PUBLISHED ON : ஆக 20, 2023

சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம், உலகையே உலுக்கி எடுத்து வருகிறது.
நீண்ட காலமாக நடந்து வரும், ரஷ்யா - உக்ரைன் போர்க்கள கொடுமைகளின் சாட்சியே இந்த காட்சி. உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையில், போரால், கைகளை இழந்து, முகம் சிதைந்த நிலையில் உள்ள இளம் கணவர் ஆண்ட்ரியை, அவரது மனைவி அலினா கட்டிப் பிடித்திருக்கிறார்.
உக்ரைன் ராணுவத்தின், 47வது படைப்பிரிவின் வான் உளவுத்துறை அதிகாரி, ஆண்ட்ரி.
போரில் இறந்த இரண்டு லட்சம் வீரர்களை விட, இவர்களைப் போன்றவர்களின் நிலை தான் மிக மோசம். கை, கால், கண் என, உடலின் பல அவயங்களை இளம் வயதிலேயே இழந்து, மற்றவர்களை சார்ந்து, மருந்து மாத்திரைகளின் தயவால், கொடுமையான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.
ராணுவத்தினர் மட்டுமின்றி, 428 குழந்தைகள் உட்பட, 10 ஆயிரத்து, 769 பேர், போரால் காயம் அடைந்திருப்பதாக, தரவுகள் கூறுகின்றன.
அவர்கள் அத்தனை பேரும் இப்படித்தான், நித்தமும் செத்து பிழைத்துக் கொண்டிருப்பர் என எண்ணும்போது, நெஞ்சம் கலங்குகிறது.
போர் துவங்கி, இரண்டு மாதத்தில் உக்ரைனை பிடித்து விடுவோம் என்று, சவால் விட்ட ரஷ்ய அதிபர் புடின், 17 மாதமாகியும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. மாறாக, தன் சொந்த நாட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளார்; ஆயிரக்கணக்கானோரை அகதிகளாக்கி உள்ளார்; பல நாட்டு மக்களின் பசி, பட்டினிக்கு காரணமாகி இருக்கிறார்.
'மரம் அமைதியை விரும்பினாலும், காற்று விடுவதாய் இல்லை...' என்ற கதையாக இப்போது, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் நேர்முகமாகவும், ரஷ்யாவிற்கு, சீனா உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாகவும் உதவி வருவதால், மனித உயிர்கள் மேலும் மேலும் மலிவாகி வருகிறது.
இரு நாட்டு தலைவர்களின், 'ஈகோ' அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூட தயங்க மாட்டோம் என, அறிவிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.
உணவு, மருத்துவம் என்று, உயிர் வாழ தேவையான விஷயங்களுக்கு கூட, அல்லாடி கொண்டு இருக்கிறது, நாடு. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் பற்றி கவலைப்படக் கூட நேரமில்லை.
பூமி தோன்றிய நாள் முதல், அன்பை விதைத்து வந்தாலும், அறுவடை செய்வது என்னவோ உயிர்களைத் தான் என எண்ணும்போது, கவலை தான் மேலிடுகிறது.
படத்தில் உள்ள பெண்ணின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல், உள்ளம் நடுங்குகிறது.
வியட்நாம் போரை நிறுத்தியது ஒரே ஒரு புகைப்படம்... அது போல, இந்த உக்ரைன் போரையும் இந்தப் படம் நிறுத்துமா?
எல். முருகராஜ்
