
பாரத பூமி புண்ணிய பூமி. கண்ணில் பட்டவை அனைத்திலும் தெய்வமும், தெய்வீகமும் இருப்பதை, தவ வலிமையால் கண்ட மகரிஷிகள் கூறிய உபதேசங்களின் அடிப்படையில் தான், பாரத சமுதாயம் அமைந்துள்ளது. அத்தகைய தெய்வீக பெருமை, தீபாவளிக்கும் உண்டு.
சூரிய வம்சத்தின் பிரசித்தி பெற்ற மன்னரான சகரன், அசுவமேத யாகம் செய்தான். அப்போது, அந்த குதிரையை தேவேந்திரன் களவாடி சென்று, பாதாள உலகில் தவமிருந்த, கபில மகரிஷி ஆசிரமத்தில் கட்டி விட்டான்.
சகர மன்னனின் புத்திரர்களான ராஜகுமாரர்கள், குதிரையை தேடி பாதாள உலகத்துக்கு சென்று, கபில மகரிஷியின் ஆசிரமத்தில் யாகக் குதிரை இருப்பதை கண்டனர்.
அந்த மகரிஷி தான், குதிரையை களவாடி ஆசிரமத்தில் மறைத்து வைத்துள்ளார் என்று நினைத்து, அவரை துன்புறுத்தினர். கடும் தவத்தில் ஆழ்ந்திருந்த கபில மகரிஷி, கண்களை திறந்து கோபாவேசத்துடன் அவர்களை பார்த்தார்.
அந்த பார்வையின் சக்தியால், சகரபுத்திரர்கள் எரிந்து சாம்பலாயினர். கபில மகரிஷியின் சீற்றத்தால் அகால மரணமடைந்த அந்த ராஜபுத்திரர்கள், சரீரமின்றி நிம்மதி இழந்து, தவித்து அலைந்தனர்.
தேவர்களின் உலகில் பிரவகித்து ஓடும் தேவ கங்கையின் தீர்த்தம், அவர்கள் சாம்பல் மீது பட்டால், தேவசரீரம் பெற்று நற்கதி அடைவர் என, அரச சபையில் இருந்த மகரிஷிகளும், பெரியோர்களும் கூறினர்.
இதனால், தேவ கங்கையை பூவுலகுக்கு கொண்டு வருவதற்கு, சகரன் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
சகரனின் கொள்ளுப் பேரனான பகீரதன், இமயமலைக்கு சென்று, மானஸரோவரின் கரையில் பல ஆண்டுகள் தவம் செய்தான். சிவபெருமானின் எல்லையற்ற கருணையால், தேவ கங்கையை பூவுலகுக்கு கொண்டு வந்து, சகர புத்திரர்களின் சாம்பல் மீது படும்படி செய்தான். அதனால், சகர புத்திரர்கள் அனைவரும் நற்கதியை அடைந்தனர்.
மன்னன் பகீரதனின் கடும் தவத்தால், பூவுலகில் அவதரித்ததால் தேவ கங்கைக்கு, 'பாகீரதி' என்ற பெயரும் ஏற்பட்டது.
இத்தகைய பெருமை பெற்ற கங்கையை நினைத்தாலே, பாவங்கள் அனைத்தும் அந்த வினாடியே பறந்து விடும்.
தெய்வீகப் பெருமையும், சக்தியும் கொண்ட அன்னை கங்காதேவி, தீபாவளி தினத்தன்று எல்லா வீடுகளிலும் எழுந்தருள்கிறாள்.
மக்கள் அனைவரையும் அவரவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவித்து, மங்களங்களையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்து அருள்கிறாள்.
தீபாவளியன்று, விடியற்காலையில் கங்கையை மானசீகமாக பூஜித்து, புனித நீராடினால் நம் துன்பங்கள் மற்றும் பாவங்களில் இருந்து, தாயான அவள், விடுவித்து அருள்புரிவாள்.
இதுவே தீபாவளி தினத்தின் உண்மையான தெய்வீகக் காரணமும், பெருமையும் ஆகும்.
என். செல்வராஜ்
ஆன்மிக தகவல்கள்!
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், வெண்ணெய் உருக்கக் கூடாது. காரணம், மேற்படி கிழமைகள் லட்சுமிக்கு உகந்தவை. மேலும், வெண்ணெயில், மகாலட்சுமி இருப்பதால், உருக்கக் கூடாது என்பர்.

