PUBLISHED ON : ஆக 20, 2023

'பில்ட்-அப் சீன்' கேட்கும், சிவகார்த்திகேயன்!
'ரொமான்டிக் ஹீரோ'வாக நடித்து வரும், சிவகார்த்திகேயன், தற்போது, அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளார். காஷ்மீரில் வீர மரணம் அடைந்த, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்தபடியாக, விஜய்,- அஜித் நடிப்பது போன்ற, 'ஆக் ஷன் பார்முலா' கதைகளுக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன் காரணமாக, மேல்தட்டு, 'ஹீரோ'களுக்கான, 'மாஸ்' கதைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் இயக்குனர்களை, தன் பக்கம் திருப்பி வரும் சிவகார்த்திகேயன், தனக்கும், ரஜினி-, விஜய் போன்று, அதிரடியான 'பில்ட் - அப்' கொடுத்து, 'ஓப்பனிங் சீன்' வைக்குமாறு கேட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
பைக் பிரியரான, மாளவிகா மோகனன்!
தற்போது, தங்கலான் படத்தில், விக்ரமுடன் நடித்து வரும், மாளவிகா மோகனன், பைக் ஓட்டுவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாகவே அவுட்டோர்களுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது, வாகனங்கள் அதிகமாக ஓடாத சாலைகளில், ஜெட் வேகத்தில் பைக் ஓட்டி, காண்போரை கதிகலங்க வைக்கிறார். அதோடு இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், உயரமான மலை முகடுகளை பார்த்தாலும், எவ்வளவு துாரமானாலும் நடந்தே, அந்த பகுதியை அடைந்து, விதவிதமான புகைப்படங்களை எடுப்பதில், அதீத ஆர்வம் காட்டி வருகிறார், மாளவிகா.
— எலீசா
தமன்னாவுக்கு, திடீர் ஆசை!
ஜெயிலர் படத்தில், 72 வயது ரஜினியுடன் நடித்தது குறித்து, தமன்னா கூறுகையில், 'எனக்கு தற்போது, 33 வயதாகிறது. என்றாலும், 72 வயதாகும், ரஜினிக்கு ஈடுகொடுத்து என்னால் நடிக்க முடியவில்லை. அதோடு, இப்போதும் ஆக் ஷன் காட்சிகளில் எல்லாம் நடிக்கிறார்.
அந்த வயதில் என்னால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. ரஜினியின் இந்த வேகத்தை பார்த்த பிறகுதான், இப்போது, 72 வயதில், என்னுடன் அவர் குத்தாட்டம் ஆடுவது போன்று, அதே வயதில், நானும் அப்போதைய இளம் 'ஹீரோ'களுடன் குத்தாட்டம் போட வேண்டும் என்று, எனக்குள்ளும் ஆசை ஏற்பட்டுள்ளது...' என்கிறார்.
— எலீசா
வில்லனாக, விக்ரம்!
சமீப காலமாக, விஜய் சேதுபதி, ஆர்யா, எஸ்.ஜே.சூர்யா என, 'ஹீரோ'வாக நடிக்கும் பலரும், வில்லன் அவதாரமும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும், கல்கி 2898 ஏடி என்ற படத்தில், வில்லனாக நடிக்கிறார், கமலஹாசன். அவரைத் தொடர்ந்து தற்போது ரஜினியின், 170வது படத்தில், வில்லனாக உருவெடுக்கிறார், விக்ரம். போலி என்கவுண்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில், ஒரு இன்டர்நேஷனல் குற்றவாளியாக விக்ரம் நடிக்க இருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
வாசனை காமெடியனுக்கு ஜோடியாக, தென்னிந்திய நடிகையர் யாரும் நடிப்பதற்கு உடன்படாததால், தற்போது, படத்துக்கு படம், அவர், பாலிவுட் நடிகையரை இறக்குமதி செய்து வருகிறார். இந்நிலையில், புதிதாக, 'ஹீரோ' அவதாரம் எடுத்துள்ள, புரோட்டா காமெடியனும், 'மெகா ஹீரோயினி'களுக்கு கல்லெறிந்து வருகிறார்.
அதோடு, 'ஹீரோ'கள், 'ஜிம்' பாடியாக இருந்தால்தான், இளவட்ட அம்மணியர் மடங்குவர் என்பதால், தீவிர உடற்பயிற்சி மூலம் தன் உடல் கட்டை தயார் பண்ணி வருகிறார், புரோட்டா காமெடியன். தான் காமெடியனாக நடித்த ஒரு படத்தில், 'ஹீரோயி'னாக நடித்த நடிகைக்கு, தொடர்ந்து துாது விட்டு வந்தார்.
ஆனால், மேற்படி நடிகையோ, 'என்னை கண்டாலே நாலு அடி தள்ளி நின்று பேசக்கூடிய காமெடியன், என்னை கட்டிப்பிடிக்க ஆசைப்படுவதா? அப்படி ஒரு மோசமான நிலை வந்தால், அந்த நிமிடமே சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன்...' என்று, ஆவேச பதில் கொடுத்து, புரோட்டா நடிகரின் மூக்கை உடைத்துள்ளார்.
சினி துளிகள்!
* ஹிந்தியில் தனுஷ் நடித்த, ஷமிதாப் என்ற படத்தை இயக்கிய ஆர்.பால்கி, அடுத்து, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையை, தனுைஷ நாயகனாக வைத்து இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.
* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது, 22வது படத்தில், தெலுங்கில் வெளியான, சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமான, மிர்ணாள் தாக்கூர் நாயகியாக நடிக்கப் போகிறார்.
* ஷாருக்கானுக்கு ஜோடியாக, நயன்தாரா நடித்துள்ள, ஜவான் படம், ஆகஸ்ட் 25ல் வெளியாகும் நிலையில், அதையடுத்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள, இறைவன் படமும் திரைக்கு வர உள்ளது.
* தன்னை முழு, 'ஹீரோ'வாக, ரசிகர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக, தன், 'ஹேர் ஸ்டைல்' மட்டுமின்றி, பாடி லாங்குவேஜையும் பக்காவாக மாற்றி உள்ளார், புரோட்டா சூரி.
அவ்ளோதான்!
