PUBLISHED ON : ஏப் 08, 2012

'உள்ளே வரலாமா?' என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் <உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து, வந்திருப்பது யார் என்று பார்த்தார்.
நான்கு நாட்களுக்கு முன், அவர் மகள், அகிலாவை பெண் பார்த்து விட்டுச் சென்ற ராஜம் மாமி!
அவசர அவசரமாக, பேப்பரை ட்ரேயின் மீது போட்டு எழுந்த கோபாலன், ''வாங்கம்மா... வாங்க... ஒரு வார்த்தை போன்ல சொல்லியிருந்தா, நானே ஓடி வந்திருப்பேனே,'' என்று அவரை வரவேற்று, வீட்டின் உள்பக்கம் திரும்பி, ''மீனா... யார் வந்திருக்காங்க பாரு,'' என்று குரல் கொடுத்தார்.
சமையலறையில் கைகாரியமாக இருந்த... அவர் மனைவி மீனா என்ற மீனாட்சி, கையை, புடவை தலைப்பில் துடைத்துக் கொண்டு, ''யார் வந்திருக்காங்க...'' என்று ஆவலாக கேட்டுக் கொண்டே வந்தவள், ராஜத்தை பார்த்து. ''சம்பந்தியம்மாவா வாங்க... வாங்க,'' என்று, முகமெல்லாம் சந்தோஷமாக வரவேற்றாள்.
''சம்பந்தி மாமின்னே, தீர்மானம் செஞ்சுட்டிங்களா மாமி,'' என்று சிரித்தபடியே கேட்ட ராஜம், பின்னே திரும்பி, ''பாலா வா...'' என்றாள்.
அப்போது தான் ராஜத்துடன், அவள் பிள்ளை பாலா வந்திருப்பதையும், அவன் சற்றுத் தள்ளி நிற்பதையும், கோபாலனும், மீனாவும் கவனித்தனர்.
அவ்வளவு தான், அவர்களை, மே<லும் சந்தோஷம் பற்றிக் கொண்டது.
''மாப்பிள்ளையும் வந்திருக்காரா... வாங்க மாப்பிள்ளை. நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கிறது, எங்களை சந்தோஷத்திலே திக்குமுக்காட வைச்சுடுச்சு. வாங்க... வாங்க... உட்காருங்க,'' என்றார் கோபாலன்.
''என்னை சம்பந்தின்னும், என் பிள்ளை பாலாவை, உங்கள் மாப்பிள்ளைன்னே முடிவு செஞ்சிட்டீங்களா?'' என்றாள் ராஜம்.
''எங்க பெண், அகிலாவை பெண் பார்த்துவிட்டுப் போயி, நாலு நாள் கழிச்சு, நீங்க ரெண்டு பேருமே எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்களே... எங்க அகிலாவை, உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கலேன்னா மறுபடியும் வந்திருக்க மாட்டீங்களே,'' என்ற மீனா, ''இருங்க... அகிலாவை கூப்பிடறேன்,'' என்று சொல்லிவிட்டு, ''அகிலா... அகிலா...'' என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டினுள் ஓடினாள்.
ராஜமும், அவள் பிள்ளை பாலாவும், சோபாவில் உட்கார்ந்து கொண்டனர். மின் விசிறியை சுழலவிட்டு, அவர்கள் எதிரே உட்கார்ந்தார் கோபாலன்.
அகிலாவை அழைத்து வந்தாள் மீனா. ராஜம், பாலா இருவரையும் பார்த்து, கை கூப்பி வணக்கம் செய்து, ''வாங்க...'' என்றாள் அகிலா.
அப்போது தான் பறித்த பூ போல, எளிமையான உ<டையில், கேசம் கூட கொஞ்சமும் கலையாமல், மிகவும் பிரஷ்ஷாக இருந்த அகிலாவை பார்த்து, ''உட்காருங்க ரெண்டு பேரும்...'' என்றாள் ராஜம்.
''உட்காரவா... பத்து நிமிஷத்திலே ரவா கேசரியும், இட்லியும் செய்துடுறேன். தேங்காய் சட்னி அரைக்கிறேன். எள்ளு மிளகாய்ப் பொடி ரெடியா இருக்கு,'' என்று, சமையலறையினுள் செல்ல முயன்றாள் மீனா.
''அதுக்கெல்லாம் அவசரமில்லை மாமி... நாலு நாளைக்கு முன்னாலே தானே சுவீட்டும், காரமும், போதும் போதுன்னு சாப்பிட்டோம். கொஞ்ச நேரங்கழிச்சு, உங்க கும்பகோணம் டிகிரி காப்பி, அரை டம்ளர் கொடுங்க போதும்... உட்காருங்க முதல்ல... அகிலா நீயும் உட்காரம்மா... உங்கக்கிட்டே கொஞ்சம் பேசணும் நான்...'' என்றாள் ராஜம்.
தயங்கியபடி உட்கார்ந்தாள் மீனா. அவளருகில் உட்கார்ந்த அகிலா, அம்மாவையும், பிள்ளையையும், மாறி மாறிப் பார்த்தாள்.
'என்ன பேசப் போகிறாள் இந்த அம்மா... பெண் பிடிக்கவில்லை என்று சொல்லப் போகிறாளா... அதை சொல்ல, பிள்ளையையும் அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லையே... அவர்கள் இருவரையும் பார்த்தால், அப்படி பேச வந்தவர்கள் மாதிரியும் தெரியவில்லை!'
மீனாவின் முகத்தில், சந்தோஷம் விடை பெற்றிருந்தது. 'என்ன சொல்லப் போகிறார் இந்த மாமி...'
''அன்னைக்கு, நாங்க பெண் பார்க்க வந்தன்னைக்கு, பஜ்ஜி, சொஜ்ஜி, காபி எல்லாம் கொடுத்தீங்க. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் போல இருந்தது.''
''கேட்டிருக்கலாமே மாமி,'' என்றாள் மீனா.
''உங்கள் பெண் அகிலா தான், எல்லாத்தையும் செய்தாள்ன்னு சொன்னீங்க. உப்பு, காரம், தித்திப்பு, நெய், முந்திரி, திராட்சை, டிகாஷன் எல்லாம் தயார் செய்து, அகிலா காபி போட்டாள்ன்னும் öŒõன்னீங்க. ரொம்ப நல்லா இருந்தது. காபி, டிபன் எல்லாம் சூப்பரா செய்றவள், சமையல் செய்தால் நல்லா இருக்கும்ன்னு நெனைச்சுகிட்டோம்...''
''பர்ஸ்ட் சர்டிபிகேட்டே நல்லா இருக்கும்மா,'' என்றார் கோபாலன்.
''பெண் பார்க்க வராங்க என்றதாலே, காஸ்ட்லியா டிரஸ் செஞ்சுக்காம, அகிலா டிரஸ் செஞ்சுக்கிட்டு இருந்தது, எங்க கண்ணுக்கு இதமாக இருந்தது. டிரஸ்சை அவள்தான், 'செலக்ட்' செஞ்சான்னு நீங்க சொன்னீங்க...''
''ஆமாம்... எங்க அகிலாவுக்கு தன் காரியங்களை தானே செஞ்சு கிட்டாதான் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும். கரன்ட் போயிடுச்சுன்னா மெழுகுவர்த்தி ஏத்த, தீப்பெட்டி இருக்கிற இடத்திலே கை வச்சா, அது அங்கே கரெக்டா இருக்கணும்ன்னு கூட சொல்வாள்,'' என்றாள் மீனா.
''வேலைக்கு போறப்போ, தன் பொருட்களை எல்லாம் தானே எடுத்து வச்”ப்பா. கடைசி நேரத்தில எதையும் தேடிகிட்டு, நேரத்தை வீணாக்க மாட்டா. காலையில எழுந்ததுமே மொபைலுக்கு சார்ஜரை போட்டுடுவா. பர்சுலே பணம் போதுமானது இருக்கான்னு பார்ப்பா...
''கர்ச்சிப் எடுத்து வைப்பா... டிபன் பாக்சிலே இருந்து, எதுவும் பேக்ல வழிஞ்சு விழக் கூடாதுன்னு, அதை பிளாஸ்டிக் கவர் போட்டு சுத்தி வைப்பா. வண்டி சாவி, பேக் முன் பைல ரெடியா இருக்கான்னு பார்ப்பா... தேவையான பெட்ரோலை, ரிசர்வுக்கு வர்றதுக்கு முந்தியே போட்டு வைப்பா... சரியா எட்டு நாற்பதுக்கு, வண்டியை ஸ்டார்ட் பண்ணிடுவா ஆபீஸ் போக...
''ஒரு வாரத்துக்கு ஆபீஸ் போக, போட்டுக்க வேண்டிய டிரஸ்சை எல்லாம், சனிக்கிழமை@ய துவச்சு காயப்போட்டு, ஞாயிற்றுக் கிழமை, தானே அயர்ன் செய்து, ரெடியா வைப்பா. ஆபீசுலே எல்லாம், அக்கம் பக்கம் அதிகமா பேச மாட்டா. எல்லார்கிட் டேயும் லிமிட்டா இருப்பா... அதுக்காக <உம்மண்ணா மூஞ்சியா இருக்க மாட்டா...
''சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து வர்றப்போ, தானே காய்கறி வாங்கிட்டு வருவா. ஒரு காய்கறி நாலஞ்சு நாளைக்கு ஒரு முறை தான், டெர்ன்ல வர்றபடி öŒ#துடுவா... தினம் ராத்திரி அவள் தான் சமைப்பா. செவ்வாய், வெள்ளி கோவிலுக்கு போவா...
''பிறந்த நாளைக்கு, ஏழை குழந்தைகளுக்கு டிரஸ் வாங்கி கொடுப்பா. மூணு மாசத்துக்கு ஒரு முறை, என்னையும், அவள் அப்பாவையும் ஏதாவது ஒரு ஊருக்கு கூட்டிட்டு போவா... எல்லாரையும், எல்லாத்தையும் நல்லா ஞாபகம் வச்சுப்பா. ராத்திரி ஒன்பது மணிக்கு தூங்கப் போயிடுவான்னு, நீங்க அகிலாவை பத்தி சொன்னதெல்லாம் தான், உங்ககிட்டே பேச, என்னை இங்கே அழைச்சுக்கிட்டு வந்திருக்கு,'' என்றாள் ராஜம்.
எல்லாரும் அவளையே கண் கொட்டாது பார்த்தனர்.
''அகிலாவுக்கு ஆப்போசிட், என் பிள்ளை பாலா,'' என்ற ராஜம், பிள்ளையைப் பார்த்தாள்.
பாலா தலையை குனிந்து கொண்டான்.
''அவனுக்கு நான் தான் செய்யணும். ஆபீசுக்கு போயிட்டு வர்ற ஒரு காரியத்தை தவிர, வேற ஒண்ணையும் செய்ய மாட்டான். ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டான். பிரஷ்ல பேஸ்ட் கூட நான் எடுத்து வைக்கணும்.
''மொபைல் சார்ஜரை நான் தான் போட்டு வைக்கணும். ஆபீஸ் போறப்போ, டிபன் பாக்ஸ், மணி பர்ஸ், ஐ.டி., கார்டு, ஏ.டி.எம்., கார்டெல்லாம் எடுத்துக்கிட்டானா, வண்டிச் சாவியை எல்லாம் எடுத்துக் கிட்டானான்னு, நான் தான் அவனை கேட்டு எடுத்து வைக்கணும்...
''பேப்பரை படிச்சுட்டு, சோபா மேல பக்கம், பக்கமா போட்டுடுவான்... பேனை, லைட்டை எல்லாம், 'ஆப்' பண்ண மாட்டான். சாப்பிட்ட தட்டை, நான் கழுவி வைக்கணும்... காபி குடிச்ச டம்ளரை தேச்சு வைக்கணும்... அவசர அவசரமா கடைசி நேரத்தில சாப்பிட்டு, ஆபீசுக்கு ஓடுவான்...
''ஆபீஸ் விட்டு வர்றப்போ, ஒரு பைசாவுக்கு ஒண்ணும் வாங்கிட்டு வர மாட்டான்... அழுக்கான டிரஸ்சை, ரெண்டு மூணு நாள்தான் கூட தொடர்ந்து போட்டுக் கொள்வான்... போட்டதை சாப்பிடுவான்... அதை செய், இதை செய்ன்னு கேட்க மாட்டான்...
''காலைல மூஞ்சில தண்ணியை தெளித்துதான், அவனை நான் எழுப்பணும்... வண்டிச் சாவியை, ஆபீஸ் டேபிள் சாவியை, வீட்டுலே எங்கேயாவது வச்சுட்டு, அதை அவன் தேடாத நாளே இல்லை,'' என்று சொல்லிக் கொண்டு வரும் போதே, 'பிள்ளை இப்படி இருக் கிறானே...' என்ற கவலையும், வருத்தமும், வேதனையும் அவள் குரலிலும், முகத்திலும் தெரிந்தது.
''இப்படி எல்லா விஷயத்திலேயும், அகிலாவுக்கு நேர்மாறாக இருக்கிறவன் கூட, அகிலா எப்படி வாழ்வாள் மாமா?'' என்றாள் ராஜம் மாமி.
''உங்கள் பிள்ளை சரியான சோம்பேறின்னு சொல்லுறீங்களா மாமி?'' என்று கேட்டாள் அகிலா.
''பின்னே?'' என்று திருப்பிக் கேட்டாள் ராஜம்.
''உங்கள் பிள்ளைக்கிட்டே நான் கொஞ்சம் பேசலாமா மாமி?'' என்று கேட்டாள் அகிலா.
''நல்லா பேசுங்க...'' என்றாள் ராஜம்.
''நீங்கள் மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?''
''40 ஆயிரம்!''என்றான் பாலா.
''எல்லா பணத்தையும் என்ன செய்வீங்க?''
''அம்மாக்கிட்டே பத்தாயிரம் கொடுப்பேன்... அஞ்சாயிரம் என் செலவுக்கு வச்சுக்குவேன்...'' என்றான் பாலா.
''மிச்ச பணம்?''
''சேவிங்ஸ்...''
''எவ்வளவு வருடமா?''
''அஞ்சாறு வருடமா.''
''அதை என்ன செய்யப் போறீங்க?''
''வீடு, நிலம், தங்கம் ஏதாவது வாங்குவேன்.''
''குட்...'' என்ற அகிலா, ''ஆபீசுக்கு லேட்டா போறதுண்டா?'' என்று கேட்டாள்.
''ஒரு நாள் கூட இல்லை,'' என்றான் பாலா.
''படம் பார்ப்பீர்களா?''
''எப்போதாவது?''
''பாண்டிச்சேரி, பெங்களூரு?''
''போனதே இல்லை,'' என்றான் பாலா.
ராஜத்திடம் திரும்பினாள் அகிலா. ''ஆபீஸ் போவதில், வருவதில், சம்பாதிப்பதில், சேமிப்பதில், கெட்டப் பழக்கம் எதுவும் இல்லாதிருப்பதில், பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதில் எல்லாம், ஒரு ஆண் மகனுக்கு இருக்க வேண்டிய நல்ல எண்ணங்களோடும், குணங்களோடும் இருக்கிறார் <உங்க பிள்ளை,'' என்றாள்.
''வீட்டில் அப்படியெல்லாம் இல்லையேம்மா என் பிள்ளை,'' என்று குறையோடு சொன்னாள் ராஜம்.
''அதுக்கு நீங்கள் தான் காரணம் மாமி,'' என்றாள் அகிலா.
''நானா?'' என்று தன் நெஞ்சில் கை வைத்து கேட்டாள் ராஜம்.
''ஆமாம் மாமி... ஒரே பிள்ளை, அப்பா இல்லாத பிள்ளைன்னு, அவருக்கு தேவையான ஒவ்வொன்றையும், நீங்களே முன் கூட்டியே செய்து வைத்து விடுகிறீர்கள்... தனக்காக, தான் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூட, அவருக்கு நீங்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லை...
''ஆபீசில், பண விஷயத்தில், ஒழுக்கத்தில் சிறப்பாக இருக்கிற ஒருவர், வீட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கான வாய்ப்பை நீங்கள் அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்,'' என்றாள் அகிலா.
''தப்பு எம்மேலத்தான் அகிலா... அவனை கல்யாணம் செய்து, நான் படுகிற கஷ்டங்களை எல்லாம், நீ பட வேண்டா@மன்னு உன்னை கேட்டுக் கொள்ளத்தான் நான் வந்தேன் அகிலா,'' என்றாள் ராஜம் அழாத குறையாக.
''நான் எனக்காக என்னென்ன செய்து கொள்கிறேன்... எப்படியெப்படி எல்லாம் வாழ்கிறேன் என்பதை அருகிலிருந்து பார்க்கும் போது, தானும் அப்படி எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவார் மாமி உங்கள் பிள்ளை,'' என்றாள் அகிலா.
''எப்படி அகிலா சொல்கிறாய்?''
''பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமல்லவா?'' என்றாள் அகிலா.
***
சுகந்தி
