PUBLISHED ON : ஏப் 08, 2018

காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கும், நடிகை நயன்தாரா, தன் காதலர் இயக்கிய, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது, ஒரு படத்தில், விக்னேஷ் சிவனை கதாநாயகனாக்கி, அவருக்கு ஜோடியாக நடிப்பதுடன், அப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சமீபகாலமாக, கதையின் நாயகியாகி, 'ரொமான்ஸ்' செய்வதை குறைத்து வந்த நயன்தாரா, காதலருக்காக, இப்படத்தில் மீண்டும், 'ரொமான்டிக்' நாயகியாக களமிறங்குகிறார்.
— சினிமா பென்னையா
அஞ்சலியின் ஆசை!
பேரன்பு, நாடோடிகள் 2 மற்றும் காளி ஆகிய படங்களில் நடித்து வரும் அஞ்சலி, 'கதாபாத்திரங்களுக்கு ஏற்ப, பாடிலாங்குவேஜை மாற்றி, எடை குறைத்து நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அத்துடன், இதற்கு முன், நான் கத்துக்குட்டி நடிகை; ஆனால், இப்போது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டேன். அதனால், வழக்கத்திலிருந்து மாறுபட்ட நடிகையாக என்னை வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன்...' என்று கூறி, தற்போது நடித்து வரும் படங்களில் கவர்ச்சி கதவுகளை இழுத்து மூடியுள்ளார். காலத்துக்கு ஏற்ற கோலம்!
— எலீசா
தமிழில் பின்னணி பாடிய பாலிவுட் நடிகை!
சிம்பு - நயன்தாரா நடித்த, இது நம்ம ஆளு படத்தில், 'மாமா வெயிட்டிங்...' என்ற பாடலுக்கு, சிம்புவுடன் குத்தாட்டமாடியவர், பாலிவுட் நடிகை, அடா ஷர்மா. இவர், தற்போது, பிரபுதேவா நடித்து வரும், சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடிக்கிறார்.அத்துடன், பின்னணி பாடுவதில் ஆர்வம் கொண்ட அவர், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். தமிழ் தெரியாது என்றபோதும், டியூனையும், பாடல் வார்த்தைகளையும் பயிற்சி எடுத்து பாடியுள்ளார். கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க பாடல்!
— எலீசா
உஷார் நடிகை ராகுல்பிரீத் சிங்!
நடிகை ராகுல்பிரீத் சிங், தற்போது, ஐதராபாத் நகரில், நவீன உடற்பயிற்சி கூடம் ஒன்றை திறந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், 'சினிமா தொழில் நிலையானதல்ல... நடிகையரை பொறுத்தவரை, இளமை போனதும், ஓரங்கட்டி விடுவர். அதனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த உடற்பயிற்சி கூடத்தை, திறந்துள்ளேன். அடுத்தபடியாக, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் இதன் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.
— எலீசா.
கறுப்பு பூனை!
மகனை தமிழில் அறிமுகம் செய்துள்ள, நான்கெழுத்து மலையாள நடிகர், தன் மகன் நடித்த முதல் படமே தோல்வியடைந்து விட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனால், மகனின் எதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்று, சமீபத்தில் ஒரு மலையாள மாந்திரீகரிடம், சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.
கணவரை விவாகரத்து செய்த பின், கேரளத்து பால் நடிகையின் இமேஜ் ரொம்பவே, 'டேமேஜ்' ஆகிவிட்டது. குறிப்பாக, சில இளவட்ட நடிகர்களின் அந்தரங்க தோழியாக உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து, மேற்படி நடிகர்களின் வீடுகளில் நடிகையை சந்திக்க தடைச் சட்டம் பிறப்பித்துள்ளனர். அத்துடன், அந்த நடிகையுடன் நடிக்கக் கூடாது என்று சில நடிகர்களின் வீடுகளில் தடை போட்டு விட்டனர். இதனால், அதிர்ச்சியான நடிகை, இனிமேல் அந்தரங்க சந்திப்புகளை நிறுத்தினால் தான் கோலிவுட்டில் கோலோச்ச முடியும் என்பதால், இப்போது, ரொம்ப நல்லவராக தன்னை வெளி உலகத்துக்கு காட்டிக்கொள்ளும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
புன்னகை இளவரசி நடிகையை, மெரினா நடிகர் படத்தில், மெகா ரோல் என்று சொல்லி, டம்மி பண்ணி விட்டதால், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார். அதன் காரணமாக, இயக்குனர்கள் யாராவது அவரை நடிக்க அழைத்தால், 'மொத்த சீன் பேப்பரையும் என்னிடம் தரவேண்டும்; அதில், எனக்கு தரப்படும் காட்சிகளை சொன்னபடி படமாக்குவதோடு, படம் வெளியாகும் போதும், அந்த காட்சிகள் படத்தில் இருக்கும் என்ற உத்தரவாதம் தரவேண்டும்...' என்று பாண்டு பேப்பரை எடுத்து நீட்டுகிறார். அதைக்கேட்டு, 'இது என்ன புதுக்கதையா இருக்கு...' என்று அதிர்ச்சியடைந்துள்ளனர், இயக்குனர்கள்.
சினி துளிகள்!
* மீன் குழம்பும் மண் பானையும் படத்தை அடுத்து, பூ மரம் என்ற படத்தில் நடித்து வருகிறார், ஜெயராமின் மகன், காளிதாஸ்.
* அதோ அந்த பறவை போல என்ற படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார், அமலாபால்.
* அக்கா, அண்ணி வேடங்களை தவிர்க்கும் நடிகை சினேகா, அழுத்தமான கேரக்டர்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்.
* மேயாத மான் படத்தில், சினிமாவுக்கு வந்த சீரியல் நடிகை, பிரியா பவானிசங்கர், தற்போது, பசங்க பாண்டியராஜ் இயக்கும், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
