PUBLISHED ON : ஜூன் 18, 2023

வெற்றிலை கொடியில், கணுக்காலில் வேர் விட்டிருக்கும் சிறு கிளையை ஒடித்து வைத்தாலே, முளைத்து விடும்.
நடுவதற்கு இரு முறைகள் உண்டு. ஒரு டம்ளர் நீரில் அதை நிற்க வைத்து அல்லது சாதாரண மண்ணில் செருகி வைத்து வேர் பிடிக்க விட வேண்டும்.
ஒரு வாரத்தில் நீரில் வைத்தது, வேர் விட்டிருக்கும்; மண்ணில் செருகியதும் இலைகள் வர ஆரம்பிக்கும். அதை எடுத்து செம்மண், மணல், எரு உரம் சேர்ந்த தொட்டியில் நடவு செய்திடுங்கள். தினம் நீர் விட வேண்டிய அவசியம் இல்லை. ஈரப்பதம் இருந்தால் போதும்.
வெற்றிலை கொடி வகையை சேர்ந்ததால், அது படர வழி செய்ய வேண்டும்.
நம் வீட்டில் தொட்டியில் வைக்கும்போது ஊடாக புதினா, மல்லி நடவு செய்யலாம்.
வெற்றிலையை வீட்டில் வளர்ந்தால், அந்த வீடும் செழிப்பாய் இருக்கும் என நம்புகின்றனர்.
ஆன்மிக சம்பிரதாயங்களில் இடம் பிடித்த வெற்றிலை, ஓர் அற்புதமான மூலிகை.
அஜீரண கோளாறை சரி செய்ய வெற்றிலை போட வேண்டும். இலையில் கார்ப்பு தன்மை இருப்பதால், பல உடல் கோளாறுகளை சரி செய்யும். மருத்துவ குணம் கொண்டது, வெற்றிலை.
விஷக்கடிக்கு அடர்நிற வெற்றிலையை மென்று விழுங்கலாம்.
வெற்றிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் குடிப்பது, மலச்சிக்கலை குறைக்கும். இனிப்போடு சேர்த்து பீடாவாக போடும்போது, மன அமைதி கிட்டும். ஒரு வெற்றிலை, ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால், வயிற்று உப்புசம் உடனடியாய் தீரும்.
காரம் - வெற்றிலை, துவர்ப்பு - பாக்கு, கால்சியம் - சுண்ணாம்பு. இந்த மூன்று சுவைகளும் சேரும் போது, பல் உறுதியிலிருந்து, மூக்கு, வயிறு, தலை என, முழு உடல் சம்பந்தப்பட்ட பல சங்கடங்களுக்கு தீர்வாய் அமைகிறது.
ஒரு சின்ன வெற்றிலையில் நீர்சத்து, புரோட்டீன், கொழுப்பு, மினரல், நார்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், பொட்டாசியம் என, இன்னும் நிறைய இருக்கிறது.
வெற்றிலை கஷாயம்:
வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி, நீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விட்டு மிளகு, கிராம்பு, சுக்கு பொடி சேர்க்கவும்.
தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். இந்த கஷாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி குடிக்கவும்.
இதனால், பல நோய்கள் குணமாவதாக, ஆயுர்வேதம் கூறுகிறது.
வீட்டில் வளர்க்கும் மூலிகை செடிகளில் கற்றாழையும் ஒன்று. கசப்பாய் ஆனால், வரமாய் கிடைத்த கற்றாழை வளர்ப்பு பற்றி, அடுத்த வாரம்...
- வளரும்ம.வான்மதி
