PUBLISHED ON : ஜூன் 18, 2017

ராஜமவுலி படத்தில், ரன்வீர் சிங்!
திரைக்கு வந்த பத்தே நாட்களில், ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த, பாகுபலி - 2 படத்தை இயக்கிய, ராஜமவுலி, அடுத்தபடியாக, இந்தி நடிகர், ரன்வீர் சிங்கை வைத்து, ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார். ரன்வீர் சிங் நடித்த சில படங்கள், தன்னை அதிகம் பாதித்ததாக சொல்லும், ராஜமவுலி, அவரை வைத்து இயக்கும் படத்தை, இந்திய கலாசாரம் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் இயக்கப் போவதாக கூறுகிறார்.
—சி.பொ.,
போலீஸ் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்!
விக்ரம் நடித்த, சாமி படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் தயாராக உள்ளது. இதில், இருவேடங்களில் நடிக்கிறார், விக்ரம். முதல் பாகத்தில் நடித்த, விக்ரம், த்ரிஷா இருவரும், பெற்றோராக நடிக்க, அவர்களின் மகனாக, நடிக்கும் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ். இப்படத்தில், அவர், பெண் போலீசாக நடிக்க இருப்பதால், 'ஜிம்னாஸ்டிக்' சென்று, பாடி லாங்குவேஜை மாற்றப் போவதாக கூறுகிறார். ஆட்டத்துக்கு தகுந்த மேளம்; மேளத்துக்கு தகுந்த ஆட்டம்!
— எலீசா
வில்லி வேடத்தில் ஸ்ரேயா!
துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அடுத்து இயக்கும் படம், நரகாசுரன். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், வில்லியாக நடிக்கிறார், ஸ்ரேயா. முதலில், வில்லி வேடம் என்றதும் தயங்கிய ஸ்ரேயாவிடம், அவருக்கு படத்தில், எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை, 'சீன் பை சீன்' இயக்குனர் சொன்னதை அடுத்து, 'டபுள்' ஓ.கே., சொல்லி, ஒப்பந்தமாகி உள்ளார். பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்!
— எலீசா
தேவசேனாவாக கார்த்திகா!
தமிழில், புறம்போக்கு உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், மாஜி நடிகை, ராதாவின் மூத்த மகள், கார்த்திகா. அதன்பின், பட வாய்ப்பில்லாமல், ஹிந்திக்கு சென்ற அவர், தற்போது, ஆரம்ப் என்ற ஹிந்தி, 'டிவி' நாடகத்தில், தேவசேனா என்ற வேடத்தில் நடித்து வருகிறார். திராவிட பாரம்பரியத்தில் வந்த வீரமங்கை இளவரசியாக, இந்த தேவசேனா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பதால், கார்த்திகாவுக்கு பெரிய பெயரை வாங்கி கொடுத்துள்ளது. பட்ட பாட்டுக்கு பலன் கைமேலே!
— எலீசா.
ரஜினி, மம்மூட்டியிடம் பேச்சு வார்த்தை!
சுமார், 25 ஆண்டுகளுக்கு முன், ரஜினி மற்றும் மம்மூட்டியை வைத்து, மணிரத்னம் இயக்கிய படம், தளபதி. அதன்பின், அவர்களை வைத்து, படம் இயக்காத அவர், மீண்டும் ஒரு படத்தை, பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கியுள்ள மணிரத்னம், இருவரிடமும் அது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
—சி.பொ.,
கறுப்பு பூனை!
* மார்க்கெட் டல்லடிப்பதால், படக் கூலியை, கணிசமான அளவு குறைத்துள்ளார், பையா நடிகை. ஆனால், இவ்விஷயம் வெளியில் கசிந்தால்,
எஞ்சியிருக்கும் மார்க்கெட்டும், மண்ணை கவ்வி விடும் என்பதால், தனக்கு பட வாய்ப்பு கொடுத்துள்ள தயாரிப்பாளர்களிடம், 'தான் சம்பளத்தை குறைத்திருக்கும் விஷயத்தை, வெளியில் சொல்ல வேண்டாம்...' என்று, கேட்டுள்ளார்.
* தாய்மொழியான கன்னடத்தில், தன்னை காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க சொல்வதாக சொல்லி, மீண்டும் கோடம்பாக்கத்தில் தஞ்சமடைந்துள்ளார், சகுனி நடிகை. மேலும், தற்போது, பாணா காத்தாடி நடிகருடன், ஒரு படத்தில் நடிப்பவர், அவருடன், ரகசிய நட்பு வளர்த்து வருகிறார். இதனால், அடுத்தடுத்து தான் நடிக்கும் புதிய படங்களில், அம்மணிக்கு, நேரடியாகவே சிபாரிசு செய்து வருகிறார், நடிகர்.
சினி துளிகள்!
* விக்ரமுடன் நடிக்கும், ஸ்கெட்ச் படத்தில், ஹோம்லியான வேடத்தில் நடிக்கிறார், தமன்னா.
* அதர்வா நடிக்கும், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார், ப்ரணிதா.
அவ்ளோதான்!
