PUBLISHED ON : ஏப் 17, 2022

கமலின் தேடல்!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது வரை, 'ஹீரோ' ஆக நடித்து வரும் கமலஹாசன்,
தன் ஒவ்வொரு படத்திலும், ஹாலிவுட்டில் பயன்படுத்தும் புது தொழில்நுட்பத்தை, இங்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்.
அந்த வகையில், தற்போது நடித்துள்ள, விக்ரம் படத்தில், ஹாலிவுட் டெக்னாலஜியைப் பயன்படுத்தி, 'ஆக் ஷன்' காட்சிகளில் நடித்திருக்கிறார். இதேபோல், அடுத்து நடிக்கப் போகும் புதிய படத்திற்காக, அமெரிக்கா சென்று, புதிய தொழில்நுட்பத்தை கற்று, அதை, தன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.
பெரும்பாலான நடிகர் - நடிகையர், ஒரு படத்தில் நடித்து முடித்ததும், வெளிநாடுகளுக்கு ஜாலியாக, 'டூர்' செல்கின்றனர். இந்நிலையில், கமலஹாசனோ, ஒரு படத்தில் நடித்து முடித்ததும், அடுத்த படத்திற்காக, புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக, வெளிநாடு சென்று வருகிறார்.
சினிமா பொன்னையா
ராசியானார், ராசி கண்ணா!
கவர்ச்சி கதவுகளை திறந்த பிறகு, ராசியான நடிகையாகி விட்ட, ராசி கண்ணா, தென் மாநில சினிமா மட்டுமின்றி, பாலிவுட் வரை கொடி நாட்டி இருக்கிறார். அதோடு, 'மெகா ஹீரோ'களின் அன்புக்கு பாத்திரமாகி விட்டதால், சில நடிகர்கள், தங்களுக்கான கதை கேட்கும்போதே, ராசி கண்ணாவை சிபாரிசு செய்கின்றனர்.
இதுவரை, இரண்டாம் தட்டு 'ஹீரோ'களுடன் நடித்து வருபவர், அடுத்து மேல்தட்டு, 'ஹீரோ'களின் படங்களை கைப்பற்றி, 'நம்பர் ஒன்' இடத்தை பிடிப்பதற்கு, தீவிரம் காட்டி வருகிறார்.
அதன் காரணமாக, 'பிகினி, லிப் லாக்' என்று, படத்துக்கு படம் அட்டகாசம் செய்ய, தான் தயாராகி விட்டதாக, மெகா பட வாலாக்களுக்கு சுற்றறிக்கை விட்டுள்ளார்.
எலீசா
ஆன்மிக தலங்களுக்கு, 'விசிட்' அடிக்கும் நடிகையர்!
த்ரிஷா, சமந்தா, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பல நடிகையர், சமீபகாலமாக, ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி, 'விசிட்' அடிக்கின்றனர். அதோடு, எந்நேரமும், 'ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்த இந்த நடிகைகள், சமீபகாலமாக, யோகாவில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
அதன் காரணமாக, தமிழ், தெலுங்கு சினிமாவின் பெரும்பாலான நடிகையர், கோவையில் உள்ள ஈஷா மையத்தை நோக்கி படையெடுக்கின்றனர். அங்கு நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மேற்படி நடிகையர், 'இது போன்ற இடங்களுக்கு சென்று வரும்போது, 'பாசிட்டிவ் எனர்ஜி'யும், மனதுக்கு முழு நிம்மதியும் கிடைக்கிறது...' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
— எலீசா
பாகிஸ்தான் ரசிகர்கள்!
விஜய் நடித்து வெளியான, மாஸ்டர் படத்தில், அனிருத் இசையில் இடம்பெற்ற, 'வாத்தி கம்மிங்...' பாடலும், அதற்கு, விஜய் ஆடியிருந்த நடனமும், பாகிஸ்தான் ரசிகர்களாலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அந்த பாடல், தங்களை பெரியளவில், கவர்ந்து விட்டதாக, 'சோஷியல் மீடியா'வில் அப்போது, பாகிஸ்தான் ரசிகர்கள், 'கமென்ட்' கொடுத்தனர்.
அதன் காரணமாகவே, இப்போது, பீஸ்ட் படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத், பாகிஸ்தான் ரசிகர்களை கருத்தில் கொண்டு, 'அரபிக் குத்து...' என்று, ஒரு பாடலை உருவாக்கி இருக்கிறார். இஸ்லாமிய நாடுகளில் ஒலிக்கும் இசைக்கருவிகள் மற்றும் அந்நாட்டு பாடல்களின் சாயலிலேயே இந்த பாடலையும் உருவாக்கியுள்ளார். அதனால், பீஸ்ட் படத்தின், 'அரபிக் குத்து...' பாடலும், தற்போது, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் ரசிகர்களிடத்திலும் வரவேற்பு பெற்று வருகிறது.
சி.பொ.,
ஆர்யாவுக்கு வந்த ஆசை!
தற்போது, தமிழ் சினிமாவிலிருந்து, விஜய், தனுஷ், கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி என, பலரும் நேரடி தெலுங்கு படங்களில் நடித்து வருவதால், ஆர்யாவுக்கும், டோலிவுட்டில் கோலோச்ச வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, தெலுங்கு, 'ஹீரோ'கள் நடித்துள்ள படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்ளும் ஆர்யா, சார்பட்டா பரம்பரை படத்தில், குத்து சண்டை வீரராக தான் நடித்த அதிரடி வீடியோக்களை அங்குள்ள இயக்குனர்களின் பார்வைக்கு வைக்கிறார்.
'எத்தனை, 'ரிஸ்க்'கான, 'ஆக் ஷன்' காட்சிகள் என்றாலும், உயிரைக் கூட துச்சமாக நினைத்து நடிப்பேன். அதனால், எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்கள், டோலிவுட்டையே தெறிக்க விட்டு காட்டுகிறேன்...' என்று, தீவிர படவேட்டை நடத்தி வருகிறார்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* எந்த விழாக்களில் கலந்து கொண்டாலும், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் வாங்கிய, 'காஸ்ட்லி'யான உடைகளை அணிந்து வந்து, அனைவரையும் கவர்ந்து இழுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார், சமந்தா.
* ஜெயம் ரவி, உதயநிதி நடிக்கும் படங்களில்,கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக, பாலா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார்.
அவ்ளோதான்!
