PUBLISHED ON : நவ 05, 2023

பாலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தும், ரஜினி!
தற்போது, ரஜினி நடித்து வரும், 170வது படத்தை, ஹிந்தியிலும், 'டப்' செய்து, பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாகவே, இப்படத்தில், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார், ரஜினி.
தன் படம் திரைக்கு வருவதற்கு முன், பாலிவுட்டிலும், பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது, வாழ்த்து தெரிவிக்க துவங்கி இருக்கிறார், ரஜினி.
— சினிமா பொன்னையா
கல்லா கட்டும், தமன்னா!
தென் மாநில சினிமாவில் தமன்னாவுக்கு, பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், தாய் மொழியான ஹிந்தியில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும், விளம்பர படங்களில் நடிப்பதிலும் கவனத்தை திருப்பி இருக்கும், தமன்னா, சில வெளிநாட்டு அழகு சாதன நிறுவனங்களின் துாதுவராகவும் உள்ளார்.
அந்த நிறுவனங்கள் வழங்கும் அழகு சாதனப் பொருட்களை, திரையுலக நடிகர் -- நடிகையரிடம், தன் சார்பில் விற்பனை செய்தும், பெரிய அளவில் தற்போது கல்லாகட்டி வருகிறார்.
-எலீசா
போட்டா போட்டி!
அஜித்தின், விடாமுயற்சி படத்தில், த்ரிஷா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், ரெஜினா, பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும், முக்கிய வேடங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளனர்.
ஆனால், ரெஜினாவை விட தனக்கு சிறிய வேடம் கொடுத்து விட்டால், தன் மார்க்கெட் பாதிக்கும் என்று கருதும், பிரியா பவானி சங்கர், 'த்ரிஷாவுக்கு அடுத்த இரண்டாவது நாயகியாக என்னை வெளிப்படுத்த வேண்டும்...' என்று, அப்பட இயக்குனர் மகிழ் திருமேனியை வலியுறுத்தி வருகிறார்.
தன்னை மூன்றாவது நாயகியாக பின் தள்ளி விடுவரோ என்றெண்ணி, 'என்னை டம்மி பண்ணி விடாதீர்கள்...' என்று, இன்னொரு பக்கம், இயக்குனரை துரத்தி வருகிறார், ரெஜினா.
அஜித் படம் என்ற ஆசையில், என்ன கேரக்டர் என்று கூட கேட்காமல் இப்படத்தில் ஒப்பந்தமான இரண்டு நடிகையருக்கும் இடையே தற்போது அக்கப்போர் நடக்கிறது.
— எலீசா
கோலிவுட்டுக்கு வரும், பாலிவுட் வில்லன்கள்!
தற்போது, தமிழ் சினிமாவில், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜயின், லியோ படத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர், வில்லன் வேடங்களில் நடித்த நிலையில், அடுத்தடுத்து தமிழில் நடிப்பதற்கு, கல் எரிந்து வருகின்றனர்.
இவர்களில், சஞ்சய் தத், அஜித்தின், விடாமுயற்சி படத்தில், வில்லனாகி விட்டார். இப்படி, பாலிவுட் வில்லன்கள் கோலிவுட் சினிமாவை, 'டார்கெட்' செய்துள்ளதால், தமிழ் சினிமாவை நம்பி களமிறங்கி இருக்கும், இங்குள்ள வில்லன்கள், தங்களுக்கான இடம் பறி போய் விடுமோ என்று, அதிர்ச்சியடைந்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
'என் மனைவியுடனான விவாகரத்துக்கு காரணமே, மெரினா நடிகர் தான்...' என்று, சமீபத்தில், அந்த மூன்றெழுத்து இசையமைப்பாளர் பரபரப்பு செய்தி வெளியிட்டது, கோலிவுட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இதனால், மெரினா நடிகர் மீது இருந்த, 'பாசிட்டிவான இமேஜ்' டேமேஜாகி, அவரை, அனைவரும் வில்லனாக பார்க்க துவங்கியுள்ளனர்.
மேலும், 'சகோதரனாக பழகிய ஒருவரின் குடும்பத்துக்குள் புகுந்து, அவரது மனைவியுடன் பழகி, இந்த நடிகர் துரோகம் செய்து விட்டாரே...' என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து, மேற்படி நடிகரின் குடும்பத்திலும், இந்த விவகாரம் புகை மண்டலத்தை கிளப்பி உள்ளது.
'நான் இருக்கும்போது, இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைப்பதா?' என்று, மெரினா நடிகரின் மனைவியும், கொடி பிடித்து நிற்கிறார்.
சினி துளிகள்!
* கடந்த, 1992ல் தமிழகத்தையே உலுக்கிய, வாச்சாத்தி வன்முறை சம்பவத்தை மையமாக வைத்து, ஒரு படம் இயக்குகிறார், நடிகை ரோகினி. இந்த படத்தில், ஜெய்பீம் படத்தில் நடித்த, லிஜோ மோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்.
* சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களுக்கு இசையமைத்த, டி.இமான், 'இனிமேல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்...' என்று தெரிவித்துள்ளார்.
அவ்ளோதானா!
