PUBLISHED ON : ஜன 30, 2022

மெகா பட்ஜெட் படத்தில், சிவகார்த்திகேயன்!மொபைலில் இருக்கும், 'கேட்ஜெட்ஸ்' வழியாக, 2030ம் ஆண்டுக்கு, டைம் டிராவல் செல்லும் கதையை, சிவகார்த்திகேயனுக்காகவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எழுதினார், விக்னேஷ் சிவன். அந்த கதைக்கு, வி.எப்.எக்ஸ்., தொழில் நுட்பமும் தேவைப்பட்டதால், அந்த படத்தின், 'பட்ஜெட்' எகிறியது. இதனால், அந்த கதையை கிடப்பில் போட்டனர். ஆனால், தான் நடித்த, டாக்டர் படம், 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து, தன் மார்க்கெட்டை உயர்த்தி விட்டதால், அந்த கதையை துாசு தட்டுமாறு, விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார், சிவகார்த்திகேயன். அதில், பாலிவுட் நடிகையை தனக்கு ஜோடியாக்கி, பான் இந்தியா படமாக வெளியிட்டு விடலாம் என்று, களமிறங்க தயாராகி வருகிறார்.சினிமா பொன்னையா
பிரியாணியை, புல் கட்டு கட்டும், த்ரிஷா!சினிமாவில், 19 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும், த்ரிஷா, 38 வயதிலும், 'டீன் - ஏஜ்' பெண்களைப் போன்று உடல் கட்டை, 'சிக்'கென்று வைத்திருக்கிறார். மேலும், சாப்பாட்டு விஷயத்தில் ஓரவஞ்சனை செய்யாமல், பிரியாணி போன்ற அசைவ உணவுகளை வெளுத்துக் கட்டுகிறார். குறிப்பாக, ஐதராபாத் பிரியாணி என்றால், ரெண்டு பிளேட்டை போட்டுத் தாக்குகிறார்.ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பியதும், 'ஜிம்'மிற்கு ஓட்டமாக சென்று, 'ஒர்க் அவுட்'டில் இறங்கி விடுகிறார். இப்படி ஒரு பக்கம் பிடித்த உணவுகளை, 'புல் கட்' கட்டினாலும், எடை போட்டு விடக்கூடாது என்பதிலும், உஷாராக இருக்கிறார். கட்டுத் தறியை விட்டு, மேய்ச்சல் காட்டில் பிடிப்பது போல்!— எலீசா
தர்மசங்கடத்தில், நயன்தாரா!கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த சில படங்கள், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, அதிகப்படியான தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த தகவல் அவரது கவனத்திற்கு வந்ததையடுத்து, சத்தமில்லாமல் தன் சம்பளத்தில் சில கோடிகளை உயர்த்தி விட்டார். இதனால், புதிய படங்களுக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. 'ஓரிரு படம் அதிக தொகைக்கு விற்பனை செய்ததாக சொல்லி சம்பளத்தை உயர்த்தி உள்ளீர்கள். ஆனால், நீங்கள் நடித்த பல படங்கள் தயாரிப்பாளரின் கையை கடித்து உள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?' என்று அவரிடம் அதிரடி கேள்வி எழுப்பி உள்ளனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார். வகை தொகை இல்லாத பேச்சும், புகையிலை இல்லாத பாக்கும் வழ வழா கொழ கொழா!—எலீசா
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, 'ஷாக்' கொடுக்கும், ஆந்திரா வாலாக்கள்!கோலிவுட்டில், 'பர்பாமென்ஸ்' நடிகை என்று பெயர் எடுத்துள்ள, ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது, தமிழில் தன் மார்க்கெட் சறுக்க துவங்கியுள்ளதால், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், தமிழ் இயக்குனர்கள், அவரது திறமைக்கு மதிப்பு கொடுத்துள்ள நிலையில், தெலுங்கு இயக்குனர்களோ, அவரை தோலுரிப்பதிலேயே ஆர்வமாக இருக்கின்றனர். அதையடுத்து, 'என் வீர தீர திறமைகளை சொல்வதற்கு முயற்சிக்கும்போது, கரன்சிகளால் சொல்லி அடித்து, என் வாயை அடைத்து விடுகின்றனர். அதனால், டோலிவுட்டில் அதிரடி கவர்ச்சி நடிகையாக துகிலுரிந்து நிற்கிறேன்...' என்கிறார். வந்த விதி வந்தால், வாய் திறக்க வழி இல்லை!— எலீசா
'நெகடீவ் ரோலில்' அஜீத்குமார்!'பாசிட்டீவ் ஆன வேடங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று, பல நடிகர்கள் தங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு வரும் நிலையில், அஜீத்தோ, அதை சில முறை உடைத்து வெளியே வந்திருக்கிறார். அப்படி அவர், 'நெகடீவ் ரோலில்' நடித்த, மங்காத்தா படம், அவரது கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதோடு, 'நல்லவனாவே நடிச்சு எனக்கு போரடிச்சுப் போச்சு...' என்று வசனம் பேசும் அஜீத், தன், 61வது படத்தில் மீண்டும், 'நெகடீவ் ரோலில்' நடிக்கப் போகிறார். அது, இதுவரை அஜீத்தை திரையில் அவரது ரசிகர்கள் பார்த்திராத அதிரடியான, 'கெட் - அப்'பாக இருக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.சினிமா பொன்னையா
சினி துளிகள்!* ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள, இரவின் நிழல் படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரது குருநாதரான கே.பாக்யராஜ், கதையின் நாயகனாக நடித்துள்ள, 3.6.9 என்ற படம், 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.* ஐதராபாத்தில் நடித்து வந்தபோதும், சென்னையில், தன் வீட்டில் வளர்ந்து வரும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளை பார்ப்பதற்காக, அவ்வப்போது, விமானத்தில் பறந்து வருகிறார், சமந்தா.* நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், சமீப காலமாக, சினிமா, சின்னத்திரைகளில் பிரபலமாக திகழும், இளவட்ட நடிகர் - நடிகையரை தன்னுடன் இணைத்து, புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார், வடிவேலு.
அவ்ளோதான்!
