடிகைகளிடம், 'என் படங்களை பொறுத்தவரை, என்னை சுற்றியே, கதை பின்னப்பட்டிருக்கும்; அதனால், உங்கள் திறமைக்கு, தீனி கிடைக்காது...' என்று, நாசூக்காக சொல்லி, அவர்களை தவிர்த்து விடுகிறார்.
- சினிமா பொன்னையா.
கறுப்பு பூனை!
பால் நடிகை, சுதந்திர பறவையாகி விட்டதோடு, அவ்வப்போது, கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதால், அவர் மீது, கோலிவுட் இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்களுக்கு ஈர்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மேல்தட்டு நடிகர்கள், அம்மணிக்கு நேரடியாக, சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளதால், நடிகையின் மார்க்கெட், கண்டபடி எகிற துவங்கியுள்ளது.
குஜராத் நடிகையின் மறுபிரவேசத்திற்கு, எதிர்பார்த்தபடி, வரவேற்பு கிடைக்கவில்லை. உடல் கட்டை, 'ஸ்லிம்' செய்தால், தன்னை, திரையுலகினர் மொய்த்துக் கொள்வார் என்ற நடிகையின் நம்பிக்கை, வீணாகி விட்டது. அதனால், மனசொடிந்து போயிருக்கும் நடிகை, 'சில மேல்தட்டு நடிகைகளை போன்று, 'வீக் என்ட் பார்ட்டி'கள் மூலம், நடிகர்களை கவிழ்த்தால் தான், மறுபிரவேசத்தில் ஜெயிக்க முடியும்...' என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
சினி துளிகள்!
* வடிவுடையான் இயக்கியுள்ள, பொட்டு படத்தில், அகோரி வேடத்தில் நடித்துள்ளார் நமீதா.
* திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் முதல் பாகத்தில், சோனியா அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமலாபால்.
அவ்ளோதான்!
