PUBLISHED ON : செப் 03, 2023

அரசியல் கதையா, 'நோ!'
சமீபத்தில், ஒரு இளவட்ட இயக்குனர், நிகழ்கால அரசியலை மையமாகக் கொண்ட ஒரு கதையை, ரஜினியிடம் சொன்ன போது, 'அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனபோதும், அரசியலுக்கு வருவதாக இருந்து கடைசி நேரத்தில் என் முடிவை மாற்றிக் கொண்டதால், இனிமேல் நான் அரசியல் கதையில் நடித்தால் அது பெரிதாக, 'ஒர்க் - அவுட்' ஆகாது. மாறாக, 'நிஜ வாழ்க்கையில், அரசியலுக்கு வருவதற்கு பயந்துவிட்ட ரஜினி, சினிமாவில் மட்டும் அரசியல் கதையில், தன் வீரத்தை காட்டி நடிப்பது ஏனோ...' என்று பலரும் கிண்டலும், விமர்சனமும் செய்வர்...' என்று சொல்லி, அந்த கதையில் நடிக்க மறுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
ஷாருக்கானுக்காக கொள்கை முடிவை மாற்றிய நயன்தாரா!
'அஜித்குமாரை போலவே, நான் நடித்த படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன்...' என்று, பிடிவாதமாக இருந்து வந்தார், நயன்தாரா.தற்போது, ஷாருக்கானின், ஜவான் படத்தில், பாலிவுட்டில், 'என்ட்ரி' ஆகி இருப்பதை அடுத்து, அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு, சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக, 'இத்தனை நாளும், நாங்கள் அழைத்தபோது, பிரமோஷனில் கலந்து கொள்ள மறுத்து வந்த, நயன்தாரா, ஷாருக்கான் படத்தின், பிரமோஷன் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்கிறாரா... அப்படி என்றால், இவரை வைத்து, இத்தனை நாளும் படம் எடுத்த நாங்கள் எல்லாம் இளிச்சவாயர்களா?' என்று, அவர் மீது, கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர், கோலிவுட் தயாரிப்பாளர்கள்.
எலீசா
ஜெயம் ரவியை நம்பாத, இயக்குனர்கள்!
மணிரத்னம் இயக்கத்தில் நடித்த, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, அதிரடி, 'ஆக் ஷன் ஹீரோ'வாக உருவெடுக்க வேண்டுமென்று திட்டமிட்ட, ஜெயம் ரவி, சில மேல்தட்டு ஆக் ஷன் பட இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனபோதிலும், அவரை நம்பி, அதிரடியான ஆக் ஷன் கதைகளை படமாக்க, எந்த இயக்குனர்களும் முன் வரவில்லை. அதன் காரணமாகவே, தற்போது மீண்டும், 'ரொமான்டிக்' கலந்த, 'திரில்லர்' கதைகளில் நடிப்பதில் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார், ஜெயம் ரவி.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
ஏற்கனவே மூனுஷா நடிகையுடன், தளபதி நடிகர் நடித்த போது, அடிக்கடி ஓவர் நெருக்கமாகி பத்தி கொண்டனர். இது, நடிகரின் வீட்டு அம்மணிக்கு தெரிந்ததை அடுத்து, 'இனிமேல், அந்த நடிகையுடன் நடிக்கவே கூடாது...' என்று, நிபந்தனை போட்டார். இதனால், கடந்த, 14 ஆண்டுகளாக, மூனுஷா நடிகையுடன், 'டூயட்' பாடாமலிருந்த, தளபதி, தற்போது, அந்த இரண்டெழுத்து படத்தின் மூலம், மீண்டும் கட்டி கலந்தாடி வருகிறார்.
அதோடு, தமிழகத்தில் எந்த மூலையில் தாங்கள் சந்தித்துக் கொண்டாலும் புகை மண்டலம் கிளம்பி விடும் என்பதால், சமீபத்தில், இருவரும், நார்வே நாட்டுக்கு சென்று, ஒரு வாரம் முகாமிட்டு திரும்பி இருக்கின்றனர்.
ஆனால், இதையும் மோப்பம் பிடித்து விட்டாராம், நடிகரின் வீட்டு அம்மணி. இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக, தளபதி வீட்டில், பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.
சினி துளிகள்!
* சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தபோது, 'குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று, ஒரு கோடு போட்டு நடித்து வந்த, வாணி போஜன், அப்படி நடித்த படங்கள் எதுவுமே தனக்கு கை கொடுக்காததால், தற்போது, ஓவர் நைட்டில் தன், 'ரூட்'டை, மாற்றி விட்டார். அதாவது, குளியல் காட்சி, படுக்கையறை காட்சி என, கண்கள் கூசும் அளவுக்கு நடிப்பதற்கு, தான் தயாராக இருப்பதாக, கவர்ச்சி பட இயக்குனர்களுக்கு துாது விட்டுள்ள, வாணி போஜன், தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகையருக்கு, 'டப்' கொடுக்கவும், வரிந்து கட்டி நிற்கிறார்.
* 'குஷி படத்தில் இதுவரை இல்லாத அளவுகக்கு, விஜய தேவர கொண்டாவுக்கும், எனக்கும் இடையே, 'கெமிஸ்ட்ரி ஒர்க் - அவுட்' ஆகியுள்ளது.....' என்கிறார், சமந்தா.
* சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில், 'மாஜி ஹீரோயினி' இஷா கோபிகர், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஏலியன் கதையில் உருவாகியுள்ள இப்படம், தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
* விஜய் நடித்துள்ள, லியோ படத்தை உலகம் எங்கிலும் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த தியேட்டர்களில் உள்ள அகண்ட திரை, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்பதால், இந்த முயற்சியை விஜய் படக் குழு கையில் எடுத்திருக்கிறது.
அவ்ளோதான்!
