PUBLISHED ON : பிப் 04, 2018

ராஜமவுலியின், 'மல்டி ஹீரோ' படம்!
பாகுபலி - 2 படத்தை, 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய ராஜமவுலி, அடுத்தபடியாக, ஜூனியர் என்.டி.ஆர்., மற்றும் ராம் சரண் தேஜாவை வைத்து, ஒரு மல்டி ஹீரோ படம் இயக்குகிறார். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என, நான்கு மொழிகளில் தயாராகிறது, இப்படம். மேலும், சில தமிழ், மலையாள நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க, பேசி வருகிறார்.
— சினிமா பொன்னையா
புடவையில் அசத்திய ஸ்ரேயா!
சிம்புவுடன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த பின், தெலுங்கில், காயத்ரி என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. இப்படத்தில், குடும்ப பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்ணாக, படம் முழுக்க புடவை கெட்டப்பில் நடித்துள்ளார். அதற்காக, தன் உடல் எடையை குறைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியான நிலையில், ஸ்ரேயாவுக்கு மீண்டும் இளவட்ட ரசிகர்கள் மத்தியில், மவுசு அதிகரித்துள்ளது. கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க படல்!
— எலீசா
சீயான் பாணிக்கு மாறும் பூர்ணா!
சில நடிகைகள், தங்கள் திருமணத்திற்கு பிறகே, அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பர். ஆனால், பூர்ணாவோ திருமணத்திற்கு முன்பே, சவரக்கத்தி படத்தில், சிறு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார். அத்துடன், கொடிவீரன் படத்தில், வில்லியாக நடித்துள்ளவர், அப்படத்திற்காக, தலையை மொட்டையடித்து நடித்தார். மேலும், சீயான் விக்ரம் பாணியில், கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஏற்ப உடலை வருத்தி நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறுகிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா
சாய்பல்லவி போடும் கண்டிஷன்!
பிரேமம், பிடா மற்றும் எம்.சி.ஏ., படங்களை தொடர்ந்து, கரு படம் மூலம் தமிழுக்கு வருகிறார், சாய்பல்லவி. அதையடுத்து, தனுஷின், மாரி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் அவர், 'கதாநாயகர்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன். அவர்களுக்கு இணையாக எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும்...' என்ற கண்டிஷன்களை முன் வைத்தே படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கையில் உள்ள களாப்பழம், மரத்திலுள்ள பலாப் பழத்துக்கு மேல்!
— எலீசா
ஜெய்யின் ஜிமிக்கி கம்மல்!
மலையாளத்தில், பிரபலமான, 'ஜிமிக்கி கம்மல்...' பாடலுக்கு இசையமைத்தவர், ஷான் ரஹ்மான். இவர், தற்போது, தமிழில் ஜெய் நடிக்கும், மாங்கல்யம் தந்துனானே என்ற படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில், 'ஜிமிக்கி கம்மல்' பாணியில், ஒரு பாடல் இடம் பெறுகிறது. அப்பாடலுக்கு, பல ட்யூன்களை போட்டுக் கொடுக்க, அதில் ஒன்றை, ஓ.கே., செய்திருக்கின்றனர். தமிழில் இன்னொரு, 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாட தயாராகிறார், ஜெய்.
— சினிமா பொன்னையா
சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் படம்!
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், சிவகார்த்திகேயன். இதுவரை, இவர் நடித்த படங்களுக்கு, டி.இமான், அனிருத் போன்றோர் தான் இசையமைத்து வந்தனர். இந்நிலையில், சீமத்துரை படத்தை அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும், சயின்ஸ்பிக் ஷன் கதையில் நடிக்கிறார். இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதையடுத்து, 'இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது; அதோடு, என் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன்...' என்கிறார் சிவகார்த்திகேயன்.
— சி.பொ.,
கறுப்பு பூனை!
படையப்பா நடிகையின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதிலும், சில படப்பிடிப்பு தளங்களில் அவருக்கான மரியாதை குறைவாக இருந்து வருகிறதாம். அதனால், கடுப்பான நடிகை, 'நான் மாஜி கதாநாயகி தான்; ஆனால், மார்க்கெட்டில் மவுசு உள்ள நடிகை. அதனால், எனக்கும் கதாநாயகர்களுக்கு இணையான கவனிப்பு இருக்க வேண்டும். அதில் ஏதேனும் குறை இருந்தால், வீட்டிற்கு போய் விடுவேன்...' என்று தயாரிப்பாளர்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் இயக்குனர், தன் கேரக்டரை, 'டம்மி' பண்ணி விட்டதாக புகார் அளித்திருந்தார், சினேகமான நடிகை. அதன் காரணமாக, அடுத்தபடியாக அவரை, 'புக்' பண்ணயிருந்த சில இயக்குனர்கள் பின் வாங்கி விட்டனர். விஷயமறிந்த நடிகை, அதிர்ச்சியடைந்து, 'இனிமேல் யாரையும் குறை சொல்ல மாட்டேன்...' என்று ஜகா வாங்கி, அந்த இயக்குனர்களுக்கு மீண்டும் மீண்டும் போன் செய்து, வாய்ப்பு கேட்டு வருகிறார்.
சினி துளிகள்!
* சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், புதிய,'டிவி' சீரியல்களில் நடிப்பதை தவிர்க்கிறார், ரம்யா கிருஷ்ணன்.
* முனிரத்ன குருஷேத்ரா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார், சினேகா.
* தமிழில், பட வாய்ப்புகள் இல்லாததால், தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா.
* கொடி வீரன் படத்தை அடுத்து, ஐங்கரன் என்ற படத்தில் நடிக்கிறார், மகிமா நம்பியார்.
* நாடோடிகள் 2 படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார், அஞ்சலி.
அவ்ளோதான்!
